கமலை வறுத்தெடுக்கும் பாஜக-அதிமுக.. கண்டு கொள்ளாமல் வேடிக்கை பார்க்கும் திமுக... பழைய பகை காரணமா?
சென்னை: சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் பேசியதற்கு இதுவரை திமுக ஆதரவோ எதிர்ப்போ தெரிவிக்காமல் அமைதியாக நடப்பதை வேடிக்கை பார்ப்பதற்கு பழைய சம்பவங்கள் காரணமா அல்லது தேர்தல் காரணமாக என்று கேள்விகள் எழுகிறது.
சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து என்று கோட்சேவை குறிப்பிட்டு கமல் பேசியதற்கு பாஜக, அதிமுக, சிவசேனா மற்றும் இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
ஆனால் அதேநேரம் பாஜகவுக்கு எதிரான நிலைப்பாடு கொண்ட கட்சிகளான காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மதிமுக மற்றும் ஓவைசி உள்ளிட்டவை ஆதரவு தெரிவித்துள்ளன.
உலக தமிழர்களுக்கு பெருமை சேர்க்க துரோகிகளுக்கு எதிராக வாக்களியுங்கள்... டிடிவி தினகரன் பேச்சு
கமலுக்கு பதில் இல்லை
ஆனால் பெரியாரின் கொள்கைகளை தீவிரமாக பின்பற்றும் திமுக, கமலின் கருத்துக்கு எந்த பதிலும் தெரிவிக்கவில்லை. அவரது பேச்சுக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால் அவரது கருத்தை பொருட்டாக மதிக்கவில்லை என்று தெரிகிறது.
பதில் அளிக்க மறுப்பு
ஏனெனில் நேற்று பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜனின் ஸ்டாலின் குறித்த பேச்சுக்கு கண்டனம தெரிவித்து பேசிய திமுக அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதியிடம், கமலின் இந்து தீவிரவாதி என்ற பேச்சுக்கு செய்தியார்கள் கருத்து கேட்டனர்.அதற்கு பதில் அளிக்க மறுத்த அவர், கமல் என்பவர் எல்லாம் இன்று ஒன்று பேசுவார், நாளை ஒன்று பேசுவார். அவருடைய கருத்துக்கெல்லாம் பதில் அளிக்கும் நிலையில் திமுக இல்லை என்று காட்டமாக பதில் அளித்தார்.
ஸ்டாலின் அமைதி
இதற்கிடையே திமுக தலைவர் ஸ்டாலின் இதுவரை கமல் பேச்சு குறித்து எந்த விளக்கமும் அளிக்கவில்லை. எந்த பதிலும் அளிக்கவில்லை. எனவே கமல் விவகாரத்தில் திமுகவின் நிலைப்பாடு என்ன என்பது இதுவரை தெரியவரவில்லை. அதேநேரம் விசிக தலைவர் திருமாவளவன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரி உள்பட திமுகவின் கூட்டணி கட்சியினர் கமலின் பேச்சுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
பிரச்னை வேண்டாம்
முன்பு கமல் திமுக குறித்தும் அந்த கட்சியின் தலைவர் ஸ்டாலின் குறித்தும் கடுமையாக பேசியிருந்தார். தன்னை பார்த்து ஸ்டாலின் காப்பி அடிப்பதாக கூட தெரிவித்து இருந்தார். இதனால் கோபத்தில் இருந்த திமுக இப்போது கமல் விவகாரத்தில் அமைதியாக இருந்து வேடிக்கை பார்ப்பதால், பழைய நிகழ்வு காரணமா அல்லது தேவையில்லாமல் தேர்தல் நேரத்தில் இந்த விஷயத்தில் கைவைக்க வேண்டாம் என இருக்கிறதா என்று கேள்விகள் எழாமல் இல்லை.