பொருள் ஈட்டும் போட்டியில் விவசாயிகளை பகடைக்காயாக்காதீர்கள்.. மின்சார சட்ட திருத்தம் குறித்து கமல்
சென்னை: விவசாயிகளை வஞ்சித்த தேசங்களின் நிலை என்ன என்பதை சரித்திரம் படித்திருந்தால் உண்மை புரிந்திருக்கும். எனவே விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்தை நிறுத்திவிடாதீர் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து கமல்ஹாசன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறுகையில் உலகமே பசுமை விவசாயத்தை நோக்கி திரும்பிக் கொண்டிருக்கும் வேளையில், தமிழக விவசாயிகளை 8 வழிச்சாலை, நெடுவாசலில் ஹைட்ரோகார்பன், கொள்முதல் விலை, கடன் பிரச்சினை, மின்சார சட்ட திருத்த மசோதா - 2020 என போராடிக் கொண்டேயிருக்கும் நிலையில் வைத்திருப்பது யார் தவறு?
விவசாயிகளுக்கு எதிராக புது சட்ட திருத்தங்கள் வருகிறது என கவலையும், பயமும் அவர்களிடம் அதிகம் இருக்கிறது. வெற்று நிலத்தை விளைநிலமாக்கி, உணவும், உடையும், பொருளாதாரத்தின் அடித்தளத்தையும் கட்டமைக்கும் விவசாயிகள் தான் நம் பலம், நலம், எதிர்காலம் எல்லாம். அதை நாம் பல முறை உறுதிப்படுத்தி கொண்டே இருக்கிறோம்.
சாத்தான்குளம் ஜெயராஜ் மகளுக்கு அரசுப் பணி - வேதனையில் இருந்து மீள வேலை கொடுத்த அரசு
விவசாயிகள்
மின்சார சட்ட திருத்த மசோதா - 2020, விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரத்தை குறிவைக்கிறது. பல்லாண்டு போராட்டங்களுக்கு பின் விளைவிப்பவர்களுக்கு கிடைத்திருக்கும் உதவி இலவச மின்சாரம். கடந்த 4 வருடங்களாக புதிய இணைப்புக்களை வழங்காமல், தட்கல் முறையில் மட்டுமே 4 இலட்சம் ரூபாய் கட்டி, புதிய இணைப்பு எடுக்கும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.
வழிகள்
மூலப்பொருட்கள் விலை உயர்வு, தண்ணீர் தட்டுப்பாடு, நிலையில்லா கொள்முதல் விலை என ஏற்கனவே பலமுனைகளில் போராடிக் கொண்டிருக்கும் விவசாயிகள் மேல் இந்தச் சுமையையும் ஏற்றத் துடிக்கிறது இந்த அரசு. இலாபகரமாக அரசை நிர்வகிக்க முடியவில்லை என்றால் அதைச் சரிசெய்ய வழிகளைக் கண்டறிய வேண்டும்.
மின்சார சட்ட திருத்தம்
விவசாயிகளுக்கு வழங்கப்படும் சிறு உதவியை உங்களின் நிர்வாகத்திறமை இன்மையால் நிறுத்தி விடாதீர்கள். விவசாயிகளை வஞ்சித்த தேசங்களின் நிலை என்ன என்பதை சரித்திரம் படித்திருந்தால் புரிந்திருக்கும். விளைவிப்பவர்களின் வாழ்க்கைப் போராட்டத்தை அதிகப்படுத்தாமல், அவர்களை சிரமத்தில் ஆழ்த்தும் மின்சார சட்ட திருத்த மசோதா - 2020ஐ திரும்ப பெற வேண்டும்.
உரிமை
பெயரளவில் பாதிப்புக்கள் வராது என அறிவிக்காமல் அதை அரசு உத்தரவாக செயல்படுத்த வேண்டும். பொருள் ஈட்டும் உங்கள் போட்டியில் விவசாயிகளை பகடைக் காய் ஆக்காதீர்கள். விவசாயிகளுக்காக, அவர்களது உரிமையை பாதுகாக்க, எம் குரலும் ஓயாது ஒலிக்கும் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.