மயிலாப்பூரில் களமிறங்கும் ஆழ்வார் பேட்டை நாயகன் கமல்... அசத்தல் வெற்றி கிடைக்குமா
மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் மயிலாப்பூர் சட்டசபைத் தொகுதியில் போட்டியிடப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலில் மயிலாப்பூர் தொகுதியில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் போட்டியிடப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆழ்வார்பேட்டை நாயகனுக்கு அசத்தல் வெற்றி கிடைக்குமா பார்க்கலாம்.
தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் உள்ள நிலையில் கூட்டணி பேச்சுவார்த்தை, தேர்தல் அறிக்கை என அரசியல் கட்சியினர் பரபரப்பாக செயல்பட்டு வருகின்றனர்.
கொரோனா காலமாக இருந்தாலும் திமுகவில் தேர்தல் அறிக்கை பணிக்குழு சுறுசுறுப்பாக இயங்கி வருகிறது. அதிமுக நலத்திட்டங்கள் மூலம் மக்களை கவர்ந்து வருகிறது.
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் சட்டசபைத் தேர்தல் தொடர்பாக சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் மாவட்ட நிர்வாகிகளுடன் கமல் ஹாசன் மூன்றாவது நாளாக அரசியல்ஆலோசனை நடத்தி வருகிறார்.
சட்டசபைத் தேர்தலில் கழகங்களுடன் கூட்டணி கிடையாது... திராவிடம் எப்போதும் இருக்கும் - கமல்ஹாசன்
கூட்டத்தில், சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை கமல்ஹாசன் மாவட்ட செயலாளர்களுக்கு அறிவுறுத்தினார். சட்டசபை தொகுதிகளின் கள நிலவரம் குறித்து அவர்களுடைய கருத்துகளையும் கேட்டறிந்தார்.
சென்னையில் மக்கள் நீதி மய்யத்திற்கு அதிக செல்வாக்கு இருப்பதாக தனியார் நிறுவன சர்வே தகவல் தெரிவித்துள்ளது. இதனையடுத்து சட்டசபை தேர்தலில் சென்னையில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று தனது நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளாராம் கமல்ஹாசன்.
2021 சட்டசபை தேர்தலில் மயிலாப்பூரில் களமிறங்கி ஆழம் பார்க்க திட்டமிட்டுள்ளாராம் கமல்ஹாசன். மயிலாப்பூர் பிராமணர்கள் அதிகம் வசிக்கும் தொகுதி. இந்த தொகுதி அதிமுகவின் கோட்டையாகும். எஸ்.வி சேகர் அதிமுகவில் இருந்த போது மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.
பாஜகவிற்கும் இந்த தொகுதி மீது ஒரு கண் உள்ளது. அதிமுக கூட்டணியில் பாஜக இருப்பதால் இந்த தொகுதியை கேட்டுப்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை பாஜகவிற்கு இந்த தொகுதியை அதிமுக ஒதுக்கினால் குஷ்பு போட்டியிடவும் வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.