குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு: 2-வது நாளாக போராடும் சென்னை பல்கலை. மாணவர்களுடன் கமல் சந்திப்பு
சென்னை: மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக 2-வது நாளாக போராட்டம் நடத்தி வரும் சென்னை பல்கலைக் கழக மாணவர்களை மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் இன்று சந்தித்து பேசினார்.
குடியுரிமை சட்டத் திருத்தத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி சென்னை பல்கலைக் கழக மாணவர்கள் போராட்டத்தைத் தொடங்கினர். இப்போராட்டத்தை தடுத்து நிறுத்தும் வகையில் பல்கலைக் கழகத்துக்கு விடுமுறை விடப்பட்டது.
ஆனாலும் மாணவர்கள் இரவு முழுவதும் பல்கலைக் கழகத்துக்குள் உள்ளிருப்புப் போராட்டத்தை நடத்தினர். அப்போது போலீஸ் குவிக்கப்பட்டதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது.
மாணவர்கள் தொடர் போராட்டம்
இந்நிலையில் 2-வது நாளாக சென்னை பல்கலைக் கழக மாணவர்களின் போராட்டம் நீடித்து வருகிறது. மாணவர்கள் பல்கலைக் கழகத்தின் நுழைவாயில்களை பூட்டிவிட்டு உள்ளிருப்புப் போராட்டம் நடத்துகின்றனர்.
பல்கலைக் கழகத்தில் கமல்ஹாசன்
இம்மாணவர்களை மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் சந்திக்க சென்றார். அப்போது நுழைவாயிலிலேயே கமல்ஹாசன் தடுத்து நிறுத்தப்பட்டார்.
நுழைவாயிலில் சந்தித்த கமல்
பின்னர் நுழைவாயிலில் நின்றபடியே போராட்டம் நடத்தி வரும் மாணவர்களை சந்தித்து பேசினார் கமல்ஹாசன். மாணவர்கள் போராட்டத்தால் அப்பகுதியில் பெரும் எண்ணிக்கையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
|
பட்டினியுடன் போராட்டம்
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், மாணவர்களைப் போல ஊடகங்கள் விழித்தெழ வேண்டும். சென்னையில் 800 மாணவர்கள் போராடி வருகின்றனர்.
அகதிகளாக மாணவர்கள்
அகதிகளை கட்டுப்படுத்த சட்டம் கொண்டுவருவதாக சொல்லும் அரசு, மாணவர்களை படிக்கும் இடங்களில் அகதிகளாக்கியுள்ளது. இந்த நாடு சர்வாதிகாரத்தை நோக்கி போய் கொண்டிருக்கிறது என்றார்.