சென்னை ராமாபுரம் தோட்டத்தில் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்த கமல்ஹாசன்!
சென்னை: சென்னை ராமாபுரம் தோட்டத்தில் எம்.ஜி.ஆர். சிலைக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
எம்ஜிஆர் பிறந்தநாள் விழா இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. 104 ஆவது பிறந்த நாள் விழாவை அதிமுக மட்டுமல்லாமல் அனைத்து தரப்பு மக்களும் கொண்டாடி வருகிறார்கள்.
காலை முதல் வீதியெங்கும் லவுட் ஸ்பீக்கர்களில் எம்ஜிஆரின் தத்துவப் பாடல்கள் ஒலிபரப்பப்பட்டு வருகின்றன. ஆங்காங்கே இருக்கும் எம்ஜிஆர் சிலைகளுக்கு அதிமுகவினரும் பொதுமக்களும் மலர்த் தூவி அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
அந்த வகையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் சென்னை ராமாபுரம் தோட்டத்தில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தனது பிரச்சாரங்களில் எம்ஜிஆரை முன்னிறுத்தி வருகிறார் கமல். இதை அதிமுக கண்டித்து வருகிறது. ஆனால் எம்ஜிஆர் மக்கள் திலகம், அதிமுகவின் திலகம் அல்ல என்றும் அவர் மடியில் உட்கார்ந்து வளர்ந்தவன் என்ற முறையில் தனக்கு எம்ஜிஆரின் பெயரை பயன்படுத்த அனைத்து உரிமைகளும் இருப்பதாக கமல்ஹாசன் தெரிவித்து வரும் நிலையில் இன்று எம்ஜிஆரின் சிலைக்கு மரியாதை செய்துள்ளார்.
’பொறு, கொஞ்சம் விளையாடிவிட்டு வருகிறேன்’ என்று காலத்தோடு மோதியவர் என் அண்ணன் எம்ஜியார். அமெரிக்க சிகிச்சை முடிந்து அதிக ஆற்றலோடு திரும்பி, அவர் அரியணை ஏறிய வரலாற்றைச் சொல்கிறது ‘காலத்தை வென்றவன்’. (1/2) pic.twitter.com/ZJEjCl1A9a
— Kamal Haasan (@ikamalhaasan) January 17, 2021
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கமல்ஹாசன் கூறுகையில் பொறு, கொஞ்சம் விளையாடிவிட்டு வருகிறேன்' என்று காலத்தோடு மோதியவர் என் அண்ணன் எம்ஜியார். அமெரிக்க சிகிச்சை முடிந்து அதிக ஆற்றலோடு திரும்பி, அவர் அரியணை ஏறிய வரலாற்றைச் சொல்கிறது 'காலத்தை வென்றவன்'. அந்தப் படத்தை இங்கே வெளியிடுகிறேன். வாழ்க்கையில் வெல்ல நீங்களும் பார்ப்பீர்கள்.
#நாளை_நமதே என தெரிவித்துள்ளார்.