"மாற்றத்திற்கு வாக்களியுங்கள்".. 4ஆவது கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட கமல்ஹாசன்
சென்னை: தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் 4ஆவது கட்ட வேட்பாளர்கள் பட்டியலை அதன் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டார்.
கமல்ஹாசன் வெளியிட்ட அறிக்கையில் கூறுகையில் மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி, உள்ளாட்சியில் தன்னாட்சி என்பது மக்கள் நீதி மய்யம் பயணிக்கும் பாதை. உள்ளாட்சி அமைப்புகளை வலுப்படுத்தி, மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை உலகத் தரத்தில் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் எனும் லட்சிய தாகம் நமக்கு உண்டு.
கிராம சபைகளாகட்டும், உள்ளாட்சி தேர்தலை காலம் தாழ்த்தாமல் நடத்த வலியுறுத்துவதாகட்டும், முந்திக் கொண்டு ஒலிக்கும் குரலும் முன்சென்று களம் காணும் கரங்களும் நம்முடையவைதான்.
மத்திய பட்ஜெட் 2022: இந்த ஆண்டு செல்போன்கள், டி.வி.க்கள் விலை குறையுமா?.. எகிறும் எதிர்பார்ப்பு!

உள்ளூர் தன்னாட்சி சட்டம்
ஒருங்கிணைந்த தமிழ்நாடு நகர்ப்புற உள்ளூர் தன்னாட்சி சட்டத்தை நிறைவேற்றுவது, மக்களுக்கு தடையற்ற சேவைகளை உறுதி செய்ய ஸ்மார்ட் போன்கள் மூலம் அனைத்து நகர்ப்புற உள்ளாட்சிகளையும் ஆன்லைன் மயமாக்குதல், மழை வெள்ளத்தின் தாக்கத்தைத் தடுக்க, சிங்கப்பூரில் இருப்பது போல் சர்வதேச தரத்திலான நிரந்தரத் தீர்வு, சென்னையின் வெள்ளப் பிரச்சினைகளுக்குத் தீர்வு, 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடத்தப்படுவதை உறுதிப்படுத்துவது, நகர்ப்புற தன்னாட்சி அமைப்புகளில் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் வார்டு கமிட்டிகள் மற்றும் ஏரியா சபைகள், ஊழலற்ற நேர்மையான வெளிப்படையான துரித நிர்வாகம் உள்ளிட்ட எண்ணற்ற தனித்துவமிக்க செயல்திட்டங்களை நாம் நமது தேர்தல் அறிக்கையாக வெளியிட்டிருக்கிறோம். இவற்றை நடைமுறைப்படுத்தவும் தமிழக அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

நகர்ப்புறங்களில் கணிசமான வாக்கு
கடந்த நாடாளுமன்ற, சட்டசபைத் தேர்தல்களில் நகர்ப்புறங்களில் நாம் கணிசமான வாக்குகளைப் பெற்றுள்ளோம். ஊழலிலும் லஞ்சத்திலும் திளைக்கும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு நேர்மையும் திறமையும் வாய்ந்த உறுப்பினர்கள் கிடைக்க மாட்டார்களா எனும் ஆதங்கம் தமிழக மக்களிடம் இருக்கிறது. பல ஆண்டுகளாகக் கதறியும் தீர்க்கப்படாத பிரச்சினைகள் தமிழகத்தின் ஒவ்வொரு வீதியிலும் தெருவிலும் இருக்கின்றன.

தீர்த்தாக வேண்டிய கடமை
தேர்தலில் வென்று அவற்றைத் தீர்த்தாக வேண்டிய கடமையும் பொறுப்பும் நமக்கு இருக்கின்றன. நடைபெறவிருக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பாக போட்டியிட இருக்கும் தகுதிசால் வேட்பாளர்களின் 4ஆம் கட்ட பட்டியலை இன்று வெளியிடுகிறேன். வேட்பாளர்கள் இக்கணம் முதல் வெற்றி ஒன்றையே இலக்காகக் கொண்டு ஒவ்வொரு வாக்காளர்களிடமும் நமது கொள்கைகள், செயல்திட்டம், சின்னம் ஆகியவற்றைக் கொண்டு சேர்க்க வேண்டும்.

முன்மாதிரி மாடல்
இவர்களை வெற்றியடையச் செய்யும் கடமை, நம் ஒவ்வொவருக்கும் இருக்கிறது. நாம் ஒரு படையாகத் திரண்டு உழைக்க வேண்டும். நடைபெறவிருக்கும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் மக்கள் நீதி மய்யத்திற்கு மிகப் பெரிய திருப்புமுனையாக அமையும். நமது உறுப்பினர்களால் நிர்வகிக்கப்படும் உள்ளாட்சிகள், ஒரு முன்மாதிரி மாடலாக இந்தியா முழுக்க பேசப்படும் காலம் அருகில் வந்துவிட்டது. அந்தந்தப் பகுதிகளுக்கான செயல்திட்டத்தை உருவாக்கி இமைப்பொழுதும் சோர்வடையாமல் உழையுங்கள். என்னை பொறுத்தவரை உயர்ந்த நோக்கம், நேர்மை, திறமை, விடாமுயற்சி, கடின உழைப்பு ஆகியவைத்தான் ஒரு மனிதனை வெற்றியை நோக்கி செலுத்தும் விசைகள். அடுத்தடுத்த பட்டியல் விரைவில் வெளியாகும். தேர்தலில் வாகை சூட வேட்பாளர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

மாற்றத்திற்கு வாக்களியுங்கள்
இதையடுத்து வேட்பாளர்களின் பட்டியலை அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். இதுகுறித்து கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில், மக்கள் நீதி மய்யத்தின் சார்பாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ளும் வேட்பாளர்களின் 4-ஆவது பட்டியலை வெளியிடுகிறேன். இவர்கள் வெற்றி பெற வாழ்த்துகிறேன். மாற்றத்திற்கு வாக்களியுங்களென உங்களைக் கேட்டுக்கொள்கிறேன் என கூறி பட்டியலை வெளியிட்டுள்ளார்.

143 வேட்பாளர்கள்
அதில் அவர் குமாரபாளையம், பள்ளிபாளையம், நாகப்பட்டினம், சீர்காழி, மயிலாடுதுறை, பள்ளப்பட்டி, திருச்செங்கோடு, கொடைக்கானல், தேனி அல்லிநகரம், பெரியகுளம், உடுமலைப்பேட்டை நகராட்சிகள், திண்டுக்கல், கரூர், சேலம். சென்னை, கோவை மாநகராட்சிகள், வத்தலகுண்டு, நிலக்கோட்டை, ஆலம்பாளையம், அரவக்குறிச்சி, மடத்துக்குளம், வடுகபட்டி, ஆண்டிப்பட்டி பேரூராட்சிகள் என 143 வேட்பாளர்களின் பட்டியலை கமல்ஹாசன் வெளியிட்டார்.