இல்லாத ஊசிக்குப் பொல்லாத வாக்குறுதிகள்.. கொரோனா தடுப்பூசி குறித்து கமல்ஹாசன் சாடல்
சென்னை: கொரோனா தடுப்பூசி தொடர்பான வாக்குறுதிகளை மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் கடுமையாக சாடியுள்ளார்.
தமிழகத்தில் அனைவருக்கும் கொரோனா இலவச தடுப்பூசி போடப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பு வெளியான சில நாட்களில் பீகார் தேர்தல் களத்தில் கொரோனா தடுப்பூசி முக்கிய இடம் பிடித்தது.
சென்னையில் 3-ல் ஒருவருக்கு கொரோனா எதிர்ப்பு சக்தி - செரோ ஆய்வில் அதிர்ச்சி
நிர்மலா சீதாராமன் அறிவிப்பால் சர்ச்சை
பீகார் சட்டசபை தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால் மாநிலத்தில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருந்தார். இது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையாக வெடித்திருக்கிறது.
கமல்ஹாசன் கருத்து
இந்த சர்ச்சைகள் குறித்து மக்கள் நீதி மய்யத்தின் முதல்வர் வேட்பாளரான நடிகர் கமல்ஹாசன் பதிவிட்டுள்ளதாவது: நாங்களே வந்தால் தடுப்பூசி என்கிறார் இவர். எங்களோடு வந்தால் தடுப்பூசி என்கிறார் அவர்.
வாக்குறுதிகள் அல்ல
இல்லாத ஊசிக்குப் பொல்லாத வாக்குறுதிகள். ஐயா ஆட்சியாளர்களே... தடுப்பூசி என்பது உயிர் காக்கும் மருந்து. அள்ளித் தெளிக்கும் வாக்குறுதியல்ல.
மக்களால் தீர்மானிக்கப்படும்
மக்களின் ஏழ்மையுடன் விளையாடிப் பழகிவிட்ட நீங்கள், இன்று அவர்கள் உயிருடனும் விளையாடத் துணிந்தால், உங்கள் அரசியல் ஆயுள் மக்களால் தீர்மானிக்கப்படும். இவ்வாறு கமல்ஹாசன் கூறியுள்ளார்.