டாஸ்மாக் திறப்பு : ஊர்கூடி கட்டிக்காத்ததை காற்றில் விடுவது நியாயமா? தாங்குமா தமிழகம்? கமல்ஹாசன்
சென்னை: ஊர்கூடி கட்டிக்காத்ததை காற்றில் விடுவது நியாயமா? தாங்குமா தமிழகம்? என்று டாஸ்மாக் மதுபான கடை திறப்புக்கு மக்கள் நீதிமய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
Recommended Video
லாக்டவுன் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் நாடு முழுவதும் மதுபான கடைகள் திறக்கப்பட்டுள்ளன. தமிழகத்திலும் டாஸ்மாக் மதுபான கடைகள் நேற்று முதல் திறக்கப்பட்டுள்ளன.
போலீசாரின் முழு பாதுகாப்புடன் இந்த டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. 40 நாட்கள் அமைதியாக இருந்த தமிழகத்தில் மதுபான கடைகள் திறந்த உடனேயே குற்றச்செயல்களும் அதிகரித்து விட்டன. டாஸ்மாக் மதுபான கடைகள் திறப்புக்கு அனைத்து எதிர்க்கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. திமுகவும் அதன் தோழமை கட்சிகளும் இணைந்து நேற்று தங்களது வீடுகள் முன்பாக கறுப்பு உடை அணிந்து போராட்டம் நடத்தினர்.
வசூலெல்லாம் சூப்பர்தான்.. டாஸ்மாக் திறந்த முதல் நாளே.. பல வன்முறைகள்.. கொலை, தீக்குளிப்பு, விபத்து!
புரியவில்லையா தலைமைக்கு?
ஏற்கனவே மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசன், கோயம்பேட்டை காப்பாற்ற இயலாமல் தொற்று எண்ணிக்கையை அதிகப் படுத்திய அரசு, இப்பொழுது டாஸ்மாக்கை திறக்குமாம். அரசின் ஒவ்வொரு தவறும் உயிர்களை பலி வாங்குவது புரியவில்லையா தலைமைக்கு என கடுமையாக விமர்சித்திருந்தார்.
பஞ்சத்தை நெருங்குகிறோம்
இதனைத் தொடர்ந்து கமல்ஹாசன் நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கையில், ஒரு வைரஸ் கிருமிக்கு இருக்கும் உயிர் வாழும் ஆசை கூட, தமிழ்நாட்டு மக்களுக்கு இருக்காது என திண்ணமாக நம்பும் ஒரு அரசு நமக்கு வாய்த்தது ஏன்? ஓட்டுக்கு காசு வாங்கி, 5 வருடம் நம் வாழ்வை இவர்களுக்கு குத்தகைக்கு விட்டோமே அதன் விளைவு தான். பஞ்சத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் தமிழ்நாட்டில், மதுக்கடைகளைத் திறந்து விட்டால் மக்களின் கவனம் திரும்பிவிடும் என நம்பும் அரசுக்கு பெயர் ‘அம்மாவின் அரசா' ? தாயுள்ளம் கொண்டோர் அனைவருக்கும் அவமானமல்லவா அது? இலவசமாக எத்தனை தாலிகள் தந்தாலும், வேலையில்லாத குடிகாரன் வீட்டுத் தாலி பறிக்கப்பட்டு, அடகுக்கடைக்குப் போகும், பின் அரசு நடத்தும் சாராயக் கடைகள் மூலம் அரசுக்கே வந்து சேரும் என்று தெரியும் தமிழ்நாட்டை ஆள்பவர்களுக்கு. கமல்ஹாசன் டாஸ்மாக் மதுபான கடை
கொரோனாவை விட
ஆள்பவர்களும் இந்த வசூல் கொள்ளையில் பங்குதாரர்கள் என்பது ஊரறிந்த ரகசியம். இன்று சொல்கிறேன். இந்த அரசு செய்யும் தொடர் அபத்தங்களை நிறுத்தாவிட்டால், சுனாமி கொண்டு சென்ற உயிர்களை விட அதிகமான உயிர்களை இந்த நோய்க்காலத்தில், அரசு தற்போது திறந்து விட்டுள்ள சாராய ஆறு கொண்டு செல்லும். அப்படி எதுவும் நடந்தால், தமிழகத்தின் தலைமை, கொலைக்குற்றத்தை ஏற்று பதவி விலகவா போகிறது? சிறைக்கு அனுப்பினாலும் தொடரும் இந்த ஊழல் சங்கம், கொரோனாவை விட அதிக தமிழ் மக்களைக் கொல்லும்.
டாஸ்மாக் கடைகளில் கூட்டம்
நோய் தொற்றிற்கு தப்லீக் ஜமாத்தை மட்டும் காரணம் காட்டிய பலர், கோயம்பேடு, நோய் விநியோக நிலையமாக மாறியதற்கு, ஆளும் அரசியல் வியாபாரிகளைத் தவிர, வேறு யாரை குற்றம் சாட்ட முடியும். கிராமங்கள் எங்கும் டாஸ்மாக் வாசலில் திருவிழாக்கூட்டம். கொள்ளை நோய் ஒரு பக்கம், அரசுகளின் தொடர் கொள்ளை இன்னொரு பக்கம். தாங்குமா தமிழகம் ? வெகுண்டெழு தமிழகமே, வேறு தலைமை தேடு.
மீண்டும் கமல் அறிக்கை
அரசுக்கு ஒரு சிறு குறிப்பு: இன்றும் தாமதமாகி விடவில்லை. நேர்மைக் குரல்களுக்குச் செவி சாய்த்தால், மக்களுக்கு இருக்கும் நியாயமான கேள்விகளுக்கு, நேர்மையான பதிலை இந்த அரசு அளித்தால், நடக்கும் இந்த ஆட்சியின் முடிவு, அசிங்கமானதாக இல்லாமல் தப்பிக்க ஒரு சிறிய வாய்ப்பு இருக்கிறது. உண்மையில் இது யாருக்கான அரசோ? இதுவரை கிடைத்த தடயங்களைப் பார்க்கையில் மனசாட்சி என்று ஒன்று உங்களுக்கு இருக்க வாய்ப்பில்லை. ஒருவேளை இருந்தால் அதைத் தொட்டுச் சொல்லுங்கள். இல்லையேல் மேலிடத்தில் கேட்டுச் சொல்லுங்கள்". என விவரித்திருந்தார். இந்த நிலையில் இன்று மீண்டும் தமது ட்விட்டர் பக்கத்தில் கமல்ஹாசன் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
காற்றில் பறக்கவிடுவதா?
அதில், மருத்துவர்கள்,காவலர்கள், தூய்மைப் பணியாளர்கள் உயிரைப் பணயம் வைத்து போராடிக் கொண்டு இருக்கின்றனர்.நடுத்தர மக்கள் வீட்டில் கட்டுண்டு இருக்கின்றனர்.ஏழைகள் வாழ வழியின்றி தவிக்கின்றனர். தற்போது டாஸ்மாக் திறந்து விட்டு, ஊர்கூடி கட்டிக்காத்ததை காற்றில் விடுவது நியாயமா? #தாங்குமா தமிழகம் என கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.