டாஸ்மாக்ல வட்டம் போட்டா.. அதுல செருப்பை வச்சிட்டு.. இவங்க நிழல்ல கும்பலா கூடி நின்னுகிறாங்க.. கமல்
சென்னை: டாஸ்மாக் கடைகளில் சமூக இடைவெளிக்காக வட்டம் போட்டு வச்சா அதுல செருப்பை வச்சிட்டு குடிக்காரர்கள் பூரா நிழல்ல போய் கும்பலா நிற்கிறார்கள் என பிக்பாஸில் கமல்ஹாசன் நகைச்சுவையாக தெரிவித்தார்.
பிக்பாஸ் எனும் பொழுதுபோக்கு நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பப்படுகிறது. இதில் சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் கமல்ஹாசன் வருகை தந்து பிக்பாஸ் குறித்து பேசுவார். நிகழ்ச்சியின் ஊடே அரசியல் குறித்தும் அவர் பேசுவது வழக்கம்.
குற்றச்சாட்டு
அந்த வகையில் அவர் இன்றைய தினம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவர் சமூக இடைவெளி குறித்து பேசினார். டாஸ்மாக் கடைகளில் சமூக இடைவெளி காற்றில் பறக்கவிடப்படுவதாக ஏற்கெனவே எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகிறார்கள்.
கோடுகள்
இந்த நிலையில் அவர் இன்றைய தினம் சமூக இடைவெளி குறித்து பேசுகையில் மக்கள் ஒருத்தரோடு ஒருத்தர் உரசிக் கொண்டு நிற்கக் கூடாது என்பதற்காகத்தான் கடைகள், டாஸ்மாக் கடைகள், பஸ் நிலையம், உள்ளிட்ட இடங்களில் சமூக இடைவெளிக்கான வட்டங்கள், கட்டங்கள் கோடுகள் போடப்படுகின்றன.
மது வாங்க
ஆனால் அந்த வட்டங்களில் செருப்பை கழற்றி இடம் பிடித்துவிட்டு மது வாங்க வருவோர் நிழலில் போய் கூட்டமாக நின்று கொள்கிறார்கள். இப்படி இருந்தால் கொரோனா எப்படி பரவாமல் இருக்கும் என நகைச்சுவையாக கேள்வி எழுப்பினார். பள்ளிகள், கல்லூரிகள் இன்னும் திறக்கப்படாத நிலையில் டாஸ்மாக் கடைகள் மட்டும் திறந்தது ஏன் என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
பண்டிகை காலங்கள்
ஆனாலும் டாஸ்மாக் திறக்கப்பட்டு விற்பனை ஜரூராக நடைபெற்று வருகிறது. தீபாவளி, பொங்கல், ஆங்கில புத்தாண்டு ஆகிய பண்டிகைகள் வரவிருக்கின்றன. இந்த பண்டிகை காலங்களில் டாஸ்மாக் விற்பனை களைகட்டும். கொரோனா ஊரடங்கில் விட்டதை பிடித்து விட வாய்ப்பிருப்பதாக கூறுகிறார்கள். என்ன நடக்கிறது என்பதை பார்ப்போம்.