நீங்கள் வாங்க.. வந்து பார்வையிடுங்கள்.. அப்பதான் அரசு சக்கரம் வேகமாக சுழலும்- கமல்
Recommended Video
சென்னை: புயல் பாதித்த இடங்களை பிரதமர் நரேந்திர மோடி பார்வையிட வேண்டும். அப்போது அரசு சக்கரம் வேகமாக சுழலும் என கமல்ஹாசன் பேசியுள்ளார்.
கஜா புயலால் டெல்டா மாவட்டங்களில் மீளா துயரில் ஆழ்ந்துள்ளனர். அந்தளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ள நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இன்னும் சேதத்தை பார்வையிடவில்லை என்பது தமிழகத்தில் கடும் விமர்சனங்களுக்குள்ளானது. இந்நிலையில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை பார்வையிட்டு விட்டு சென்னை திரும்பிய மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர் சந்திப்பில் பேசினார்.
சூறாவளி பயணம்
அப்போது அவர் பேசுகையில் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களை "காக்கப்பட்ட பசுமை மண்டலமாக" அறிவிக்க வேண்டும். மனிதாபிமானம் கருதி பிரதமர் நரேந்திர மோடி பாதித்த பகுதியை நேரில் வந்து பார்வையிட வேண்டும். மேலும் பாதிக்கப்பட்ட மாவட்டத்தில் சூறாவளி பயணம் மேற்கொண்டேன். 30% தான் தன்னால் பார்க்க முடிந்தது. மக்கள் நிலையை பார்க்க தமிழனாக அவமானமாக உள்ளது. அவர்களுக்கு வரும் கோபம் தனக்கும் வருகிறது.
நிவாரண முகாம்கள்
மத்திய மாநில அரசுகள் மிக விரைவாக செயல்பட வேண்டும். தொடர்ந்து செயல்பட வேண்டும். தமிழகமே தாங்கி பிடிக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்கள் ஏழைகள் தான். ஆனால் கவுரவமாக வாழ்ந்தவர்கள். முகாம் என்று கூறவே முடியாத அளவிற்கு நிவாரண முகாம்கள் இருக்கிறது.
நோய் பரவும் அபாயம்
அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் சரியாக இருந்திருக்கலாம் ஆனால் தற்போது அவர்கள் மேற்கொள்ளும் நிவாரண பணிகள் போதாது. சில இடங்களுக்கு அரசு அதிகாரிகள் செல்லவே இல்லை. பாதிக்கப்பட்ட பகுதிகளில் நோய் பரவுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.
பசுமை மண்டலம்
மத்திய அரசிடம் இருந்து போதிய நிதி கிடைக்க வேண்டும் என்று நம்புவோம். தோல்வியை மட்டுமே நினைக்காமல் வெற்றிக்கான ஆரம்பப்படியாக நினைக்க வேண்டும். மேலும் பாதிக்கப்பட்ட பகுதியை காக்கப்பட்ட பசுமை மண்டலமாக அறிவிக்க வேண்டும்.
முடக்கம்
முதல்வர் ஹெலிகாப்டர் ஆய்வு ஒரு தூரத்து பார்வை. அவர் சேதத்தை சரியாக பார்வையிட வில்லை என்பது மக்கள் குற்றச்சாட்டு. போராட்டம் அடுத்தக் கட்டத்திற்கு செல்வதற்கு முன் அரசு தன் இயந்திரத்தை முடக்கி வைக்க வேண்டும் என்று கமலஹாசன் தெரிவித்தார்.