கமல் விசாரணைக்கு ஆஜராக தேவையில்லை.. உயர்நீதிமன்றம் அதிரடி
சென்னை: இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் 3 பேர் இறந்த வழக்கு தொடர்பாக கமல் விசாரணைக்கு ஆஜராக தேவையில்லை என உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் கிரேன் விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தது தொடர்பாக, நடிகர் கமல்ஹாசனுக்கு மத்திய குற்றப்பிரிவு காவல்துறை சம்மன் அனுப்பி விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்நிலையில் கமல் ஹாசன் சென்னை யர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில் இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் விபத்து தொடர்பான விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வரும் நிலையில், சம்பவ இடத்தில் விபத்து நடந்தது குறித்து நடித்து காட்டும்படி மத்திய குற்றப்பிரிவு தொடர்ந்து வற்புறுத்துகிறார்கள். விசாரணை என்ற பெயரில் துன்புறுத்துகிறார்கள் என கூறியுள்ளார். இது தொடர்பாக நீதிபதி இளந்திரையன் முன் நடிகர் கமல்ஹாசன் தரப்பில் முறையீடு செய்யப்பட்டது. அவர் கமலின் வழக்கை இன்று பிற்பகல் விசாரிப்பதாக நீதிபதி ஒப்புதல் அளித்தார்.
இதன்படி விசாரணை நடந்தது. அப்போது வாதங்களின் முடிவில் கமல் விசாரணைக்கு ஆஜராக தேவையில்லை என உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது.
கடந்த மாதம் 19 ஆம் தேதி இரவு நடந்த படப்பிடிப்பின் போது திடீரென கிரேன் அறுந்து விழுந்ததில் உதவி இயக்குனர் கிருஷ்ணா, ஆர்ட் அசிஸ்டென்ட் சந்திரன், புரொடக்ஷன் அசிஸ்டென்ட் மது ஆகியோர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.