மணிரத்னம் உள்பட 49 பேர் மீது தேசதுரோக வழக்கு.. சுப்ரீம் கோர்ட் தலையிடணும்.. கமல்
சென்னை: பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியதற்காக மணிரத்னம், ரேவதி உள்பட 49 பேர் மீது தேசத் துரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தலையிட வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாம் நாட்டில் நடக்கும் கும்பல் வன்முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து இயக்குநர் மணிரத்னம், நடிகை ரேவதி, ராமச்சந்திர குஹா, அபர்ணா சென், திரைப்பட தயாரிப்பாளர் ஷியாம் பெனகல், பாடகர் சுபா முத்கல், வரலாற்று ஆய்வாளர் ராமச்சந்திர குகா, பிரபல வங்காள திரைப்பட நடிகர் சவுமித்ரா சாட்டர்ஜி, சமூக சேவகர் பினாயக் சென், சமூகவியலாளர் ஆஷிஷ் நந்தி, நடிகர் அனுராக் காஷ்யப் உள்பட 49 பிரபலங்கள் பிரதமர் மோடிக்கு கடந்த ஜுலை மாதம் கடிதம் எழுதினர்.
சினிமா, கலை, இலக்கியம், அறிவியல், மருத்துவம் உட்பட பல்வேறு துறையைச் சேர்ந்த இந்தியாவின் முக்கிய பிரபலங்கள் எழுதிய இந்த கடிதம் இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
நீதிமன்றம் அதிரடி உத்தரவு
இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம், பீகாரைச் சேர்ந்த வழக்கறிஞர் சுதிர்குமார் ஓஜா என்பவர், பிரதமருக்கு கடிதம் எழுதிய பிரபலங்கள், நாட்டினுடைய நற்பெயரை கெடுப்பதாகவும் பிரிவினைவாதத்தை ஊக்குவிப்பதாகவும் கூறி, வழக்கு தொடர்ந்தார். இதைத்தொடர்ந்து, கடந்த ஆகஸ்ட் 20-ம் தேதி பீகார் நீதிமன்றம் இந்த மனுவை ஏற்றுக்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்குமாறு பீகார் மாநில போலீசுக்கு உத்தரவிட்டது.
மத உணர்வை புண்படுத்துதல்
இதையடுத்து இயக்குனர் மணிரத்னம், நடிகை ரேவதி உள்பட 49 பிரபலங்கள் மீது தேசத்துரோகம், பொதுமக்களுக்கு தொந்தரவு விளைவித்தல், மத உணர்வுகளை புண்படுத்துதல், அமைதியை குலைக்கும் வகையில் பேசுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் பீகார் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
பிரபலங்கள் கண்டனம்
இந்த வழக்குப் பதிவு இந்தியத் திரையுலகப் பிரபலங்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாகத் தமிழ் திரையுலகப் பிரபலங்கள்,அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்ட பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
|
மோடியின் விருப்பம்
இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசன், தனது ட்விட்டர் பதிவில், "இணக்கமான இந்தியாவையே பிரதமர் விரும்புகிறார். பாராளுமன்றத்தில் பிரதமரின் அறிக்கைகளும் அதை உறுதி செய்கின்றன. அதை மாநிலங்களும் அதன் சட்டங்களும் பின்பற்ற வேண்டாமா? பிரதமரின் ஆசைக்கு முரணாக என் சக கலைஞர்கள் 49 பேர் மீது தேசத் துரோக குற்றச்சாட்டினை பதிவு செய்துள்ளார்கள்.
|
வேண்டுகோள்
நம் உச்ச நீதிமன்றம் இதில் தலையிட்டு, ஜனநாயகத்தை நிலைநிறுத்தும் வண்ணம், பீகாரிலிருந்து போடப்பட்ட இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என ஒரு குடிமகனாக வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்" என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.