பல ராஜாக்கள் விட்டு கொடுத்து உருவானது இந்தியா.. எந்த "ஷா"வும்.. அதை மாற்ற முடியாது.. கமல் அதிரடி
இந்தி திணிப்புக்கு எதிராக கமல்ஹாசன் பேசி வீடியோ வெளியிட்டுள்ளார்
Recommended Video
சென்னை: அப்பாடா.. கமல் இன்னும் வாயை திறக்கவே இல்லையே என்று நினைத்திருந்தோம்.. லேட்டாக வந்தாலும் லேட்டஸ்ட்டாக வந்து மத்திய அரசுக்கு எதிரான ஒரு கருத்தை ஆழமாக.. வலிந்து.. பதிந்து.. நச்சென்று சொல்லி ஒரு வீடியோவையும் பதிவிட்டு உள்ளார்.
என்னதான், பாஜகவுக்கு எதிராகவும், மக்களின் நலனுக்காக ஆதரவாகவும் கருத்துக்களையும் விமர்சனங்களையும் கமல்ஹாசன் வெளிப்படுத்தி வந்தாலும், பாஜகவுக்கு நிழல் ஆதரவாளர் என்பதுபோல ஒருசிலர் இன்னமும் சொல்லி கொண்டுதான் இருக்கிறார்கள்.
அதனால்தான் அமித்ஷா கருத்து சொல்லி 2 நாளாகியும் மக்கள் நீதி மய்யம் சார்பில் ஒரு கண்டனத்தையும் காணோமே என்ற முணுமுணுப்புகள் எழ ஆரம்பித்தன.
அமித்ஷா பற்ற வைத்த தீ.. வழக்கம் போல ரஜினி அமைதி.. ஏன் கம்மென்று இருக்கிறார்!
சந்தேகம்
"எந்த மொழியையும் திணிக்க கூடாது. விருப்பமுள்ளவர்கள் எந்த மொழியையும் கற்றுக்கொள்வார்கள். குறிப்பாக தமிழர்கள் இன்னொரு மொழியை ஏற்றுக்கொள்வார்களா? என்பது சந்தேகம்தான்" என்பதை பளிச்சென பலமுறை சொன்ன கமல், இன்னமும் கருத்து சொல்லவிலையே... ஏன்.. என்ற கேள்வி இயல்பாகவே எழுந்தது.
|
ஜனநாயகம்
இதற்காகத்தானோ என்னவோ, கமல் சுளீரென ஒரு ட்வீட் போட்டுள்ளார். அதில்,"இந்தியா இன்னும் சுதந்திர நாடாக இருப்பதை நிரூபிக்க வேண்டிய நிர்பந்தத்தில் நீங்கள் இருக்கிறீர்கள். புதிய திட்டங்களோ சட்டங்களோ இயற்றப்படும் பொழுது அது மக்களிடம் கலந்தாலோசிக்கப்பட வேண்டும். வெள்ளையனை வெளியேற்றியது வெற்று நாயகத்திற்காக அல்ல ஜனநாயகத்திற்காக" என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவுடன் ஒரு வீடியோவையும் போட்டுள்ளார் கமல். அதில் அவர் தோன்றி சொன்னதாவது:
எந்த "ஷா"வும்
"பல ராஜாக்கள் தங்கள் ராஜ்யங்களை விட்டுக் கொடுத்து உருவானதுதான் இந்தியா. ஆனால் விட்டுத்தரவே முடியாது என்று பல மாநில மக்கள் சொன்ன விஷயம், எங்கள் மொழியும் கலாச்சாரமும். 1950-ல் இந்தியா குடியரசானபோது, அதே சத்தியத்தை அரசு மக்களுக்கு செய்தது. அந்த சத்தியத்தை எந்த "ஷா"வோ, சுல்தானோ, சாம்ராட்டோ மாற்றிவிட முயற்சிக்ககூடாது.
ஆபத்து
ஜல்லிக்கட்டு போராட்டம்.. ஒருசிறிய போராட்டம். ஒரு சிறிய வெற்றி.. எங்கள் மொழிக்காக நாங்கள் போராட துவங்கினால், அது அதைவிட பன்மடங்காக இருக்கும். அந்த ஆபத்து இந்தியாவுக்கோ தமிழ்நாட்டுக்கோ தேவையற்றது.
கலாச்சாரம்
பெரும்பாலான இந்தியர்கள் தங்கள் தேசிய கீதத்தை அவர்கள் மொழியில் பாடுவதில்லை. வங்காளிகளை தவிர. இருப்பினும், நாங்கள் அதை சந்தோஷமாக பாடிக் கொண்டிருக்கிறோம். பாடிக் கொண்டிருப்போம். ஏனெனில் அதை எழுதிய கவிஞர், எல்லா கலாச்சாரத்திற்கும், எல்லா மொழிக்கும் தேவையான இடத்தையும் மதிப்பையும் அதில் கொடுத்திருந்தார்.
திகட்டிவிடும்
இந்தியா என்பது ஒரு அற்புத விருந்து. அதை கூடி உண்போம். திணிக்க நினைத்தால் திகட்டி விடும். தயவு செய்து அதை செய்யாதீர்கள். வேற்றுமையை ஒற்றுமையை எங்களால் காண முடியும். வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்! வாழிய பாரத மணித்திரு நாடு" என்று கூறியுள்ளார்.
வெற்று நாயகம்
இந்தியா இப்போதைக்கு சுதந்திர நாடாக இல்லை என்பதை ட்வீட் மூலம் கமல் மறைமுகமாக சொல்லி உள்ளார். அது மட்டுமில்லை.. "வெற்று நாயகம்" என்ற வார்த்தையை சொல்லியதுடன், எந்த "ஷா"வும் அதை மாற்றிவிட முடியாது என்று சம்மட்டி அடி பதில் தந்துள்ளார் கமல்!