தமிழ் மக்களை வெளிச்சத்திற்கு இட்டு செல்வேன்.. "டார்ச்லைட்" அடித்து... சிம்பாலிக்காக சொன்ன கமல்!
சென்னை: இருண்டு கிடக்கும் தமிழகத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வர நான் இருக்கிறேன் என்பதை சிம்பாளிக்காக காட்ட பிக்பாஸ் போட்டியாளர்களை இருட்டில் இருந்து டார்ச் அடித்து அழைத்து சென்று தொண்டர்களை உற்சாகப்படுத்தியது.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் டார்ச்லைட் சின்னத்தில் போட்டியிட்டார். இருண்டு கிடக்கும் தமிழகத்தை வெளிச்சத்திற்கு அழைத்து வர இது உதவும் என்பதை போல் சின்னம் சிம்பாளிக்காக கூறுவதால் கமல் மகிழ்ந்தார்.
இந்த நிலையில் சட்டசபை தேர்தலிலும் இந்த சின்னமே வேண்டும் என விண்ணப்பித்திருந்தார். ஆனால் அந்த சின்னத்தை வேறு ஒரு அமைப்பு பதிவு செய்து விட்டதால் கமல் கட்சிக்கு வேறு ஒரு சின்னம் ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
சின்னம்
ஆனால் டார்ச்லைட் சின்னம் வைத்திருந்த அமைப்பு திடீரென தனக்கு அந்த சின்னம் வேண்டாம் என கூறிவிட்டது. இதையடுத்து கமல்ஹாசன் கட்சிக்கு மீண்டும் டார்ச் லைட் கிடைத்துள்ளது. இதனால் கமல்ஹாசன் புத்துணர்ச்சியுடன் தனது கால் வலியையும் பொருட்படுத்தாமல் பிரச்சாரம் செய்து வந்தார்.
கோர்த்த கைகள்
அது போல் அவரது கட்சியின் சின்னமான கோர்த்த கைகளும், அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதையே காட்டுகிறது. இந்த நிலையில் நேற்று பிக்பாஸ் இறுதி போட்டியாளரை அறிவிக்கும் நிகழ்வு நசரத்பேட்டையில் உள்ள ஒரு அரங்கில் நடைபெற்றது.
விளக்குகள் அணைப்பு
பிக்பாஸ் வீட்டில் கடைசியாக தங்கியிருக்கும் போட்டியாளர்களை கமல்ஹாசன் அழைத்து கொண்டு மேடைக்கு வருவது வழக்கம். அது போல் வீட்டில் கடைசியாக தங்கியிருந்த பாலாஜியையும் ஆரியையும் கமல்ஹாசன் அழைத்து கொண்டு வர பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றார். அப்போது பிக்பாஸ் வீட்டின் விளக்குகள் அணைக்கப்பட்டது.
வெளிச்சம்
அந்த சமயம் கமல் விளக்குகள் அணைத்து விட்டதால் இருட்டாக இருக்கிறதே என நினைக்க வேண்டாம் என கூறிக் கொண்டே தனது கையில் இருந்த டார்ச்லைட்டை ஆன் செய்து அந்த வெளிச்சத்தில் அவர்களை அழைத்து சென்றார். இது பார்ப்பதற்கு இருண்டு கிடந்த தமிழகத்தையும் இதே போல் வெளிச்சத்திற்கு அழைத்து செல்ல நான் இருக்கிறேன் என கமல் சொல்லாமல் சொன்னது போல் இருந்தது.