தேர்தலில் ஒரு பைசா கூட கட்சி செலவு செய்யாது.. கமல் கறார்.. ஆண்டவரையே அதிர செய்த தொண்டர்கள்
சென்னை: தேர்தலில் ஒரு பைசா கூட கட்சி செலவு செய்யாது என நேர்காணலின் போது கறாராக கூறிய கமல்ஹாசன். காசு கொடுக்காமலேயே வெற்றி நமதே என விருப்பமனுவுக்கு வந்தவர்கள் சொல்லிவிட்டு போயுள்ளார்களாம்.
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து தேர்தல் களம் பரபரப்பாகியுள்ளது. தொகுதி பங்கீடு, கூட்டணி பேச்சுவார்த்தை, விருப்ப மனு, வேட்பாளர் நேர்காணல் என களமே சூடாகியுள்ளது.
நாம் தமிழர் கட்சி சீமான் ஒரு படி மேலே போய் தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்னரே 234 வேட்பாளர்களையும் தேர்வு செய்துவிட்டார்,வரும் 7-ஆம் தேதி அறிவிக்க போகிறார்.
கூட்டணி
அந்த வகையில் அதிமுக திமுகவை போல் மக்கள் நீதி மய்யம் கட்சி கூட்டணி பேச்சுவார்த்தையில் மும்முரம் காட்டி வருகிறது. சரத்குமாரும், பாரிவேந்தரும் அதிமுக, திமுக கூட்டணியிலிருந்து விலகிவிட்டார்கள். இவர்கள் இருவரும் கமல்ஹாசனை சந்தித்து பேசினார்கள். இன்னும் கூட்டணி குறித்து கமல்ஹாசன் முடிவு செய்யவில்லை.
நிர்வாகக் குழு
இ்நத நிலையில் மக்கள் நீதி மய்யம் சார்பாக போட்டியிட விரும்புபவர்களிடம் விருப்ப மனுக்களைப் பெற்று வேட்பாளர்களை நேர்காணல் செய்யும் பணிகள் வேகமெடுத்துள்ளன. இன்று காலை கட்சியின் பொதுச் செயலாளர், நிர்வாகக் குழு, செயற்குழு உறுப்பினர்களை கமல் நேர்காணல் செய்தார்.
தொகுதி பிரச்சினை
அப்போது உங்களுக்கு தேவையான தேர்தல் செலவுகளை நீங்களேதான் செய்து கொள்ள வேண்டும். கட்சி செலவு செய்யாது என கமல் கூறிவிட்டார். பின்னர் தொகுதிக்கு தேவையானவை குறித்து வேட்பாளர்களிடம் கேள்வி எழுப்பி அதன் மூலம் விருப்பமனு தாக்கல் செய்ய வந்தவர்கள் போட்டியிட விரும்பும் தொகுதி பிரச்சினை குறித்து என்ன தெரிந்து வைத்திருக்கிறார்கள் என்பது குறித்தும் தெரிந்து கொண்டார்.
வெற்றி நமதே
எத்தனை நாட்கள் அந்த தொகுதியில் வசித்து வருகிறார்கள் என்பது குறித்தும் கமல் கேட்டறிந்தார். மேலும் வாக்குக்கு பணம் கொடுப்பதை தான் ஒரு போதும் அனுமதிக்க மாட்டேன் என்பதையும் கமல்ஹாசன் தெளிவாக சொல்லிவிட்டாராம். மய்யத்தினரும் காசு கொடுக்காமலேயே வெற்றி நமதே என கமலிடம் சொல்லி ஆச்சரியப்படுத்தினராம்.