பெட்ரோல்- டீசல் விலைஉயர்வு.. வருவாயின்றி தவிக்கும் மக்களுக்கு அரசு செய்யும் துரோகம்.. கமல் விமர்சனம்
சென்னை: தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு என்பது 40 நாட்களாக வருவாய் இன்றி தவித்து வரும் மக்களுக்கு அரசு செய்யும் துரோகம் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கொரோனா பாதிப்பால் தமிழகத்தில் உள்ள அனைத்து துறைகளும் முடங்கியுள்ளன. இதனால் தமிழக அரசு கடும் நிதி நெருக்கடியில் தவித்து வருகிறது. இதையடுத்து வருவாயைப் பெருக்க என்ன செய்யலாம் என்ற ஆலோசனையில் தமிழக அரசு இருந்தது.
இந்த நிலையில் பெட்ரோல், டீசல் மீதான மதிப்பு கூட்டு வரியை (வாட்) உயர்த்தியுள்ளது. இதனால் பெட்ரோல் மீது லிட்டருக்கு ரூ .3.25-ம், டீசல் விலை மீது லிட்டருக்கு ரூ 2.50-ம் உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி இன்று முதல் பெட்ரோல் விலையில் ரூ 75.53 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ 68.21 ஆகவும் விலை உயர்ந்துள்ளது.
இதற்கு வாகன ஓட்டிகள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். 40 நாட்களாக தொழில்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ள நிலையில் இது போன்ற விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் கிடுகிடுவென உயரும் அபாயம் உள்ளதாக அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். தமிழக அரசின் இந்த அதிரடி அறிவிப்புக்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இதுகுறித்து கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் உலகமெங்கும் பெட்ரோல், டீசல் விலை குறைந்திருக்கும் வேளையில், அவை மீது மதிப்பு கூட்டு வரி உயர்வு என்பது அத்தியாவசிய பொருட்களின் விலையை உயர்த்தும் என்பதை அறிந்திருந்தும், 40 நாட்களாக மக்கள் வேலையின்றி, வருமானமின்றி தவிக்கும் நிலையில், இதை செய்வது மக்களுக்கு அரசு செய்யும் துரோகம் என தனது பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.