எத்தனை இடர்கள் வந்தால் என்ன... சும்மாவா சொன்னார்கள்.. சகலகலாவல்லவன் என்று!
சென்னை: கமல் ஹாசன் கட்சி ஆரம்பித்து ஒரு வருடம் முழுசாக நிறைவு பெற்றுவிட்டது. இதுகுறித்து நமது வாசகர் தாஸ் எழுதியுள்ள ஒரு குட்டி கவிதை நடை கட்டுரை.
அன்று கமலின் செய்திகளை அச்சிட தவிர்த்தவர்களும், தந்த செய்திகளையே சர்ச்சைக்குரிய வகையில் திரித்து சொன்னவர்களும் மலைத்து நிற்கிறார்கள் இன்று!
நடிகர்கள் எல்லாம் அரசியலுக்கு லாயக்கில்லை என்று சொன்ன அரசியல்வாதிகள் திகைத்து நிற்கிறார்கள் இன்று!
இப்போது கட்சி ஆரம்பித்தவர் எல்லாம் நம்மை என்ன செய்துவிட முடியும் என்று ஏளனம் செய்தவர்கள் மிரண்டு கிடக்கிறார்கள் இன்று!
திராவிடம் என்ற சொல்லையே தாரக மந்திரமாக வைத்து பிழைப்பு நடத்தும் சில கட்சிகளும், லெட்டர் பேட் கட்சி என்ற பெயருடன் உலா வரும் கட்சிகளும் வாயடைத்து நிற்கின்றனர் இன்று!
பிற அரசியல் கட்சிகள் செய்த தவறுகளை மக்கள் நீதி மய்யம் செய்யாது என்பதை அடிக்கடி சொல்லி வருவதால் கமலிடம் நெருங்க முடியாமல் பலர் கையை பிசைந்து நிற்கின்றனர் இன்று!
பாஜகவின் நிழல் மற்றும் இன, மதசாயத்தை ஒன்று கலந்து ஊற்ற முற்பட்டாலும் தாமரை இலை நீராக வழிந்தோடுவதை கண்டு தடுமாறி நிற்கின்றனர் இன்று!
இன்னும் எத்தனை எத்தனை இடர்கள், யார் யாரிடம் இருந்து வந்தால் என்ன... சும்மாவா சொன்னார்கள் சகலகலா வல்லவன் என்று!
- தாஸ்