பொன்பரப்பி சம்பவங்கள், தமிழ் இனத்திற்கே பெரும் அவமானம்.. கமல்ஹாசன் கடும் கோபம்
சென்னை: பொன்பரப்பி சம்பவங்கள், தமிழ் இனத்திற்கே பெரும் அவமானம் என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார்.
அரியலூர் அருகேயுள்ள பொன்பரப்பி கிராமத்தில், இரு வேறு பிரிவினர் நடுவே ஏற்பட்ட மோதலில், பலரது வீடுகள் சேதப்படுத்தப்பட்டன. இந்த சம்பவத்திற்கு பல்வேறு தரப்பிலும் கண்டனங்கள் வலுத்துள்ளன.
இந்த நிலையில், கமல்ஹாசன் ட்வீட்டரில் இன்று கூறியுள்ளதாவது:
மருதநாயகம் படத்திற்காக, என் மூத்த அண்ணன் திரு.இளையராஜாவும் நானும் சேர்ந்து எழுதிய பாடல். 300 வருடங்களுக்கு முன் நடந்த சமூக அநீதிகளை நோகும் பாடல். இன்று மனம் பதைக்கும் "பொன்பரப்பி" சம்பவங்களுக்கும், அப்பாடல் பொருந்திப் போவது தமிழ் இனத்திற்கே பெரும் அவமானம். இவ்வாறு கூறியுள்ள கமல்ஹாசன், அந்த பாடல் வரிகளை போட்டோவாக ஷேர் செய்துள்ளார்.
மருதநாயகம் படத்திற்காக, என் மூத்த அண்ணன் திரு.இளையராஜாவும் நானும் சேர்ந்து எழுதிய பாடல். 300 வருடங்களுக்கு முன் நடந்த சமூக அநீதிகளை நோகும் பாடல். இன்று மனம் பதைக்கும் ”பொன்பரப்பி” சம்பவங்களுக்கும், அப்பாடல் பொருந்திப் போவது தமிழ் இனத்திற்கே பெரும் அவமானம். pic.twitter.com/VusUubw1GV
— Kamal Haasan (@ikamalhaasan) April 20, 2019
அதில், மதங்கொண்டு வந்தது சாதி- இன்றும் மனிதனைத் துரத்துது மனு சொன்ன நீதி. சித்தம் கலங்குது சாமி- இங்கு ரத்த வெறி கொண்டு ஆடுது பூமி. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.