ஸ்டாலினுக்கு திறமை இருக்கா.. தைரியம் இருக்கா.. கள்ளக்குறிச்சி பிரபு பொளேர் கேள்வி!
சென்னை: மக்கள் ஆதரவு இல்லாத எடப்பாடி பழனிசாமி ஆட்சியை கவிழ்க்கும் திறமை ஸ்டாலினுக்கு இருக்கிறதா? என்று தினகரன் ஆதரவு எம்எல்ஏவான கள்ளக்குறிச்சி பிரபு கேட்டுள்ளார்.
அதிமுகவில் இருந்து கொண்டே தினகரனுக்கு ஆதரவாக செயல்படுபவர்களில் பிரபுவும் ஒருவர். இவருக்கு சமீபத்தில் சபாநாயகர் தனபால் தகுதி நீக்கம் தொடர்பான நோட்டீஸ் அனுப்பினார். இதற்கு ஸ்டே வாங்கி பிரபு உள்ளிட்ட 3 எம்எல்ஏக்கள் தப்பினர்.
இந்த நிலையில் பிரபு ஒன் இந்தியா தமிழுக்கு ஒரு சிறப்பு பேட்டி அளித்துள்ளார். அதில், மக்கள் ஆதரவை இழந்துவிட்ட எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியை கவிழ்க்க மிகபெரிய தலைவர் கருணாநிதியின் மகன் ஸ்டாலினுக்கு திறமை இருக்கிறதா என்று பிரபு கேட்டுள்ளார்.
உள்ளாட்சி தேர்தலில் எங்களின் வாக்கு சதவீதம் தெரியும்... டிடிவி தினகரன் பேச்சு
பிரபு
கள்ளக்குறிச்சி சட்டபேரவை தொகுதியின் உறுப்பினர் பிரபு. இவர் சசிகலாவின் தீவிர விசுவாசி. உளுந்தூர்பேட்டை சட்டப்பேரவை உறுப்பினர் குமரகுருவுடன் இவருக்கு கருத்து வேறுபாடு உண்டு. இதன் காரணமாக இவர் தினகரனின் ஆதரவாளராக செயல்பட்டு வந்தார். இதனால் பேரவைத் தலைவர் இவருக்கு நோட்டீஸ் வழங்கியுள்ளார். இதற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
நிலை என்ன
தற்போது இடைத் தேர்தல் முடிந்து, அதில் எடப்பாடி பழனிச்சாமி அரசு தப்பியுள்ள நிலையில் பிரபுவிடம் பேசினோம். சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் பேரவையில் வந்தால் உங்கள் நிலை என்ன என்று பிரபுவிடம் ஒன் இந்தியா தமிழுக்காக கேட்டபோது அவர் கூறியதாவது:
கொறடா உத்தரவுப்படி
"நான் தினகரனின் ஆதரவாளர்தான். ஆனாலும் அதிமுக எம்.எல்.எ. ஆதலால் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டால் அதிமுக கொறடா என்ன கூறுகிறாரோ அதன்படிதான் நான் செயல்படுவேன். இது ஜெயலலிதாவால் அமைந்த ஆட்சி. இப்போது இருக்கும் ஆட்சியையும் ஆட்சியாளர்களையும் ஏற்படுத்தியவர் சசிகலா. ஆகவே சசிகலா இந்த ஆட்சியை கலைக்க விரும்ப மாட்டார். ஆகவே அதிமுக கொறடா உத்தரவுப்படியே செயல்படுவேன்" என்று கூறினார்.
சிவி சண்முகம்
நீங்கள் அதிமுகவுக்கு ஆதரவாக செயல்படவேண்டும் என்று அமைச்சர் சி.வி சண்முகம் உங்களிடம் பேசினாரா என்று கேட்டபோது "அவர் எங்கள் மாவட்ட அமைச்சர் எனக்கும் குமாரகுருவுகும் கருத்து வேறுபாடு ஏற்பட்டபோது அவரிடம் உதவி கேட்டு சென்றபோது அவர் எந்த உதவியும் செய்யவில்லை. அப்போதே அவர் மீதிருந்த மரியாதை இல்லாமல் போய்விட்டது".
சசிகலா உத்தரவுப்படி
தினகரன் இந்த ஆட்சியை மாற்றுவோம் என்கிறார். நீங்கள் அதிமுக கொறடா உத்தரவுப்படியே செயல்படுவேன் என்கிறீர்கள் அதே வேளையில் தினகரனின் ஆதரவாளர் என்றும் கூறிக் கொள்கிறீர்களே என்று கேட்டபோது "நான் இப்போது வரை அதிமுக எம்.எல்.ஏ. ஆகையால் அதிமுக கொறடா என்ன கூறுகிறாரோ அதுபடிதான் செயல்படுவேன். அதே வேளையில் சசிகலாவை சந்திக்கவும் நேரம் கேட்டுள்ளேன்" என்று கூறினார்.
கவிழ விரும்ப மாட்டார் சசிகலா
தொடர்ந்து நம்மிடம் பேசியவர் சசிகலாவே இந்த ஆட்சியை கவிழ்க்க விரும்ப மாட்டார். நம்பிக்கையில்லா தீர்மானம் வரும் வேளையில் அதிமுக கொறடாவுக்கு சசிகலாவிடம் இருந்து உத்தரவு வரும். ஆகையால் ஆட்சி கவிழ்ப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை என்றார். தொடர்ந்து நம்மிடம் பேசியவர் ஜெயலலிதா கருணாநிதிதான் எனக்கு தகுந்த எதிரி என்று கூறினார்.
மக்களுக்கு மரியாதை இல்லை
இப்போது எடப்பாடி அரசு மீது தமிழக மக்களுக்கு மரியாதையோ நம்பிக்கையோ இல்லை. அப்படிப்பட்ட எடப்பாடி பழனிசாமி அரசை கவிழ்க்கும் திறமை கருணாநிதி என்ற மிகபெரிய தலைவரின் மகனான ஸ்டாலினுக்கு உள்ளதா என்றுசவால் விடுத்தார். மக்களின் ஆதரவை இழந்துவிட்ட அரசையே ஸ்டாலினால் ஒன்றும் செய்ய முடியவில்லையே என்றும் நம்மிடம் கள்ளக்குறிச்சி பிரபு கூறினார்.