இப்போ சொல்லுங்க.. மநீம வகுத்த எதிர்பாராத வியூகம்.. தேர்தல் களத்தில் கேம் சேஞ்சராக மாறும் கமல்ஹாசன்!
சென்னை: யாருமே எதிர்பார்க்காத வகையில்.. தமிழக அரசியல் களத்தில் கமல்ஹாசன் பெரிய கேம் சேஞ்சராக உருவெடுப்பதற்கான வாய்ப்புகள் உருவாகி உள்ளன. இவர் எடுத்து வரும் முடிவுகளால் மொத்தமாக தேர்தல் ரிசல்ட் மாறினாலும் மாறும் என்று அரசியல் வல்லுநர்கள் கருதுகிறார்கள்!
தமிழக சட்டசபை தேர்தலில் திமுக, அதிமுக அமைக்கும் கூட்டணி எப்படி இருக்கும் என்றுதான் இதுவரை அரசியல் வல்லுநர்கள் கூர்ந்து கவனித்து வந்தனர். ஆனால் இந்த முறை மக்கள் நீதி மய்யம் கட்சி எடுக்கும் முடிவுகள் எல்லோரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளன.
தமிழகத்தில் மீண்டும் மூன்றாவது அணி என்ற அஸ்திரத்தை கமல்ஹாசன் கையில் எடுத்து உள்ளார். அதிலும் இன்று மக்கள் நீதி மய்யம் செய்த சம்பவம் ஒன்று தேர்தல் விறுவிறுப்பை கூட்டி உள்ளது.
அதிமுகவிடம் 5 சீட் கேட்கும் இந்து மக்கள் கட்சி.. கிடைக்காவிட்டால் தனித்தே போட்டி- அர்ஜூன் சம்பத்
விறுவிறுப்பு
தமிழக சட்டசபை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் மூன்றாவது அணி அமைப்பது ஏறத்தாழ உறுதியாகிவிட்டது என்றுதான் கூற வேண்டும். கமலை தங்கள் பக்கம் இழுக்க திமுக, அதிமுக முயன்றாலும், தேர்தல் நடக்க இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில் இந்த கூட்டணி சாத்தியமா என்பது சந்தேகமே. இதனால் மக்கள் நீதி மய்யம் தலைமையில் மூன்றாவது அணி உருவாகும் வாய்ப்பு பிரகாசமாகமாகி வருகிறது.
இரண்டு கட்சிகள்
கமலின் இந்த கூட்டணியில் ஏற்கனவே அதிமுக கூட்டணியில் இருந்து வந்த சமத்துவ மக்கள் கட்சியும், திமுக கூட்டணியில் இருந்து வந்த ஐஜேகே கட்சியும் சேர்ந்துவிட்டது. இதுதான் கமல்ஹாசன் உருவாக்க போகும் மூன்றாவது அணியின் தொடக்க புள்ளி என்கிறார்கள். இந்த மூன்றாவது அணி இனிமேல்தான் விஸ்வரூபம் எடுக்க போகிறது, ஒரு பெரிய கட்சி இதில் சேர போகிறது என்றும் பேசிக்கொள்கிறார்கள்.
எந்த கட்சி
அமமுக கட்சி இந்த அணியில் இணைவதற்கான வாய்ப்புகள் நிறையவே உள்ளன. டிடிவி தினகரனும் இதற்கான கிரீன் சிக்னலை கொடுத்துவிட்டார், கமல்ஹாசனும் வந்தால் சேர்த்துப்போம் என்று கூறிவிட்டார் . இதனால் அமமுக எப்போது வேண்டுமானாலும் மக்கள் நீதி மய்யத்தின் மூன்றாவது முன்னெடுப்பில் இணையும் என்கிறார்கள். இன்னொரு பக்கம் காங்கிரசும் இங்கே சாய வாய்ப்புள்ளது.
காங்கிரஸ்
தற்போது திமுக உடன் தொகுதி பங்கீடு தொடர்பான ஆலோசனையில் காங்கிரஸ் ஈடுபட்டு வருகிறது. ஆனால் இதில் குறைந்த இடங்களே கொடுப்போம் என்று திமுக கூறிவிட்டதால் காங்கிரஸ் கடும் அதிருப்தியில் இருக்கிறது. இதனால் அதிருப்தி அடைந்த காங்கிரஸ் எப்போது வேண்டுமானாலும் திமுகவுடன் பிரேக் அப் செய்துவிட்டு மக்கள் நீதி மய்யம் உடன் ஐக்கியம் ஆவதற்கு வாய்ப்புகள் உள்ளன... இது மட்டும் நடந்தால் தமிழக அரசியலில் கண்டிப்பாக அது பெரிய திருப்பமாக இருக்கும்.
இன்று அறிவிப்பு
இப்படிப்பட்ட நிலையில்தான் இன்று நடந்த சம்பவம் விறுவிறுப்பை கூட்டியுள்ளது. இன்று சென்னையில் சமக தலைவர் சரத்குமார் அளித்த பேட்டியில், ம.நீ.ம, ச.ம.க., ஐ.ஜே.கே. கட்சிகள் கூட்டணி உறுதி என தெரிவித்தார். அதோடு இந்த கூட்டணியின் முதல்வர் வேட்பாளரும் கமல்ஹாசன்தான் என்று சரத்குமார் அதிரடியாக அறிவித்துவிட்டார். இதனால் இந்த கூட்டணியின் தலைவர் கமல்ஹாசன் என்பது உறுதியாகிவிட்டது. இதன் காரணமாக தற்போது.. தமிழக அரசியல் களத்தில் கமல்ஹாசன் பெரிய கேம் சேஞ்சராக மாறி வருகிறார்.
கேம் சேஞ்சர்
உதிரி கட்சிகள், அதிருப்தி கட்சிகளை வைத்து இவர் உருவாக்கும் இந்த கூட்டணி கண்டிப்பாக தேர்தல் நேரத்தில் வாக்குகளை பிரிக்கும். அது திமுக, அதிமுக இரண்டையும் ஒவ்வொரு வகையில் பாதிக்கும். இரண்டு கட்சிகளுக்கு இடையிலான வாக்கு வித்தியாசத்தை குறைக்கும். இதுதான் தேர்தல் முடிவை புரட்டி போடும் என்று அரசியல் வல்லுநர்கள் கருதுகிறார்கள்.
மக்கள் நல கூட்டணி
கடந்த சட்டசபை தேர்தலில் மக்கள் நல கூட்டணி வெற்றிபெறவில்லை என்றால் அந்த கட்சிதான் கேம் சேஞ்சராக இருந்தது. அதேபோல் கமல்ஹாசன் இந்த முறை முடிவுகளை மாற்றும் சக்தி கொண்டவராக மாறுவார் என்கிறார்கள். இன்னும் கூடுதலாக கட்சிகள் இதில் இணைந்தால் முடிவுகள் வேறு மாதிரி மாறலாம்.
சவால்
இதனால் மக்கள் நீதி மய்யம் திமுக, அதிமுக இரண்டுக்கும் சவாலான கட்சியாக மாறியுள்ளது. இணையத்திலும் மக்கள் நீதி மய்யம் வலிமையாக முன்னேறி வருவதால் திமுக, அதிமுக ஆகிய பிரதான கட்சிகளுக்கு மநீம அதிர்ச்சி வைத்தியம் கொடுக்க தொடங்கி உள்ளது. அதிலும் கமல்ஹாசன் பிரச்சாரம் நாளுக்கு நாள் அதிக வரவேற்பை பெற்று வருவதால் தேர்தல் நேரத்தில் மக்கள் நீதி மய்யம் உருவாக்கும் கூட்டணி பெரிய பாய்ச்சலை நிகழ்த்தும் வாய்ப்புகள் உள்ளன!