விஸ்வரூபம் எடுக்கும் கமல்ஹாசன்.. ஸ்ட்ரெயிட்டா பாயிண்டுக்கு வந்துட்டாரு.. ஆடிப்போன அதிமுக!
சென்னை: அரசியலில், எங்கே தொட்டால் எங்கே ஷாக் அடிக்கும் என்ற வித்தை தெரிந்தவர் கமல்ஹாசன் என்று புன்முறுவலுடன் பேச்சை ஆரம்பிக்கிறார்கள், கமலுக்கு நெருக்கமானவர்கள்.
Recommended Video
காரணம் இருக்கிறது. கடந்த பல ஆண்டுகளாகவே அவர் அதிமுகவை கையாளும் விதம் இதற்கு நல்ல உதாரணம். மக்கள் நீதி மய்யம் தலைவராக உருவெடுத்த பிறகு, இப்போது தனது விஸ்வரூபத்தை காட்ட ஆரம்பித்துள்ளார் கமல்ஹாசன். தேர்தல் நாள் நெருங்க நெருங்க இவரின் விஸ்வரூபம்-2த்தை கூட பார்க்க வேண்டி வரும் அதிமுக என்கிறார்கள்.
தேர்தல் நெருங்கும் நிலையில், மதுரையில் இருந்து பிரச்சாரத்தை ஆரம்பித்தார் கமல்ஹாசன். இந்தியன்-2, விக்ரம் என இரு முக்கியமான படங்களை கையில் வைத்துக் கொண்டு இருக்கும் கமல் பிக் பாஸிலும் பிஸி. எனவே இப்போதைக்கு களத்துக்கு வர மாட்டார்கள் என்று கனவு கண்டவர்கள் நினைப்பு எல்லாம் புஸ்வானமாகிவிட்டது.
களமாடும் கமல்ஹாசன்
ஏதோ கடமைக்கு வந்ததை போல தெரியவில்லை கமலின் பரப்புரைகள். இது எனக்கான களம் என்று சொல்லியடித்து வருகிறார் ஆழ்வார்பேட்டை ஆண்டவன். போகுமிடமெல்லாம் கூட்டம் என்பதை வைத்து மட்டுமே ஒரு அரசியல்வாதியின் வெற்றி, தோல்வியை தீர்மானிக்க முடியாது என்பார்கள். அதையும் தாண்டிய செயல்பாடுகள்தான் முக்கியம். அங்கும் பாஸ் மார்க் வாங்கிவிட்டார் கமல்ஹாசன்.
கமலின் விஸ்வரூபம்
2013ம் ஆண்டு வெளியானது விஸ்வரூபம் திரைப்படம். இஸ்லாமியர் அமைப்புகள் எதிர்ப்பதால், சட்டம்-ஒழுங்கு கெட வாய்ப்புள்ளது என காரணம் சொல்லி, படத்திற்கு தடை விதித்தார் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா. அப்போதுதான் கமல்ஹாசனின் உண்மையான விஸ்வரூபத்தை தமிழகம் பார்த்தது.
ஒரே பேட்டி
பத்திரிக்கையாளர்களை கூட்டி வைத்து, கருத்து சுதந்திரம் குறித்து கிளாஸ் எடுத்தார் கமல்ஹாசன். இந்த படத்தை தாமதிப்பதால் பெரும் நஷ்டம் ஏற்படுவதாக அவர் கூற, ரசிகர்கள் வரிசையாக மணியார்டர் அனுப்பி வைத்து.. நாங்கள் இருக்கிறோம் என்று முன்னுக்கு வந்து நின்றனர். இந்த விவகாரம் இந்திய அளவில் மீடியாக்களில் பேசப்பட்டது. கமல்ஹாசனின் இந்திய அளவிலான புகழும் இதற்கு ஒரு காரணம்.
பதில் சொன்ன ஜெயலலிதா
எனவேதான், பத்திரிக்கையாளர்கள் சந்திப்புகளை தொடர்ந்து தவித்த ஜெயலலிதாவே, இறங்கி வந்து பத்திரிக்கையாளர்கள் சந்திப்பை நடத்த வேண்டிய நிலைமை உருவானது. விஸ்வரூபம் படத்தை தடை செய்தது அரசியல் பிரச்சினை அல்ல. அது முற்றிலும் சட்டம் ஒழுங்கு சம்பந்தப்பட்ட பிரச்சினையாகும் என்று ஜெயலலிதா தெரிவித்தார்.
பத்திரிக்கையாளர்களை சந்தித்த ஜெயலலிதா
விஸ்வரூபம் படம் திரையிடப்படும் 525 தியேட்டர்களுக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றால் குறைந்தது 56,440 போலீஸார் தேவைப்படுவார்கள். ஆனால் அது இயலாத காரியம். சில தியேட்டர்கள் என்றால் பரவாயில்லை, 525 தியேட்டர்களுக்குப் பாதுகாப்பு தருவது என்பது எப்படி முடியும் என விஜயகாந்த் ஸ்டைலில் தியேட்டர் புள்ளி விவரங்களையெல்லாம் குறிப்பிட்டு பேச வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார் ஜெயலலிதா.
யாரென்று தெரிகிறதா..
ஜெயலலிதாவின் எந்த முயற்சியும் பலிக்கவில்லை. விஸ்வரூபம் படத்தை திரையிட அனுமதி வழங்கியது உயர்நீதிமன்றம். "யாரென்று தெரிகிறதா.. இவன் தீயென்று புரிகிறதா.. தடைகளை வென்று சரித்திரம் படைத்தவன் ஞாபகம் வருகிறதா" என்று டைமிங்காக செய்தி தொலைக்காட்சிகளில் பின்னணி பாடலை ஒளிபரப்பி அந்த செய்தியை காட்டியதை அதிமுகவினர் அவ்வளவு எளிதில் மறந்திருக்க மாட்டார்கள்.
எம்ஜிஆர் வியூகம்
இப்போ விஷயத்திற்கு வருவோம். தேர்தல் நெருங்கும் நிலையில், எங்கே அடித்தால் வலிக்குமோ அங்கே ஓங்கியடிக்க ஆரம்பித்துவிட்டார் கமல். அதிமுகவின் அடிமடியிலேயே கை வைத்து எம்ஜிஆர் எனக்குச் சொந்தம் என்றாரே பார்க்கலாம்.. அப்படியே ஒரு நிமிஷம் ஆடிப்போனது ஆளும் தரப்பு. அதுவரை ஜெயலலிதா போட்டோக்களைத்தான் பெரும்பாலும் பயன்படுத்திய அதிமுக நிர்வாகிகள் பலரும், அவசர அவசரமாக இப்போது எம்ஜிஆர் படத்தையும் போட்டுக் கொண்டு உலவ வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
பிம்பம் உடைப்பு
இதேபோல, காஞ்சிபுரம் சென்றபோது அண்ணா வீட்டை பார்வையிட்டார் கமல்ஹாசன். இதெல்லாம் மரியாதை நிமித்தமான பேச்சுக்கள்.. அல்லது செயல்கள் மட்டுமில்லை. அண்ணா, எம்ஜிஆர் போன்ற பிம்பங்களின் பின்னால் அதிமுக தனது இமேஜை கட்டியெழுப்பியுள்ளது. இதை உடைப்பதுதான் கமல்ஹாசனின் முதல் வேலை என்கிறார்கள். எம்ஜிஆருக்கான ஓட்டு வங்கியில் கைவைத்தால் அது அதிமுகவுக்கு பெரிய இழப்பு. எனவேதான், இப்போதுள்ள அதிமுக தலைவர்களில் பலரும் எம்ஜிஆரை பார்த்திருக்க மாட்டார்கள், நான் மடியில் வளர்ந்தவன் என்கிறார் கமல். அப்பப்போ, எம்ஜிஆர் பாடல்களை டுவிட் செய்து, அதிமுக தரப்புக்கு அதிர்ச்சியை அடுத்தடுத்து கொடுத்து வருகிறார்.
அதிமுக அச்சம்
அதிமுக ஓட்டு வங்கியில் பெரிய ஓட்டையை போட கமல்ஹாசனின் இந்த யுக்திகள் பலன் தரும் என்பதோடு, திரை பிம்பங்களால் ஈர்க்கப்பட்டு பழகிய அதிமுக தொண்டர்களை கவர கமலால் முடியும் என்பதும் இதில் ஒரு பிளஸ். எம்ஜிஆருக்கு நான் செல்லப் பிள்ளை என்று கமல் நிறுவ முயலுவதால், ரஜினி கட்சி துவங்கினால் அவர் பக்கம் எம்ஜிஆர் ரசிகர்களில் ஒருசாரார் சரிவதையும் தடுத்து நிறுத்து இவர் பக்கம் கொண்டுவர உதவும் என்ற யுக்தியும் இருக்கிறது என்கிறார்கள். எனவேதான், அதிமுக தலைவர்கள் பலரும் கமலுக்கு பதில் சொல்ல ஆரம்பித்துள்ளனர். முதல்வர் எடப்பாடியாரும் கமலுக்கு பதில் சொன்னார் என்பதில் இருந்து கமலின் முக்கியத்துவத்தை ஆளும் தரப்பு அறிந்து வைத்துள்ளது என்பது நல்லாவே தெரிகிறது என்கிறார்கள் ம.நீ.ம கட்சியினர்.