வீட்டில் வேலை செய்யும் பெண்களுக்கு ஊதியம், 1 டிரியல்லன் டாலர் பொருளாதாரம்- கமலின் பொருளாதார திட்டம்
சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சியின் 3-வது ஆண்டு தொடக்கத்தை முன்னிட்டு அக்கட்சியின் பொருளாதார திட்ட அறிக்கையை நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டார். அதில் வீட்டில் வேலை செய்யும் பெண்களுக்கு ஊதியம், 1 டிரில்லியன் பொருளாதார திட்டம் ஆகியவற்றை உள்ளடக்கியதாக இந்த பொருளாதார திட்ட அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
சென்னையில் இன்று செய்தியாளர்களை மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் சந்தித்தார். இச்சந்திப்பின் போது மக்கள் நீதி மய்யத்தின் பொருளாதார திட்ட அறிக்கையை கமல்ஹாசன் வெளியிட்டார்.
இதில், தமிழகம் இந்தியாவின் டெட்ராய்ட் என்ற பெருமையை இழந்துவிட்டது. தொழில் முதலீடுகளில் தமிழகம் 12-வது இடத்தில் உள்ளது. வட இந்தியாவை காட்டிலும் தமிழகம் முன்னணியில் உள்ளது.
சிறுதொழில் முனைவோரை ஊக்குவிப்பதன் மூலம் பொருளாதாரம் வேகமாக வளரும். எல்லோருக்கும் வளமான வாழ்க்கை என்பதை மக்கள் நீதி மய்யம் உறுதி செய்யும். தகுதிக்கேற்ப அனைவருக்கும் வேலைவாய்ப்பு வழங்குவதால் பொருளாதாரம் உயரும்.
இளைஞர்களை தொழில்முனைவோராக மாற்ற நடவடிக்கை மேற்கொள்வோம். புரட்சிகரமான பொருளாதார திட்டத்தினால் 1 டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை எட்ட முடியும். வீட்டில் வேலை செய்யும் பெண்களுக்கும் ஊதியம் வழங்கி வாழ்வாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பெண்களைப் பொறுத்தவரையில் அவர்கள் இல்லத்தரசிகளாக இருப்பதில் பெருமை கொள்கின்றனர். இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.