ஒரே ஒரு கையெழுத்திற்காக கால் நூற்றாண்டாக போராடும் அற்புதம்மாள்.. பிக்பாஸில் நெகிழ்ந்த கமல்
சென்னை: ஒரு தாயின் போராட்டத்தை மிகவும் அற்புதமாக விளக்கினார் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன்.
கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியாளரை அறிவிக்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றது. கடைசியாக தங்கிய 5 போட்டியாளர்களில் சோம், ரம்யா பாண்டியன், ரியோ ஆகியோர் வெளியேற்றப்பட்டனர்.
மூன்றாவது இடத்தை பிடித்த ரியோவின் முகம் வாடி கிடப்பதை கவனித்து கமல்ஹாசன் கூறுகையில் உங்கள் கண்களிலும் மனதிலும் ஒளிவும் தெளிவும் வர வேண்டும்.
நிறைய அம்மாக்கள்
அதற்கு உங்கள் அம்மாவின் மடியில் படுத்துக் கொள்ளுங்கள். தலை தெளிவாகிவிடும். அம்மாக்களுக்கு அது மாதிரியான ஒரு மேஜிக் உள்ளது. இங்கேயே நான் சில அற்புதமான அம்மாக்களை பார்த்தேன். இது தாய்களுக்கே உரித்தான ஒரு அற்புதம். பிள்ளைகளுக்காக அவர்கள் சில விஷயங்களை சொல்வார்கள்.
அற்புதம்
அது அவர்கள் சொன்னால் மட்டுமே புரியும். அற்புதம் என என் வாயில் வந்துவிட்டது. தனது பிள்ளைக்காக கிட்டதட்ட கால் நூற்றாண்டாக அற்புதம்மாள் காத்து கொண்டிருக்கிறார், ஒரு கையெழுத்துக்காக... மூச்சிருக்கும் வரை நான் போராடுவேன் என காத்து கொண்டிருக்கிறார்கள்.
|
போராட்டம்
அது போன்ற அம்மாக்கள் கடைசி மூச்சு இருக்கும் வரை போராடுவார்கள், அவர்கள் மடியில் படுத்துக் கொள்ளுங்கள் என்றார் கமல்ஹாசன். ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளனின் விடுதலைக்காக அவரது தாய் நடத்தும் போராட்டத்தை மிகவும் அற்புதமாக விளக்கினார் கமல்.
அற்புதமான போராட்டம்
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை முடிந்து இன்னும் சிறையில் இருக்கும் பேரறிவாளன் உள்ளிட்டோரை விடுதலை செய்ய வேண்டும் என அற்புதம்மாள் கடுமையாக போராடி வருகிறார். கருணாநிதி, ஜெயலலிதா, எடப்பாடி பழனிச்சாமி என முன்னாள் மற்றும் இன்னாள் முதல்வர்களிடம் போராடியவர்.