மோடியின் திட்டம் நடுத்தர, அடித்தட்டு ஏழை மக்களுக்கு பலனளிக்குமா? காலத்தே கிடைக்குமா? கமல்ஹாசன்
சென்னை: பிரதமர் மோடி அறிவித்திருக்கும் ரூ20 லட்சம் கோடி தற்சார்பு பொருளாதார திட்டத்தால் நடுத்தர, அடித்தட்டு ஏழை மக்களுக்கு பலனளிக்குமா? என்பதை நாடு கவனித்துக் கொண்டிருக்கிறது என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று பரவுவதைத் தடுக்க நாடு முழுவதும் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது லாக்டவுன் கட்டுப்பாடுகள் பெருமளவு தளர்த்தப்பட்டும் உள்ளன.
இந்த நிலையில் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி நேற்று உரையாற்றினார். அப்போது ரிசர்வ் வங்கி அறிவித்தது உட்பட ரூ20 லட்சம் கோடி மதிப்பிலான தற்சார்பு பொருளாதார திட்டங்கள் செயல்படுத்தப்படும் என மோடி அறிவித்தார்.
பிரதமர் மோடியின் இந்த அறிவிப்பு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை நேற்றே உடனடியாக தமது ட்விட்டர் பக்கத்தில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் வரவேற்றிருந்தார்.
இந்த நிலையில் இன்று காலை மீண்டும் தமது ட்விட்டர் பக்கத்தில் இதுபற்றி கமல்ஹாசன் பதிவிட்டுள்ளார். அதில், உணவின்றி அழும் குழந்தைக்கும், பணமின்றி தவிக்கும் ஏழைக்கும், இப்போதேனும் அறிவித்திருக்கும் பிரதமரின் திட்டத்தை வரவேற்கிறோம். அதேநேரம் நடுத்தர, அடித்தட்டு ஏழை மக்களுக்கும் இத்திட்டம் பலனளிக்குமா? காலத்தே கிடைக்குமா என நான் மட்டுமல்ல ஒட்டுமொத்த நாடும் கவனித்துக் கொண்டிருக்கிறது என குறிப்பிட்டுள்ளார் கமல்ஹாசன்.
புதுச்சேரியில் மேலும் ஒருவருக்கு கொரோனா- பாதிப்பு எண்ணிக்கை 18 ஆக அதிகரிப்பு