10 சதவீதம் வாக்குகள் கிடைக்கும்.. நான் கூட்டணி அமைக்க விரும்பும் கட்சி கம்யூனிஸ்ட்கள்தான்- கமல்
Recommended Video
சென்னை: எங்கள் கட்சிக்கு 5 சதவீதம் வாக்குகள் கிடைக்கும் என அரசியல் ஆலோசகர்கள் கூறுகின்றனர். ஆனால் நாங்கள் சொல்கிறோம் எங்கள் கட்சிக்கு 10 சதவீதம் வாக்குகள் கிடைக்கும் என கமல்ஹாசன் தெரிவித்தார்.
இதுகுறித்து டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழுக்கு அவர் பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் அவர் கூறிய பதில்களும் பின்வருமாறு:
கேள்வி: இந்த தேர்தலில் பிரசாரம் செய்வது கடினமாக இருந்ததா?
பதில்: தேர்தல் பிரசாரம் செய்வது கடினமாக இல்லை. இதை விட சினிமாவில் பணியாற்றியது மிகவும் கடினம். அங்கு வெயிலில் பணியாற்றுவது, பயணம் மேற்கொள்வது, வில்லன்களுடன் மோதுவது, கதாநாயகியுடன் நடனம் ஆடுவது என்றிருக்கும். ஆனால் இங்கு வில்லன்களுடன் (எதிர்க்கட்சி வேட்பாளர்கள்) மோதுவது என்றாலும் அது அமைதியான முறையில் மோத வேண்டியதாகியுள்ளது. நான் நடிகராக இருந்ததை விட தற்போது எனக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
வேலூர் தொகுதி வாக்காளர்களுக்கு ரூ. 500.. அதிமுக முன்னாள் எம்எல்ஏ அறிவுரை- வீடியோ வெளியீடு!
ஆசிட் டெஸ்ட்
கேள்வி: உங்கள் எதிர்காலத்திற்கு இந்த தேர்தல் ஆசிட் டெஸ்டா
பதில்: நான் டுவிட்டரிலிருந்து நேரடி அரசியலுக்கு வந்தவுடன் ஆசிட் டெஸ்ட் முடிந்துவிட்டது. நான் மனதளவில் ஏற்படுத்திக் கொண்ட ஆசிட் டெஸ்ட் அது.
கேள்வி: இந்த தேர்தலில் மக்கள் நீதி மய்யத்தின் செயல்பாடு குறித்து நீங்கள் மதிப்பிடுவது என்ன?
பதில்: நாங்கள் எதிர்பார்த்ததைவிட களநிலவரம் நன்றாக இருந்தது. 5 சதவீதத்தைவிட வாக்குகளை பெற்றால் நீங்கள் ஆட்டத்தில் உள்ளதாக அர்த்தம் என அரசியல் நிபுணர்கள் தெரிவித்தனர். எங்களுக்கு கிடைப்பதை வைத்துக் கொண்டு திருப்தி அடைவதில் எனக்கு விருப்பம் இல்லை. பணம் இல்லாமல் நிறைய வாக்கு சதவீதத்தை பெற நாங்கள் கடினமாக உழைத்துள்ளோம். எனவே 10 சதவீதம் வாக்குகளை பெறுவோம் என நினைக்கிறேன்.
கூட்டணி
கேள்வி: 10 சதவீதம் வாக்கு பெறுவது என்பது வெற்றியாகாது. ஆனால் இது சட்டசபை தேர்தலுக்கு போதுமான சதவீதம் ஆகும். எனவே மக்கள் நீதி மய்யம் கூட்டணிக்கு தயாராகிறதா?
பதில்: பார்ப்போம். இவர்களுடன் கூட்டணி வைக்க நான் விரும்பவில்லை, நாங்கள் யாருடன் செல்கிறோமோ அதை பொருத்தது. கம்யூனிஸ்ட் கட்சிகள் மீது எனக்கு மரியாதை உண்டு. ஆனால் தமிழகத்தில் அவர்கள் சரியான முடிவை எடுத்ததில்லை. அவர்களுடன் கூட்டணி வைக்கத்தான் நான் உண்மையில் விரும்புகிறேன். அதிமுக, திமுகவை பொருத்தவரை மக்கள் சொல்வது தமிழக அரசியல் தீண்டத்தகாத கட்சிகள் என்றில்லை. இங்கு நாம் மனிதர்களின் குணாதிசயத்தை பற்றி பேசவில்லை. எனவே அதிமுக, திமுகவை விட்டு விலகி இருக்க விரும்புகிறேன்.
தந்தையுடன் பழக்கம்
கேள்வி: அரசியலுக்கு வருவதற்கு முன்னர் மு.க.ஸ்டாலினுடன் ஒரே மேடையை பகிர்ந்து கொண்டீர்கள். தற்போதைக்கு அவருடனான உங்கள் உறவு எப்படியிருக்கிறது?
பதில்: அவரது தந்தையுடன் நான் நெருக்கமாக இருந்ததை போல் எனக்கு ஸ்டாலினுடன் நெருக்கம் இல்லை. அவரது தந்தையை சந்தித்ததை காட்டிலும் மிக குறைந்த அளவிலேயே அவரை நான் சந்தித்துள்ளேன். எனினும் நான் எப்போது அவரை சந்தித்தாலும் என்னை அன்பாகவும் கண்ணியமாக விசாரிப்பார். நானும் அதையே அவரிடம் காட்டுவேன். இதுதான் எங்களுக்குள் இருக்கும் உறவு.
கசப்புணர்வு
கேள்வி: எதிர்க்கட்சியினரின் பேச்சை கேட்டு டிவி ரிமோட்டை தூக்கி அடிப்பீர்கள். கசப்புணர்வுதான் காரணமா
பதில்: நான் திரும்பவும் டிவி ரிமோட்டை தூக்கி அடிப்பேன். அது தனிநபர் தாக்குதலாக இருக்காது. அப்போதெல்லாம் உருவபொம்மையை எரித்தீர்களே. இதை ஏன் செய்யக் கூடாது. நான் அரசியலுக்கு வந்த போது கசப்புணர்வு இருந்தது. ஆனால் தற்போது மக்களை சந்தித்த பிறகு நம்பிக்கை வந்துவிட்டது.
அரசியல் பாணி
கேள்வி: இந்த ஆக்ரோஷம்தான் உங்கள் அரசியல் பாணியா
பதில்: நான் காந்தியடிகளின் மிகப் பெரிய ரசிகன். அவர் செய்த ஆக்ரோஷ அரசியல் தான் என்னுடையதும். ஆக்ரோஷம் என்பது என்னுடைய பேச்சில் தான் இருக்கும். நேர்மை இருக்கும் இடத்தில் ஆக்ரோஷம் இருக்கும். இந்த கோபம், ஆக்ரோஷம் என்பதை நம்முடைய செய்தியை வலுவாக கொண்டு சேர்க்க மட்டுமே பயன்படுத்துவேன்.
நம்பிக்கை
கேள்வி: கேரளா முதல்வர் பினராயி விஜயன் மற்றும் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலின் அறிவுரையை ஏற்றுள்ளீர்கள்
பதில்: நீண்ட தூரம் பயணிக்க தயார் என்றால் மட்டும் அரசியலுக்கு வாருங்கள் என பினராயி என்னிடம் அறிவுறுத்தினார். கேஜரிவாலோ, நாங்கள் செய்துவிட்டோம். உங்களாலும் முடியும் என்றார். மக்கள் நீதி மய்யத்தின் பொதுக் கூட்டத்தின்போது கமல்ஹாசனுக்கு வாக்களிக்குமாறு கேஜரிவால் கேட்டு கொண்டார். அவர்தான் எனக்கு நம்பிக்கையை கொடுத்தார்.
அடிப்படை தளம்
கேள்வி: நீங்கள் எதிர்பார்த்த 10 சதவீதத்துக்கும் குறைவான அல்லது 5 சதவீத வாக்கு பெற்றால் என்ன செய்வீர்கள்?
பதில்: நான் நீண்ட பயணத்துக்கு தயாராகி தான் வந்துள்ளேன். என் எஞ்சிய முழு வாழ்க்கையையும் அரசியலுக்காக அர்ப்பணித்துவிட்டேன். இந்த நாடாளுமன்ற தேர்தல் என்பது அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலுக்கான அடிப்படை தளம் தான்.
பலம் பலவீனம்
கேள்வி: ஒரு அரசியல்வாதியாக உங்கள் பலம், பலவீனம் என்ன?
பதில்: என்னுடைய பலம் என்பது அரசியல்வாதிகளை மாற சொல்லாமல் மக்களிடத்தில் இருந்து மாற்றங்களை தொடங்குவது. நான் எப்போதுமே என் கட்சியின் தலைவராக நினைப்பது அல்ல. துணைத்தலைவர் தான். தலைவராக நினைப்பது மர்பியின் விதியைத் தான். அந்த விதியில் கூறப்பட்டு இருப்பது என்ன என்றால் தவறாக சென்றுவிடும் என்று நினைத்தால் அது தவறாகவே சென்று முடியும் என்றார்.