சூர்யாவுக்கு ஆதரவு.. ஆளும் அரசுக்கு கண்டனம்... கமல்ஹாசன் 'தெறி' ட்வீட்
சென்னை: சூர்யா மீது அவதூறு பேசி வரும் ஆளும் அரசுகளின் ஆதிக்கப் போக்கினை கண்டிப்பதாக மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
சிவகுமார் கல்வி அறக்கட்டளை சார்பாக கடந்த சனிக்கிழமை சாலி கிராமத்தில் நடைபெற்ற பரிசு வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சூர்யா மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை அம்சங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார். மேலும் 'அனைவருக்கும் சமமான கல்வியை வழங்காமல் நீட் போன்ற நுழைவு தேர்வுகள் நடத்துவது ஏன்?' என்று கேள்வியெழுப்பி நீட் தேர்வையும் விமர்சித்திருந்தார்.
சூர்யாவின் இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு ஆதரவாகவும், எதிராகவும் பிரபலங்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில் கமல்ஹாசன் ட்விட்டரில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏழை மற்றும் நடுத்தர மாணவ, மாணவியரின் கல்வி மேம்பாட்டிற்காக தம்பி சூர்யா மற்றும் அவரது குடும்பத்தார் பல வருடங்களாக உதவி செய்து வருகிறார்கள். எனவே கல்வி குறித்து பேசுவதற்கான உரிமை சூர்யாவுக்கு உண்டு.
அன்புத் தம்பி @Suriya_offl அவர்களுக்கு எனது ஆதரவு கண்டிப்பாக உண்டு. pic.twitter.com/8chbBdQ3hM
— Kamal Haasan (@ikamalhaasan) July 16, 2019
புதிய கல்விக் கொள்கை குறித்த தம்பி சூர்யாவின் கருத்துகள் பலவற்றில் எனக்கும் உடன்பாடு உண்டு. மக்களின் கருத்தை அறிவதற்காக என்று சொல்லப்பட்டு வெளியிடப்பட்டிருக்கின்ற 'வரைவு அறிக்கை' மீது, கருத்து சொன்னதற்காக சூர்யா மீது அவதூறு பேசி வரும் ஆளும் அரசுகளின் ஆதிக்கப் போக்கினை மக்கள் நீதி மய்யம் வன்மையாக கண்டிக்கிறது. தம்பி சூர்யாவிற்கு எனது ஆதரவு கண்டிப்பாக உண்டு என்று குறிப்பிட்டுள்ளார்.