பிரசாந்த் கிஷோரை 5 முறை சந்தித்த கமல்.... விறு விறு பணிகள்.. துருதுரு மக்கள் நீதி மய்யம்!
சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சியின் வளர்ச்சிப் பணிகள் தொடர்பாக பிரஷாந்த் கிஷோருடன் 5 முறை கமல்ஹாசன் ஆலோசனை நடத்தியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மக்கள் நீதி மய்யம் கடந்த மக்களவைத் தேர்தலில் கணிசமான வாக்குகளை பெற்றதால் கமல்ஹாசன் சற்று உற்சாக மனநிலையில் உள்ளார். ஆனால் அவரது கட்சி நிர்வாகிகள் பலர் தேர்தலில் பணத்தை பறிகொடுத்ததால் கட்சிப்பணிகளில் இருந்து மெதுவாக ஒதுங்கி வருகின்றனர்.
இதை உணர்ந்து சுதாரித்துக்கொண்ட கமல், தற்போது புதிய நிர்வாகிகள் பட்டியலை தயார் செய்து வருகிறார். மேலும், அதிமுக பாணியை பின்பற்றி மக்கள் நீதி மய்யத்தில் உறுப்பினராக உள்ள பெரும்பாலனவர்களுக்கு பொறுப்புகள் வழங்கவும் முடிவு செய்துள்ளார்.
தமிழகம் முழுவதும் கிளைகள்
திமுக, அதிமுகவை போல் கிராமங்களிலும் கிளையை நிறுவி அதற்கும் பொறுப்பாளர்களை நியமிக்க மக்கள் நீதி மய்யத்தில் தீவிர பணிகள் நடைபெற்று வருகின்றன. தேர்தல் ஸ்பெலிஸ்ட் என்றழைக்கப்படும் பிரசாந்த் கிஷோர் மக்கள் நீதி மய்யத்துக்காக பணியாற்றி வருகிறார். அவரது டீம் முதற்கட்ட ஆய்வை தமிழகம் தழுவிய அளவில் முடித்துவிட்டது.
ஆட்சியமைப்பது
மக்கள் நீதி மய்யத்துக்காக பணியாற்ற பிரசாந்த் கிஷோர் ரொம்வே தயங்கியுள்ளார். கமலுக்காக அவரை சந்திக்க சென்ற பிரதிநிதியிடம், மக்கள் நீதி மய்யம் உடனடியாக ஆட்சிக்கு வருவதெல்லாம் சாத்தியமில்லை எனவும் வெளிப்படையாக பேசியுள்ளார்.
தயங்கி ஒப்புதல்
பின்னர் எப்படியோ கமலுக்காக மக்கள் நீதி மய்யத்தை தமிழகத்தில் வலுப்படுத்த அவர் ஒரு வழியாக ஒத்துக் கொண்டாராம். இதனிடையே 5 முறை கமல்-பிரசாந்த் கிஷோர் சந்திப்பு நடைபெற்றதாக கூறப்படுகிறது.
எங்களுக்கே தெரியாது
மக்கள் நீதி மய்யத்தின் முக்கிய நிர்வாகி ஒருவரிடம் இது தொடர்பாக பேசிய போது, பிரசாந்த் கிஷோர் டீம் ஆய்வு நடத்துவது, எங்களுக்காக பணியாற்றுவது எங்களுக்கே தெரியாது. அந்தளவு யாரும் யூகிக்க முடியாத வகையில், பிக்பாஸ், சினிமா பணிகளுக்கு இடையேயும் கட்சியை வலுப்படுத்தி வருகிறார் தலைவர் கமல். மேலும் உடனடியாக நாங்கள் ஆட்சியை பிடிக்காவிட்டாலும் எங்கள் கட்சிக்கென்று எம்.எல்.ஏ.க்களையாவது பெறுவோமே என நம்பிக்கை தெரிவிக்கிறார்.