பாகிஸ்தான் இந்துவுக்கு ஒரு நியாயம்? இலங்கை இந்துவுக்கு ஒரு நியாயமா ? - கமல்ஹாசன் கேள்வி
சென்னை: பாகிஸ்தான் இந்துவுக்கு ஒரு நியாயம், இலங்கை இந்துவுக்கு ஒரு நியாயமா என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பினார்.
மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் ஹாசன் இன்று காலை 11:30 மணிக்கு கட்சித் தலைமை அலுவலகத்தில் குடியுரிமை சட்டத் திருத்தம் சம்பந்தமாக பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் தேச விரோத சக்திகளின் வீழ்ச்சியின் தொடக்கம் இது.
சாதிப்பிரிவுகள் சொல்லி அதில்
தாழ்வென்றும் மேலன்றும் சொல்வார்
நீதிப்பிரிவுகள் செய்வார்- அங்கு
நித்தமும் சண்டைகள் செய்வார்
சாதிக் கொடுமைகள் வேண்டா அன்பு
தன்னில் செழித்திடும் வையம்.
102 ஆண்டுகளுக்கு முன் பாரதி சொன்னது இது.
தேச விரோத சக்திகளின் வீழ்ச்சி தொடங்கிவிட்டது.. தலை முழுகுவோம்.. கமல்ஹாசன் ஆவேசம்
அரசாங்கத்தின் சூழ்ச்சி
இந்தியாவின் முதுகெலும்பு என சொல்லப்படும் கிராமங்களில் விவசாயி தற்கொலை செய்து கொண்டு செத்துக் கொண்டிருக்கும் பொழுது அதை தடுக்க வழி செய்யாமல் மதத்தின் பெயரால் மக்களைப் பிரிப்பது அரசாங்கத்தின் சூழ்ச்சி.
தேச விரோத சக்திகளின் வீழ்ச்சி தொடங்கிவிட்டது.. தலை முழுகுவோம்.. கமல்ஹாசன் ஆவேசம்
வயது பாரபட்சமின்றி
சரி பாதி விழுக்காடான பெண்கள் வயது பாரபட்சமின்றி உயிர் பயத்தில் வாழும் நேரத்தில் சட்டத்தின் மூலம் அதை தெளிவிக்காமல் வாக்கு வங்கிக்காக சட்டப்பிழைகளை செய்வது அரசு மக்களுக்கு எதிராக தொடுக்கும் போர் வியூகம்.
பெட்ரோல் விலை
எதிர்காலத்தின் தூண்களான மாணவர்கள் அரசியல் புரிதலுக்காக கேள்வி கேட்கும் போது கண்ணீர் புகைக் குண்டுகள் எறிவதும் காக்கிகளைக் கொண்டு அடிப்பதும் தான் அரசாங்கத்தின் பதில். பெட்ரோலின் விலை ரூபாய் 70-ஐ தொட்ட போது குஜராத்தில் கோடிகள் நஷ்டமாகும் என கொதித்தவர் ஆளும் போது நாட்டில் பெட்ரோலின் விலை 78 ரூபாய் ஆகும்.
விலைவாசி
பொருளாதாரம் பின்னோக்கி சென்று கொண்டிருக்கிறது. விலைவாசி விண்ணோக்கி சென்று கொண்டிருக்கிறது என அனைவரும் கலக்கத்தில் இருக்கும் வேளையில் குடியுரிமை சட்டத்திருத்தத்துக்கான அவசரம் என்ன என்கிற கேள்வி தான் நாடு முழுவதும் வெடிக்கும் போராட்டத்தின் தொடக்கப்புள்ளியே.
இலங்கை தமிழர்கள்
பாகிஸ்தானின் இந்துவுக்கு வழங்கப்படும் உரிமை, இலங்கையின் இந்துவுக்கு ஏன் வழங்கப்படவில்லை? ஆண்டாண்டு காலமாக தமிழகம் தோள் கொடுக்கும் என்று நம்பும் இலங்கை தமிழர்களுக்கு நாம் சொல்ல போகும் பதில் என்ன?
அரச பயங்கரவாதம்
முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தின் போது தப்பித் தமிழகத்தில் தஞ்சம் அடைந்தவர்களின் நிலை இனி என்ன? கேள்விகளுக்கு விடையளிப்பதை விடுத்து கேள்வி கேட்பவனின் குரலை ஒடுக்கும் வேலைதான் டெல்லியிலும் அலிகாரிலும் அஸ்ஸாமிலும் நடக்கிற அரச பயங்கரவாதம்.
நேர்மையான
மாணவர்கள் மேல் விழும் ஒவ்வொரு அடியும் இந்திய ஜனநாயகம் வழங்கிய கருத்துரிமையின் மேல் விழும் அடி. கேள்வி கேட்கவே பயப்பட வேண்டும் என்ற எண்ணத்தை எதிர்காலத் தலைமுறையிடம் ஏற்படுத்த விழும் அடி. கேட்கப்படும் கேள்விகளுக்கு நேர்மையான பதில் இல்லாததால் மாட்டிக் கொள்வோமோ என்ற பயத்தில் விழும் அடி.
பதில் இல்லை
மாணவனுக்கு பதிலில்லை. விவசாயிக்கு வாழ வழியில்லை. பெண்களுக்கு பாதுகாப்பில்லை. பொருளாதாரம் சரியில்லை. குற்றங்கள் கட்டுக்குள் இல்லை. வேலைவாய்ப்பு இல்லவே இல்லை. எதை சாதிக்க இத்தனை அவசரமாக இந்த சட்டம் என்ற கேள்விக்கு நேர்மையான பதில் இல்லை.
மக்களின் கையில்
இந்த அரசு செய்யும் வேலைகளை எல்லாம் உலக வரலாறு முன்பே கண்டிருக்கிறது. இனத்தின் பெயரால் நாட்டை பிரித்து புதிய நாடு பிறந்து விடும் என ஆசைவார்த்தை பேசி, சட்ட திருத்தங்களை தனக்கு சாதகமாக்கி செய்தவர்கள் அடுத்து என்ன செய்வார்கள் என்பதற்கான பதில் வரலாற்றின் இருண்ட பக்கங்களில் உள்ளது. அந்த வரலாற்றின் முடிவு எப்போதும் மக்களின் கையில்தான் இருந்திருக்கிறது.
உரக்க சொல்ல வேண்டும்
அதிகாரம் மக்களின் கையில் இருக்கும் வரையில் தான் அது ஜனநாயகம். மக்களுக்கு எதிராக செல்லும் இந்த தனிநாயகத்தை ஒழிக்கும் வரையில் நான் ஓய மாட்டேன். நாம் யாருமே ஓயக் கூடாது. நம் படையோடு மோத வழியில்லை என்று தெரிந்து கொண்டு நம் கால்களுக்கிடையில் பாம்புகளை விடுகிறார்கள். பாம்பைக் கண்டு பயப்படும் படையல்ல. எங்கள் இளைஞர் கூட்டம் என்பதை உரக்க சொல்ல வேண்டிய நேரமிது.
தேச விரோத சக்தி
சர்வாதிகாரத்துக்கு எதிராக சுதந்திர காற்றை சுவாசிக்க ஜனநாயக ஆற்றில் மூழ்கி எழ வேண்டும். கரம் கோர்த்து தலை முழுகுவோம் இவர்களை. தாய் திருநாட்டின் இப்பணிகளை. தேச விரோத சக்திகளின் வீழ்ச்சியின் தொடக்கம் இது என தெரிவித்தார்.