சென்ற முறை பணமதிப்பிழப்பு.. இந்த முறை 370 நீக்கம்.. தொடரும் பாஜகவின் சர்வாதிகாரம்.. கமல் கண்டனம்
சென்னை: 370 மற்றும் 35ஏ ஆகிய சட்டப்பிரிவுகளை நீக்கிய விதம் ஜனநாயகத்தின் மீது நடைபெற்ற மிகப் பெரிய தாக்குதல் ஆகும் என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை அளிக்கும் 370 சட்டப்பிரிவை மத்திய அரசு இன்றைய தினம் நீக்கியது. இதற்கு பெரும்பாலான அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கமல்ஹாசன் கூறுகையில், 370 மற்றும் 35 ஏ ஆகிய சட்டப்பிரிவுகளை நீக்கிய விதம் ஜனநாயகத்தின் மீது நடைபெற்ற மிகப் பெரிய தாக்குதல். இது போன்ற முக்கியமான முடிவுகள் மீது நாடாளுமன்றத்தில் நடைபெற்றிருக்க வேண்டிய எவ்வித விவாதத்தையும் மேற்கொள்ளாமல் தங்களுக்கு அவையில் இருக்கும் பெரும்பான்மை ஒன்றை மட்டும் கருத்தில் கொண்டு மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.
காஷ்மீர் மீது மத்திய அரசின் அதிகாரத் தாக்குதல் குறித்து, மக்கள் நீதி மய்யம் கட்சியின் கருத்து.#MakkalNeedhiMaiam pic.twitter.com/ANpuMA45ga
— Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் (@maiamofficial) August 5, 2019
370 மற்றும் 35ஏ ஆகிய சட்டப்பிரிவுகள் இயற்றப்பட்டதற்கு வரலாறு உண்டு. எனவே அதில் மேற்கொள்ளப்படுகிற எந்த மாற்றமும் தகுந்த ஆலோசனையுடன் நடைபெற்றிருக்க வேண்டும். 370 மற்றும் 35ஏ ஆகிய சட்டப்பிரிவுகளை சட்டப்பூர்வமாக நீக்கப்படுவது குறித்து தனியான விவாதம் நடத்தப்பட்டிருக்க வேண்டும்.
காஷ்மீரில் 11 லட்சம் விலையில் வீடுகள் கிடைக்கும்.. இந்தா கிளம்பிட்டாங்கல்ல
ஜனநாயகத்தில் எதிர்க்குரல்களை முடக்கும் இந்த அரசின் ஆதிக்கப் போக்கை மக்கள் நீதி மய்யம் கட்சி கண்டிக்கிறது. சென்ற முறை பணமதிப்பிழப்பு, இந்த முறை 370 சட்டப்பிரிவு நீக்கம் என்று தொடர்ந்து சர்வாதிகாரமும் பிற்போக்குத்தன்மையும் கொண்ட செயல்களாகவே இந்த அரசால் மேற்கொள்ளப்படுகிறது என கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.