அதிமுக, திமுக விரித்த வலையில் சிக்காத கமல்.. 3ஆவது அணி அமைகிறதா.. "அவர்" இருந்தா நல்லாயிருக்குமே!
சென்னை: அதிமுக, திமுக விரித்த வலையில் கமல்ஹாசன் சிக்காமல் 3-ஆவது அணி அமைத்து விஸ்வரூபம் எடுக்க காத்திருக்கிறார். இவருடன் சகாயம் இணைவாரா? ரஜினி வாய்ஸ் கொடுப்பாரா என்ற எதிர்பார்ப்பு எகிறுகிறது.
தமிழக சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி ஒரே கட்டமாக நடத்தப்படுகிறது. இந்த தேர்தலில் அதிமுக, திமுக, மக்கள் நீதி மய்யம், அமமுக என போட்டியிடுகிறார்கள். இவர்கள் கூட்டணி அமைத்தே போட்டியிடுகிறார்கள்.
இந்த நிலையில் கமல்ஹாசனின் கட்சி கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கணிசமான வாக்குகளை பெற்றது. இதையடுத்து சட்டசபை தேர்தலில் கமல்ஹாசன் பிரச்சாரம் மேற்கொண்ட போதும் அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
அதிமுக திமுக
இதை வைத்து கமல்ஹாசனுக்கு நல்லதொரு வாக்கு வங்கி இருப்பதை அதிமுகவும், திமுகவும் உணர்ந்தன. இதையடுத்து தூதுவர்களை அனுப்பி கூட்டணி பேச்சுவார்த்தைகளை இரு கட்சிகளும் நடத்தியதாக கமல்ஹாசனே கூறியிருந்தார். ஆனால் தலைமையிடம் இருந்து கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை வரவில்லை என்றும் கமல் தெரிவித்திருந்தார்.
திமுக கூட்டணி
இந்த நிலையில் கமல்ஹாசனிடம் கூட்டணி குறித்து கேட்டபோதெல்லாம் நல்லவர்களுடன் கூட்டணி என்றே கூறிவந்தார். இந்த நிலையில் அதிமுக கூட்டணியிலிருந்து விலகி சமத்துவ மக்கள் கட்சியும், திமுக கூட்டணியிலிருந்து விலகி இந்திய ஜனநாயக கட்சியும் புதிய கூட்டணியை நேற்றைய தினம் அறிவித்தன.
கமல் இணைய வாய்ப்பில்லை
தற்போது சரத்குமாரும், ரவி பச்சமுத்துவும் (ஐஜேகே தலைவர்) இணைந்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து பேசினர். இதன் மூலம் கமல்ஹாசன் தலைமையில் 3-ஆவது புதிய அணி உருவாக வாய்ப்பிருப்பதாகவே கருதப்படுகிறது. ஊழலுக்கு எதிராக இருக்கும் கமல்ஹாசன் நிச்சயம் அதிமுக, திமுக கூட்டணியில் இணைய மாட்டார் என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது.
பச்சமுத்து
இதனால் அவர் நிச்சயம் சரத்குமார், பச்சமுத்துவுடன் இணைந்து தேர்தலை சந்திப்பார் என்றே தெரிகிறது. இவருடன் சகாயம் ஐஏஎஸ் இணைவாரா என்றும் இவர்களுக்கு ரஜினிகாந்த் வாய்ஸ் கொடுப்பாரா என்ற கேள்வியும் எழுகிறது. ஆக, திமுக, அதிமுக விரித்த வலையில் கமல்ஹாசன் சிக்காமல் போக்கு காட்டிவிட்டார் என்றே தெரிகிறது.