கொடநாடு விவகாரம்.. மர்ம கதையின் அடுத்த அத்தியாயம்.. அவ்வளவுதான்.. கமல்ஹாசன்
எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும் என்று கமல் வலியுறுத்தி உள்ளார்.
Recommended Video
சென்னை: கொடநாடு விவகாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உடனடியாக பதவி விலக வேண்டும் என்று கமல்ஹாசன் வலியுறுத்தி உள்ளார். மர்ம கதையின் அடுத்த அத்தியாயம் அவ்வளவு தான் என்றும் இந்த விவகாரம் குறித்து அவர் விமர்சனம் செய்துள்ளார்.
மக்கள் நீதி மய்யம் கட்சி தொடங்குவதற்கு முன்பிருந்தே ஆளும் தரப்பு மீது அதிருப்தியில் உள்ளவர் கமல்ஹாசன். இவரது பெரும்பாலான ட்விட்டர் பதிவுகள், பேட்டிகள் என எல்லாமே அதிமுக அரசின் ஊழலை கடுமையாக விமர்சித்தே இருக்கும்.
அதனால் முதலமைச்சர் முதல் அமைச்சர்கள் வரை யாராக இருந்தாலும் உரிய கேள்விகளை துணிந்து கேட்டு அலறவிடுபவர் கமல்ஹாசன்.
கமல் கருத்து
இப்போது கொடநாடு மர்ம மரணம், மற்றும் கொள்ளை சம்பவம் 3 நாட்களாக தமிழகத்தில் பற்றி எரிகிறது. இது சம்பந்தமாக அதிமுக அரசு உரிய விளக்கத்தை தருமாறு பிரதான கட்சிகள் ஆளும் தரப்பை நிர்ப்பந்தித்து வருகிறது. அதுபோலவே கமல்ஹாசனும் தனது கருத்தை வலியுறுத்தி உள்ளார்.
கொடநாடு விவகாரம்
சென்னை விமான நிலையத்தில் நேற்று செய்தியாளர்களை கமல் சந்தித்து பேசினார். அப்போது செய்தியாளர்கள், கொடநாடு விவகாரம் தொடர்பாக முதல்வர் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறதே என்று கேள்வி எழுப்பினர். அதற்கு கமல் சொன்னதாவது:
இதைதான் சொல்கிறேன்
"நானும் இரண்டரை வருஷத்துக்கும் மேலாக இதைதான் சொல்லி வருகிறேன். எனது நிலைப்பாட்டில் எந்த மாற்றமில்லை. தற்போது வெளியாகியுள்ள ஆவணப்படம் ஒரு மர்ம கதையின் அடுத்த அத்தியாயமாக இருக்கிறது. அவ்வளவுதான்.
பெருமை கிடையாது
இந்தியாவில் மற்ற முதல்வர்கள் மீது இது போன்ற கொலை குற்றசாட்டு இல்லை என சொல்ல முடியாது. ஆனால் இங்கிருப்பது நமக்கு பெருமையான விஷயமல்ல.
தண்டனை
அவர்களுக்கு உடனே தண்டனை வழங்க வேண்டும் என சொல்லவில்லை. அவர்கள் மீது உள்ள சந்தேகத்திற்கு ஆதாரமாக இருப்பதில் ஒன்றாக இருக்க கூடும் என நினைப்பதில் தவறில்லை. எடப்பாடி பழனிசாமி மீதான குற்றச்சாட்டு உண்மை என்றால் உடனடியாக அவர் பதவி விலக வேண்டும்" என்று கமல் பதிலளித்தார்.