கமல்ஹாசன் செய்தியாளர் சந்திப்பு:சக்கர நாற்காலி' சர்ச்சைக்கு விளக்கம் - மநீம கூட்டணியில் சரத்குமார்
மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளராக பழ.கருப்பையா போட்டியிட உள்ளதாகவும் கூட்டணியில் சட்டப் பஞ்சாயத்து இயக்கம் இணைந்துள்ளதாகவும் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
இந்தச் சந்திப்பில் சக்கர நாற்காலி' சர்ச்சை, இல்லத்தரசிகளுக்கு ஊதியம் உள்பட பல்வேறு சந்தேகங்களுக்கு கமல் விளக்கமளித்தார்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யத்தின் கட்சி அலுவலகத்தில் இன்று செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.
அப்போது பேசிய அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன், "தேர்தலுக்கு இன்னும் சற்று நாட்கள் இருக்கும் என நம்பிக் கொண்டிருந்தபோது அது இல்லையென்பது அறிவிப்பின் மூலம் நிரூபணமாகியுள்ளது. சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 36 நாள்கள் உள்ளன. நல்லவேளையாக நாங்கள் ஆயத்தமாகிவிட்டோம். தற்போது எங்கள் கட்சியில் இணைந்து பலம் சேர்க்க வந்திருப்பவர்கள் உங்களுக்கு அறிமுகமானவர்கள்தான். அவர்களை அறிமுகப்படுத்துவதைப் பெருமையாக நினைக்கிறேன்" என்றார்.
சூட்கேஸ்.. ஸ்வீட் பாக்ஸ் அரசியல்
தொடர்ந்து பேசுகையில், மூத்த அரசியலாளர் பழ. கருப்பையா மக்கள் நீதி மய்யத்தில் இணைகிறார். மக்கள் நீதி மய்யத்தின் வெற்றி வேட்பாளராகப் போட்டியிடவும் அவர் சம்மதித்துள்ளார். அவரது வயதைக் குறிப்பிட வேண்டிய அவசியமில்லை என என்னிடம் சொன்னார். அவர் ஓர் அனுபவமிக்க இளைஞர். அரசியல் பயணத்தில் ஒரு பைசாகூட வாங்காதவர். சூட்கேஸ்களுக்கும் ஸ்வீட் பாக்ஸ்களுக்கும் ஆட்படாதவர். இன்று எங்கள் நேர்மையை ஏற்றுக் கொண்டு இணைந்திருக்கிறார். நேர்மையாளர்களின் கூடாரத்துக்கு அவரை வரவேற்கிறேன். அதேபோல், தொடர்ந்து மக்கள் நலனுக்காக குரல் கொடுத்து வரும் சட்டப்பஞ்சாயத்து இயக்கம் எங்களோடு இணைந்து தேர்தல் களம் காணும். கிராம பஞ்சாயத்துகளில் எங்களுக்குப் பக்கபலமாக செந்தில் ஆறுமுகம் இருந்தார். அவர் எங்களுடன் இணைந்ததில் ஆச்சர்யமில்லை" என்றார்.
- "சக்கர நாற்காலியில் இருப்பவர்கள் பொதுவெளியிலிருந்து அகற்றப்பட வேண்டியவர்களா?" சர்ச்சையான கமல் பேச்சு
- சசிகலா வருகை, ஸ்டாலின் அரசியல் - பொதுக்குழுவில் கமல் பேசியது என்ன?
வேட்பாளர் தேர்வுக்குழு
மேலும், 2021 ஆம் ஆண்டு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் போட்டியிட ஏராளமான விருப்ப மனுக்கள் குவிந்துள்ளன. தகுதியான வேட்பாளர்களைத் தேர்வு செய்ய என் தலைமையிலான வேட்பாளர் தேர்வுக் குழு மார்ச் 1 ஆம் தேதி முதல் நேர்காணல் செய்ய உள்ளது. இந்தக் குழுவில் நிர்வாகக் குழு உறுப்பினர்களாக பழ.கருப்பையா, பொன்ராஜ், ரங்கராஜன் ஐ.ஏ.எஸ், செந்தில் ஆறுமுகம், சுரேஷ் ஐயர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். எங்கள் கட்சியின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் மார்ச் 7 ஆம் தேதி அறிவிக்கப்படும். எங்களின் தேர்தல் மாநாடு அன்றாட கொண்டாட்டமாக மாறப் போகிறது" என்றார்.
50 ஆண்டு பயணம்
இதையடுத்துப் பேசிய பழ.கருப்பையா, காமராஜரில் இருந்து தொடங்கி பல்வேறு அரசியல் கட்சிகளில் 50 ஆண்டுகளாகப் பயணித்தேன். பல்வேறு நிலைப்பாடுகள் இருந்தாலும் 50 ஆண்டுகளாக நடந்து வரும் தவறுகள் மீண்டும் நடந்துவிடக் கூடாது என நினைத்தோம். 100 ரூபாய் வரி கட்டினால் 40 ரூபாய்தான் மக்களுக்குச் சென்று சேர்கிறது. மக்கள் நீதி மய்யம், பெரிய கட்சியா என்று கேட்கிறார்கள். சரியான கட்சியா என்று கேளுங்கள் என்கிறேன். அரசியலில் பொறுப்பை எடுத்துக் கொள்ள முன்வருகிறவர்களை மக்கள் ஆதரிக்க வேண்டும். சிறிய கட்சிகள் எல்லாம் பெரிய கட்சிகளின் பின்னால் வாலும் தோலுமாக இருக்கிறார்கள். எங்காவது மாற்றம் நிகழும் புள்ளியை நாம் வைக்காவிட்டால், இந்த ஊழல் அரசியலுக்கு முடிவே இருக்காது' என்றார்.
சக்கர நாற்காலி சர்ச்சைக்கு விளக்கம்
தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு கமல்ஹாசன் பதில் அளித்தார்.
கே: உங்கள் தலைமையில் சிலர் இணைந்துள்ளனர். முதல்வர் வேட்பாளர் நீங்களா அல்லது மாற்றம் இருக்குமா?
நாங்கள் பரிசீலித்து முடிவு செய்திருப்பது அவ்வாறுதான். அவ்வாறாகவே முடியும்."
கே: பிற கட்சிகள் வந்தால் உங்கள் முடிவில் மாற்றம் இருக்குமா?
நாங்கள் சமரசத்துக்குப் பெயர் போனவர்கள் அல்ல. நல்லவற்றுக்காக சமசரம் செய்துள்ளோம்."
கே: நீங்கள் தெரிவித்த சக்கர நாற்காலி' என்ற வார்த்தை சர்சையாகி வருகிறதே?
யார் கோபப்பட்டாலும் அவர்கள் அறிவில் சிறியவர்களாக இருப்பார்கள். இன்று கலைஞர் இருந்திருந்தால் நான் கூறியதில் இருந்த அர்த்தம் என்ன என்பதை உணர்ந்திருப்பார். அவர் சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்தபோது அதைத் தள்ளிக் கொண்டு வந்த கூட்டத்தில் நானும் ஒருவன். ஆக, சக்கர நாற்காலியை கேலி செய்யும் விதத்தில் நான் பேசவில்லை. நான் என்ன செய்வேன், என்ன செய்யப் போவதில்லை என்பதைப் பற்றிக் கூறுகிறேன். தவிர, சக்கர நாற்காலி என்பது யாருக்கும் ஏற்படக்கூடிய அவலநிலை. அப்படி வந்தால் நான் என்ன செய்வேன் என்றுதான் சொல்கிறேன்."
கே: சரத்குமாரை சந்தித்துள்ளீர்கள். வேறு எந்தக் கட்சிகள் வரப் போகின்றன?
எந்தக் கட்சிகள் வரப் போகின்றன என்பது யூகம். நடந்து முடிந்ததைச் சொல்வது செய்தி. அதற்கான மேகங்கள் சூழ்ந்து கொண்டிருக்கின்றன. நல் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் அதிகம். நடைபோடும் மேகத்தில் இருக்கிறோம். கதவுகள் திறந்திருக்கின்றன."
கே: ரஜினியுடனான சந்திப்பில் ஆதரவு கேட்கப்பட்டதா?
நண்பர்களாகப் பேசிக் கொண்டோம். 3 ஆம் தேதியில் இருந்து பிரசாரத்தைத் தொடங்கப் போகிறோம். போகிற வழியில் உங்கள் வீடு இருந்தால் உங்களிடமும் ஆதரவு கேட்போம்."
கே: இல்லத்தரசிகளுக்கு சம்பளம் கொடுப்பது சாத்தியமா?
நாங்கள் இதைக் கண்டுபிடித்தவர்கள் அல்ல. ஏற்கெனவே பெய்ஜிங்கில் பிரகடனம் செய்யப்பட்டது. அவர்களில் பலவிதமான பணியாளர்கள் இருப்பார்கள். அவரவர்களின் தகுதிக்கு ஏற்ப ஊதியம் வழங்கப்படும். காலியான கஜானாக்களை நேர்மையானவர்கள் நிரப்பினார்கள். அதை மீண்டும் நிரப்பும் அரசியலை நோக்கி நேர்மையாளர்கள் நகர்ந்திருக்கிறார்கள்" என்றார்.
ம.நீ.ம அணியில் ச.ம.க, ஐ.ஜே.கே
முன்னதாக, மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகத்தில் கமலுடன் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் மற்றும் இந்திய ஜனநாயக கட்சியின் நிர்வாகிகள் சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டனர்.
இதையடுத்து சமத்துவ மக்கள் கட்சி, ஐ.ஜே.கே ஆகிய கட்சிகள் ம.நீ.ம கூட்டணியில் இணையலாம் எனவும் கூறப்படுகிறது.
கமலுடனான சந்திப்பு குறித்துப் பேசிய சரத்குமார், கமலுடன் கூட்டணி குறித்துப் பேசினேன். மக்களுக்கு நல்லது செய்யவே அரசியலுக்கு வந்துள்ளேன். எங்களை அ.தி.மு.க அழைத்துப் பேசும் எனக் காத்திருந்தோம். ஆனால் அது நடைபெறவில்லை. எனவே, கூட்டணியிலிருந்து விலகினோம். பணத்தை வாங்கிக் கொண்டு வாக்கு அளிக்காதீர்கள்' என்றார்.
பிற செய்திகள்:
- கொரோனாவிலிருந்து மீண்ட தூத்துக்குடி செவிலியரை தாக்கிய அரிய நோய்
- தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2021: வன்னியர் உள்ஒதுக்கீடு தி.மு.கவுக்கு பாதிப்பா?
- 'கஷோக்ஜி கொலைக்கு சௌதி இளவரசர் ஒப்புதல் அளித்தார்' - அமெரிக்க புலனாய்வு அறிக்கை
- பைடனின் முதல் ராணுவ நடவடிக்கை: இரானிய ஆதரவு போராளிகள் மீது தொடங்கியது வான் தாக்குதல்
- தமிழ்நாடு சட்டமன்றத்துக்கு ஏப்ரல் 6ஆம் தேதி வாக்குப்பதிவு, தேர்தல் முடிவுகள் மே 2 வெளியீடு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: