பாகிஸ்தானுக்குள் புகுந்து தாக்கிய ஹீரோக்களுக்கு சல்யூட்.. கமல் வாழ்த்து
சென்னை: பாகிஸ்தானுக்கு உள்ளேயே புகுந்து தாக்குதலையும் நடத்திவிட்டு, பத்திரமாக நாடு திரும்பியுள்ள நம் ரியல் ஹீரோக்களுக்கு சல்யூட் அடித்து ட்வீட் போட்டுள்ளார் கமல்ஹாசன்.
நமது 12 போர் விமானங்கள் பாகிஸ்தானில் தீவிரவாத முகாம்களைத் தாக்கி நாடு திரும்பியுள்ளன. இந்தியா தனது கதாநாயகர்களை நினைத்து பெருமை கொள்கிறது.
புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த 40 வீரர்களில் கோவில்பட்டி அருகேயுள்ள சீவலப்பேரியை சேர்ந்த சுப்பிரமணியன் மற்றும் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிவசந்திரன் என்ற இரு தமிழர்களும் அடக்கம்.
நாடு முழுவதும் சோகத்தையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்திய இக்கொடூர தாக்குதலுக்கு பல்வேறு கட்சி தலைவர்களுடன் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசனும், கண்டனத்தை பதிவு செய்தார். மேலும் தாக்குதல் சம்பவம் தொடர்பாக ஜம்மு காஷ்மீர் ஆளுநரின் ஆலோசகரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதுடன், தங்களின் நடவடிக்கைகளுக்கு நாட்டு மக்கள் அனைவரும் தோளோடு தோள் கொடுத்து நிற்போம் என்றும் சொல்லி இருந்தார்.
பின்னர், உயிரிழந்த இராணுவ வீரர் சுப்பிரமணியன் வீட்டுக்கு அங்கு அவரது உருவபடத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தியதுடன், குடும்பத்தாருக்கும் நேரில் ஆறுதல் சொல்லிவிட்டு வந்தார்.
Our 12 return safely home after wreaking havoc on terrorist camps in Pakistan. India is proud of its heroes. I salute their valour.
— Kamal Haasan (@ikamalhaasan) February 26, 2019
இப்போது புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி தந்த இந்திய விமானப்படைக்கு கமல்ஹாசன் பாராட்டு தெரிவித்துள்ளார். இது சம்பந்தமாக பதிவிட்ட ட்வீட்டில், "நமது 12 போர் விமானங்கள் பாகிஸ்தானுக்குள் புகுந்து தீவிரவாத முகாம்களைத் தாக்கிவிட்டு பத்திரமாக நாடு திரும்பியுள்ளன. அந்த ஹீரோக்களை நினைத்து இந்தியா பெருமை கொள்கிறது. அவர்களின் வீரத்திற்கு சல்யூட்" என்று பதிவிட்டுள்ளார்.