கேரளாவில் கொரோனாவை எதிர்கொண்டது எப்படி? 1957 இல் போட்ட பேஸ்மெண்ட்.. கமலிடம் விவரித்த சைலஜா
சென்னை: கேரளாவில் கொரோனா எப்படி எதிர்கொள்ளப்பட்டது என்பது குறித்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனிடம் கேரள சுகாதாரத் துறை அமைச்சர் சைலஜா பகிர்ந்து கொண்டார்.
மக்கள் நீதி மய்யம் சார்பில் கொரோனாவுக்கு பிந்தைய உலகின் புதிய யதார்த்தம் என்ற நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இன்று நடைபெற்று வரும் இந்த நிகழ்ச்சியில் கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே கே சைலஜா, பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் மூத்த ஆராய்ச்சியாளர் டாக்டர் ரமணன் லட்சுமி நாராயணன், எழுத்தாளரும் உளவியல் துறை நிபுணருமான டாக்டர் ஷாலினி ஆகியோருடன் வீடியோ கான்ஃப்ரன்ஸ் மூலம் கமல்ஹாசன் பேசினார்.
கேரள அமைச்சர் சைலஜாவிடம் கமல்ஹாசன் கூறுகையில் கேரளாவில் கொரோனாவை ஒழிக்க நீங்கள் செய்த பணிகளை இந்த நாடே புகழ்ந்து பேசி வருகிறது. நீங்கள் செய்தது மிகப் பெரிய பணி. கொரோனாவை எப்படி நீங்கள் கையாண்டீர்கள் என்பதை எங்களுக்கும் கூறுங்கள். கொரோனாவை உங்கள் துறையும் கேரள அரசும் எவ்வாறு எதிர்கொண்டீர்கள். என கேள்வி எழுப்பினார்.
தெற்கு ரயில்வே சென்னை கோட்டத்தில் 80 அதிகாரிகள், பணியாளர்களுக்கு கொரோனா
பற்றாக்குறை
இதற்கு சைலஜா பதிலளிக்கையில் கேரளாவில் உள்ள சூழல் நாட்டின் மற்ற மாநிலங்கள், உலக நாடுகளில் இருந்து வேறுபட்டது. 1957ஆம் ஆண்டு முதல் உள்ளாட்சி அமைப்புகள் வலுப்படுத்தினோம். அது பல்வேறு தருணங்களில் நல்ல ரிசல்ட்டுகளை கொடுத்தது. எங்களது மனித வள குறியீடு மிகவும் அதிகமானது. நிதி பற்றாக்குறையில்லாத மாநிலம் என சொல்ல முடியாது. எங்களுக்கு அந்த பற்றாக்குறையும் இருந்தது.
கற்க வேண்டும்
ஆனால் அவற்றையெல்லாம் உள்ளாட்சி அமைப்புகளை மக்களின் திட்டம் மூலம் சரி செய்தோம். பொது சுகாதார சிறப்பாக செயல்படுகிறது. கொரோனாவை ஒழிக்க முன்கூட்டியே எடுக்கப்பட்ட தயார் நிலை மற்றும் அரசின் கூட்டு முயற்சி ஆகியவையே காரணம் என்றார். அப்போது டிரேசிங் முறையில் கொரோனாவை கண்டறிதல் விஷயத்தை எப்படி செய்தீர்கள், இது மிகவும் சுவாரஸ்யமாக உள்ளது, நாங்கள் இதை உங்களிடம் இருந்து கற்க வேண்டும்.
வைரஸ்
ஏனெனில் கேரளாவை காட்டிலும் தமிழகத்தில் சிறப்பான மருத்துவ உபகரணங்கள் உள்ளதாக கூறப்படுகிறது என்றார். அதற்கு சைலஜா, தமிழகத்திலும் கொரோனாவை சிறப்பாக எதிர்கொள்கிறார்கள். ஆனால் முன்கூட்டியே தயார் நிலையில் இருந்திருக்க வேண்டும். கொரோனா எனும் வைரஸ் சீனாவின் வுகான் நகரிலிருந்து பரவுவதாக ஜனவரி 18-ஆம் தேதியே உலக சுகாதார நிறுவனம் அறிவித்திருந்தது.
மீட்கும் நடவடிக்கைகள்
அது அறிவித்த வழிமுறைகளை கொரோனா ஒரு தொற்றுநோய் என அறிவிப்பதற்கு முன்பே நாங்கள் முழுவதும் படித்து தெரிந்து கொண்டோம். உடனே இதுகுறித்து ராஜன் என்ற ஐஏஎஸ் அதிகாரியிடம் ஆலோசனை நடத்தினேன். அப்போது ராஜன் கூறுகையில் வுகானில் கேரளாவை சேர்ந்த மாணவர்கள் உயர்கல்வி படித்து வருகிறார்கள். அவர்களை நாம் மீட்க வேண்டும் என கூறினார். அதன்படி அவர்களை மீட்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
மாணவர்கள்
ஜனவரி 24-ஆம் தேதி நாங்கள் கேரளாவில் கட்டுப்பாட்டு மையத்தை தொடங்கினோம். மாநில அளவிலான இந்த மையத்தில் அனைத்து துறையினருக்கு அவரவர் பொறுப்புகளை பிரித்து கொடுத்தோம். விமான நிலையங்களிலும் உதவி மையங்களை அமைத்தோம். அங்கு நோய் கண்டறியும் குழுவை அமர்த்தினோம். வுகான் நகரிலிருந்து முதல் விமானம் கேரளாவுக்கு மாணவர்களுடன் வந்த போது எங்கள் குழுவினர் அங்கிருந்தனர்.
தொடர்புப்படுத்துதல்
நாங்கள் பரிசோதனை செய்த போது 3 மாணவர்களுக்கு கொரோனா அறிகுறி இருந்தது தெரியவந்தது. அவர்களை மருத்துவமனையில் வைத்து தனிமைப்படுத்தினோம். அவர்களுக்கு கொரோனா பரிசோதனை உறுதியான போது அவர்கள் மருத்துவமனையில் இருந்தனர். இதனால் அவர்களுடன் யாரும் தொடர்புப்படுத்திக் கொள்ள வாய்ப்பில்லை.
திரும்ப பெறுதல்
உடனே நாங்கள் எங்கள் செயல்பாடுகளை நிறுத்திக் கொள்ளவில்லை. இந்த வைரஸ் சீனாவிலிருந்து மற்ற நாடுகளுக்கும் செல்லும் என்பதில் உறுதியாக இருந்தோம். இதனால் விமான நிலையத்தில் 24 மணி நேரமும் செயல்படும் ஸ்க்ரீனிங் டீமை அமைத்திருந்தோம். அதற்கு சிலர் ஏன் ஓவர் ஆக்ட் செய்கிறீர்கள், விமான நிலையத்தில் உள்ள மருத்துவ டீமை திரும்ப பெறுங்கள் என்றெல்லாம் பேசினர்.
சுதந்திரம்
இதுகுறித்து முதல்வர் பினராயி விஜயனிடம் பேசினோம். அதற்கு அவர் விமான நிலையத்தில் ஸ்க்ரீனிங் டீமை திரும்ப பெற இது சரியான தருணம் அல்ல. நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ அதை செய்யுங்கள். மற்றவர்கள் சொல்வதை கேட்காதீர்கள் என்றார். கொரோனா தடுப்பு பணிகளுக்காக அரசிடம் இருந்து உத்தரவு வரும் வரை காத்திருக்காமல் செயல்படும் சுதந்திரத்தை முதல்வர் எனக்கு கொடுத்தார்.
மருந்து
நிஃபா வைரஸ் வந்தபோதும் இப்படித்தான் நாங்கள் செயல்பட்டோம். ஆஸ்திரேலியாவில் நிஃபா வைரஸுக்கு மருந்து கண்டுபிடித்து அது நல்ல பலனை கொடுப்பதை அறிந்தோம். முதல்வருடன் ஆலோசனை நடத்தினோம், அவரும் மத்திய அரசுடன் பேசி அவர்கள் ஆஸ்திரேலிய அரசுடன் பேசி மருந்தை விமானம் மூலம் வரவழைத்தனர்.
வழிப்பாட்டு தலங்கள்
கொரோனா பாதித்த முதல் நாள் முதல் நாங்கள் பொதுமக்கள், தன்னார்வலர்கள், மற்ற அதிகாரிகளின் உதவியை நாடினோம். நாங்கள் அதிகாரிகள், அனைத்து மத தலைவர்களுடன் மாவட்ட அளவில் ஆலோசனை நடத்தினோம். வழிப்பாட்டு தலங்களில் கூட்டு பிரார்த்தனைகளை நடத்த வேண்டாம் என அவர்களை நாங்கள் கேட்டுக் கொண்டோம். அவர்களாகவே வழிப்பாட்டு தலங்களை மூடுவது குறித்து அறிவித்தனர்.
கோவிட் மையம்
அது போல் வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து வருவோர் கொரோனா அறிகுறி இருந்தால் மருத்துவமனைகளிலும் அறிகுறி இல்லாவிட்டாலும் வீட்டிலும் தனிமைப்படுத்தினோம். அதற்காக சுகாதாரத் துறை சில வழிமுறைகளை வகுத்தோம். தனி அறையை பயன்படுத்துவது , தனி கழிப்பறையை பயன்படுத்துவது உள்ளிட்டவற்றை அறிவுறுத்தினோம். ஒரு வேளை தனி கழிப்பறை இல்லாவிட்டால் அவர்களை அரசு கோவிட் மையத்திற்கு அனுப்பினோம்.
கான்டாக்ட் டிரேசிங்
இந்த அறிவுரைகளை 80 சதவீதம் மக்கள் மட்டுமே பின்பற்றினர். இதனால் பஞ்சாயத்து வார்டு அமைப்பு மூலம் வாலன்டியர்களை அனுப்பி கண்காணித்து அவர்களுக்கு அறிவுரைகளை வழங்கினோம். போலீஸாரும் அவர்களது வீடுகளுக்கு சென்று கண்காணித்தனர். கொரோனா இருக்கும் என சந்தேகம் இருப்பவர்கள் வீட்டில் தான் இருக்கிறார்களா, மற்ற குடும்ப உறுப்பினர்களுடன் தொடர்பில் இல்லாமல் உள்ளார்களா என்பதை கண்காணித்ததன் மூலம் கான்டாக்ட் கேஸ்களை நாங்கள் குறைத்தோம். மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழகத்தில் பொது சுகாதாரத் துறை சிறப்பாக செயல்படுகிறது.
டாக்ஸி
விமானநிலைய டாக்ஸிகளில் டிரைவருக்கும் பயணிக்கும் இடையே காக்கும் கண்ணாடி திரைகளை அமைத்தோம். வெளிநாடுகளிலிருந்து வருவோருக்கு கொரோனா தொற்று இருந்து அது டிரைவரை பாதிக்கும். அந்த டிரைவர் வீட்டுக்கு சென்றால் அவரது குடும்பத்தையும் அவர் செல்லும் இடங்களில் உள்ளோரையும் பாதிக்கும். அது நமக்கு தெரியாமல் போய்விடும். அதனால் சிறிய விஷயங்களில் கூட கவனம் செலுத்தினோம். தற்போது ஊரடங்கு தளர்வால் இரண்டாவது அலை வந்துவிட்டது. அதை தடுப்பது சற்று கடினமாக உள்ளது என்றார்.