சாத்தான்குளம் வழக்கு... சிபிஐ-க்கு மாற்றி பொறுப்பை தட்டிக் கழிக்காதீர் -கமல் ஆவேசம்
சென்னை: சாத்தான்குளம் வழக்கை சிபிஐ-க்கு மாற்றி முதலமைச்சர் பொறுப்பை தட்டிக் கழிக்கக்கூடாது என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
குற்றவாளிகள் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை புலனாய்வு துறையினரிடம் ஒப்படையுங்கள் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும், காலம் தாழ்த்தப்பட்ட நீதி அநீக்கு சமம் என்றும் நீதியை காக்க வேண்டும் என அறைகூவல் விடுத்துள்ளார்.
கொரோனா சிகிச்சை விவகாரம்... தமிழக அரசுக்கு ராமதாஸ் முன்வைக்கும் முக்கிய யோசனை
சிபிஐ-க்கு மாற்றம்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிளைச்சிறையில் தந்தை மகன் உயிரிழந்த விவகாரம் தமிழகம் தழுவிய அளவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ் மற்றும் பெனிக்ஸ் என்ற தந்தை மகனின் மரணத்திற்கு நீதி கோரி அரசியல் கட்சித் தலைவர்கள் அறிக்கைகள் மூலமும் காணொலி மூலம் தங்கள் கருத்தை பதிவு செய்து வருகின்றனர்.
வழக்குப்பதிவு செய்க
அந்த வகையில் ம.நீ.ம.தலைவர் கமல் வெளியிட்டுள்ள ட்வீட்டர் பதிவில் கூறியிருப்பதாவது, ''சாத்தான்குளம் வழக்கை சிபிஐ-க்கு மாற்றி பொறுப்பை தட்டிக் கழிக்காதீர்கள் முதல்வரே! குற்றவாளிகள் மேல் IPC 302-ன் கீழ் வழக்குப்பதிவு செய்து , அவர்களை புலனாய்வு துறையிடம் ஒப்படையுங்கள். சிபிஐ விசாரணைக்காக மாற்றப்பட்டு கிடப்பில் இருக்கும் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு, குட்கா ஊழல், போன்ற வழக்குகளின் வரிசையில் இதையும் சேர்த்து மக்கள் மறந்துவிடுவார்கள் எனக் காத்திராமல் நீதியை காத்திடுங்கள், காலம் தாழ்த்தப்பட்ட நீதி அநீதி'' எனக் கூறியுள்ளார்.
ஜெயராஜ் குடும்பத்தினர்
முன்னதாக இந்த விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்திருந்த கமல், ஜெயராஜ்,பெனிக்ஸ் மரணத்திற்கு நீதி கிடைக்கும் வரை அவரது குடும்பத்தினருக்கு மக்கள் நீதி மய்யம் துணை நிற்கும் எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. இதனிடையே தனது கட்சியின் மாநில நிர்வாகியும், தூத்துக்குடி மாவட்ட பிரமுகருமான அருணாச்சலத்தை ஜெயராஜ் இல்லத்திற்கு அனுப்பி வைத்து அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிக்க வைத்தார். மேலும், தானும் தொலைபேசி மூலம் ஜெயராஜ் மனைவி செல்வராணிக்கு ஆறுதல் கூறினார்.
வழக்கு தீவிரம்
தந்தை மகன் உயிரிழந்தது பற்றி சாத்தான்குளம் காவல்துறையினரிடம் இதுவரை 16 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. மேலும், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை சாத்தான்குளம் காவல்நிலையத்தை மாவட்ட ஆட்சியர் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரக் கூறியுள்ளது. இதனால் இந்த வழக்கு விசாரணை சூடுபிடித்துள்ளது.