தனித்துப் போட்டி- மக்கள் நீதி மய்யத்தின் அதிரடி முடிவு.. விஜயகாந்த் ஸ்டைலில் கமல்ஹாசன்
Recommended Video
சென்னை: நாடாளுமன்றத் தேர்தலில் தனித்து போட்டியிடுவது என மக்கள் நீதி மய்யம் எடுத்த முடிவை பார்க்கும் போது விஜயகாந்த் ஸ்டைலில் கமல்ஹாசன் அதிரடி காட்டுவதாக தெரிகிறது.
திரைப்படங்களில் எப்படி வித்தியாசமான பாணியை கமல் கையாண்டாரோ அது போல் அரசியலிலும் அவர் தனித்தே காணப்படுகிறார். கட்சி தொடங்கியது சரி, கட்சிக்கு கொடி வடிவமைத்ததும் சரி, பெயர் வைத்ததும் சரி. எல்லாவற்றிலும் அவர் சகலகலா வல்லவனாகவே இருக்கிறார்.
அதுபோல் பல அரசியல்வாதிகள் மறந்த கிராம சபை கூட்டங்களை அவர் தோண்டியெடுத்தார். அதை வலியுறுத்தினார். கிராமங்கள்தோறும் மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். மக்களுக்கு நம்பிக்கையூட்டும் பல்வேறு கருத்துகளை பகிர்ந்து கொண்டார்.
பேரங்கள்
இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் எல்லா கட்சிகளும் கூட்டணி பேரம், தொகுதி பங்கீடு என பிஸியாகி வருகின்றன. அதற்கு கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் மட்டும் விதிவிலக்கா என்ன? அவர்களும் கூட்டணி பேரத்தில் ஈடுபட்டு வருவதாக அறிவித்தனர்.
தனித்து போட்டி
இந்த நிலையில் கமல்ஹாசன் ஒரு ஆங்கில நாளிதழுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறுகையில் நாடாளுமன்றத்தின் 40 தொகுதிகளிலும் மக்கள் நீதி மய்யம் தனித்து போட்டியிடும். அதற்கான வலு எங்களிடம் உள்ளது. எனவே தனித்து களம் காண்போம் என கூறியுள்ளார்.
234 தொகுதிகளில் போட்டி
இதை பார்க்கும் போது விஜயகாந்த் காட்டிய வழியில் இவரும் பயணிக்கிறார் என்றே நினைக்க தோன்றுகிறது. கடந்த 2005-ஆம் ஆண்டில் கட்சி தொடங்கிய விஜயகாந்துக்கு அப்போது மோடி அலையை காட்டிலும் அதிக அலை வீசியது. இதன் காரணமாக 2006-ஆம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலில் அவர் தனித்து 234 தொகுதிகளிலும் போட்டியிட்டார்.
விஜயகாந்த் பாணி
அப்போது அவர் மட்டுமே சட்டசபை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார் என்ற போதிலும் அவர் பெற்ற வாக்கு சதவீதமோ அனைவரையும் மூக்கின் மீது விரல் வைக்க வைத்தது. எனவே முதல் முறையாக களத்தில் இறங்கும் கமல்ஹாசனும் இதே பாணியை கையாள்கிறாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது. எப்படி வொர்க் அவுட் ஆகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.