ஸ்டெர்லைட் போர் முடியவில்லை..துப்பாக்கிச் சூடு பயங்கரவாத செயலுக்கு அரசு பதில் தர வேண்டும்: கமல்ஹாசன்
சென்னை: ஸ்டெர்லைட் போர் இன்னமும் முடியவில்லை... துப்பாக்கிச் சூடு நடத்திய பயங்கரவாத செயலுக்கு அரசு பதில் சொல்ல வேண்டும் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
Recommended Video
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 13 தமிழர்கள் கொல்லப்பட்டனர். இதனையடுத்து ஸ்டெர்லைட் ஆலையை மூடி சீல் வைத்தது தமிழக அரசு. இதற்கு எதிராக ஸ்டெர்லைட் ஆலையை நடத்தும் வேதாந்தா குழுமம் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தமிழக அரசின் அரசாணை செல்லும்; ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதி இல்லை என அதிரடி தீர்ப்பளித்தது. இது தொடர்பான வேதாந்த குழுமத்தின் மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன.
இத்தீர்ப்புக்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். பல இடங்களில் பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.
ஸ்டெர்லைட் தீர்ப்பு- உச்சநீதிமன்றத்திலும் நீதியை நிலைநாட்ட வலியுறுத்துவோம்: திருமாவளவன்
கமலின் எதிர்பார்ப்பு
சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளிவருவதற்கு முன்னதாக நேற்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தமது ட்விட்டர் பக்கத்தில், நாளை ஸ்டெர்லைட் வழக்கில் தீர்ப்பு. நீதியை நம்புகிறோம். நாளை நமதாகவே இருக்கும் என நம்பும் பல கோடி மக்களின் எண்ணப் பிரதிபலிப்பாக... உங்கள் நான் என குறிப்பிட்டிருந்தார்.
தீர்ப்புக்கு வரவேற்பு
இந்த நிலையில் இன்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்த பின்னர் இதனை வரவேற்றுள்ளார் நடிகர் கமல்ஹாசன். மேலும் ஸ்டெர்லைட் தடை தொடரும் என்கின்ற நீதிமன்றத் தீர்ப்பு பல உயிர்களின் தியாகத்தில் கிடைத்துள்ள நீதி. இத்தீர்ப்பின் அவசியத்தை, அவர்களின் வலியை, அருகில் இருந்து உணர்ந்த சகோதரன் நான். மக்களின் குரல் என்றும் வெல்லும் என்பதற்கு இது மற்றுமொரு சான்று என தமது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
வல்லரசுகளை தலைவணங்க வைக்கும் தீர்ப்பு
மேலும் கமல்ஹாசன் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: மக்களின் வலிமையான குரலுக்கு முன்னாள் வல்லரசுகளும் தலைவணங்கித்தான் தீர வேண்டுமென நீதிமன்றம் மீண்டும் ஒருமுறை தனது சிறப்புமிகு தீர்ப்பால் அனைவருக்கும் அறிவுறுத்தியிருக்கிறது. ஸ்டெர்லைட் போராட்டகளத்தில் திரண்ட பொதுமக்களுக்கும், அரசின் அடக்குமுறையில் உயிரிழந்த தன் குடும்பத்து உறுப்பினர்களுக்கும் மரியாதை செலுத்த வேண்டிய நேரமிது.
துப்பாக்கிச் சூடு- பயங்கரவாத செயல்
போராட்ட களத்தில் நிற்க எனக்கு வாய்ப்பளித்த மக்களுக்கு எனது நன்றிகள். இந்த தீர்ப்பு கொண்டாடக் கூடிய ஒன்று என்றாலும், இன்னும் அந்த போர் முடிந்துவிடவில்லை என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. துப்பாக்கிச் சூடு நடத்திய அரசு, தன் பயங்கரவாத செயலுக்கு பதில் சொல்லியே ஆக வேண்டும். இன்று கிடைத்த நீதியை தக்க வைக்க நாம் சோர்வின்றி தொடர்ந்து போராட வேண்டும். மக்களுக்கான நீதி இன்று உறுதியாகி இருக்கிறது.
தொடர்ந்து களத்தில் நிற்போம்
ஸ்டெர்லைட் மக்களின் நிலம்,நீர் வளத்தையும் கனிம வளத்தையும் அபகரிக்கும் செயலுக்கு மக்கள் நீதி மய்யம் வலுவான எதிர்ப்பினை தொடர்ந்து வலியுறுத்தி கொண்டே இருக்கும். களத்தில் நானும் மக்கள் நீதி மய்யம் கட்சியும் தொடர்ந்து இருப்போம். இவ்வாறு கமல்ஹாசன் கூறியுள்ளார்.