கலக்கிய மக்கள் நீதி மய்யம்.. கடும் உற்சாகத்தில் கமல்ஹாசன்.. அடுத்த வியூகம் ரெடி!
Recommended Video
சென்னை: லோக்சபா தேர்தலில் மக்கள் நீதி மய்யம் பெற்ற கவனிக்கத்தக்க வாக்குகளை தொடர்ந்து, கட்சி பணிகளை வேகமாக முடுக்கி விட்டுள்ளார் அதன் தலைவர் கமல்ஹாசன்.
நடைபெற்று முடிந்த தேர்தலில், தமிழகத்தின் அனைத்து தொகுதிகளிலும், மக்கள் நீதி மய்யம் தனித்துப் போட்டியிட்டது. தேர்தல் முடிவில், எந்த ஒரு தொகுதியிலும் வெற்றி பெற முடியவில்லை என்றாலும், திமுக ஆதரவு அலை வீசிய இந்த தேர்தலிலும் கூட, நகர்ப்புறங்களில் கணிசமான வாக்குகளை பெற்றுள்ளது கமல்ஹாசன் கட்சி.
படித்த மற்றும் நகர்புற மக்களிடம் கமல்ஹாசன் கட்சி அதிக வாக்குகளை பெற்றுள்ளதாக புள்ளி விவரம் கூறுகிறது.
இன்னும் 20 நாள்தான்.. சென்னைக்கு காத்திருக்கும் மாபெரும் தண்ணீர் பஞ்சம்.. அதிர வைக்கும் அலெர்ட்!
நகரங்களில் அபாரம்
அதிமுக பலமாக இருக்கக்கூடிய மேற்கு மண்டலம், தொகுதிகளிலும் கமலஹாசன் கட்சி நல்ல வாக்குகளை அறுவடை செய்துள்ளது. வட சென்னை, தென் சென்னை, மத்திய சென்னை ஆகிய சென்னையின் மூன்று தொகுதிகளையும் சேர்த்து, ஒவ்வொரு தொகுதிகளிலும் தலா 10% முதல் 12% வாக்குகளை பெற்றுள்ளது மக்கள் நீதி மய்யம் கட்சி. கோவை தொகுதியில் 11.60% வாக்குகளை பெற்றுள்ளது. மேலும் சில தொகுதிகளில் அதன் வாக்கு சதவீதம் என்பது 10-ஐ நெருங்கி உள்ளது.
ஒரே வருடம்
கட்சி துவங்கி ஒரே வருடம் ஆகியுள்ள நிலையில், மக்கள் அளித்துள்ள இந்த ஆதரவால் கமல்ஹாசன் கடும் உற்சாகமடைந்துள்ளார். இந்த உற்சாகத்தை கட்சியினருக்கும் கடத்திச்சென்று அடுத்த கட்டத்திற்கு கட்சியை நகர்த்துவதற்கான முயற்சியில் கமல்ஹாசன் தீவிரமாக இறங்கி விட்டார்.
இதன் ஒரு பகுதியாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் செயற்குழு நிர்வாக குழு உறுப்பினர்கள் மற்றும் இந்த தேர்தலில் போட்டியிட வேட்பாளர்களுக்கு சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் நேற்று பிற்பகலில் விருந்து அளித்தார் அவர்.
கட்சி கட்டமைப்பு
உள்ளாட்சித் தேர்தலிலும் இதே போன்று தனித்து போட்டியிடுவது என்றும், அதன் வெற்றி வியூகம் குறித்தும் அப்போது விவாதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி கட்சியின் கட்டமைப்பைப் பலப்படுத்தும் அவசியத்தை கமல்ஹாசன் உணர்ந்திருந்தது அவரது பேச்சில் தெரிய வந்ததாக கூறுகிறார்கள் நிர்வாகிகள். திமுக, அதிமுக போல அடிமட்டத்தில் வலுவான கட்டமைப்பு இல்லாவிட்டாலும்கூட, தமிழகம் முழுக்க இந்த லோக்சபா தேர்தலில் கணிசமான வாக்குகளை மக்கள் நீதி மய்யம் பெற்றுள்ளது. எனவே கட்சி கட்டமைப்பை வலுப்படுத்தி அடுத்து வரும் தேர்தல்களில் கட்சியின் வாக்கு வங்கியை அதிகரிக்க வேண்டும் என்பது கமல்ஹாசன் விருப்பம்.
பிக்பாஸ் 3
இதன் ஒரு பகுதியாக இன்னும் ஓரிரு வாரங்களில் தமிழகம் முழுக்க காலியாக உள்ள கட்சி பணிகளுக்கு, பொறுப்பாளர்களை நியமிப்பதற்கான வேலைகளில் கமல்ஹாசன் மும்முரமாக இறங்கியுள்ளார். பிக் பாஸ் 3 சீசன் தொடங்க உள்ளதால், அதன் மூலமும், பெண்கள் மற்றும் மேல் தட்டு மக்களிடம் எளிதாக சென்று அடைந்து விட முடியும் என்று நம்பும் கமல்ஹாசன், உள்ளாட்சித் தேர்தலில் மற்ற கட்சிகளுக்கு கடும் போட்டியாக மக்கள் நீதி மய்யம் உருவாகும் என்று அழுத்தம் திருத்தமாக தனது நிர்வாகிகளிடம் சொல்லி அனுப்பி உள்ளார்.