சட்டசபைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் மக்கள் நீதி மய்யம் டார்ச் லைட் சின்னத்தில் போட்டி - கமல்
மக்கள் நீதி மய்யம் கட்சி தமிழக சட்டசபைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் பேட்டரி டார்ச் லைட் சின்னத்தில் போட்டியிடும் என்று அக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
சென்னை: தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு மீண்டும் பேட்டரி டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள கமல்ஹாசன், 234 சட்டசபைத் தொகுதிகளிலும் டார்ச் லைட் சின்னத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிடும் என்று கூறியுள்ளார்.
Recommended Video
நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி கடந்த லோக்சபா தேர்தலில் போட்டியிட்ட போது பேட்டரி டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்பட்டது. கையில் டார்ச் உடன் பிரச்சாரம் செய்தார் கமல்.
இந்த ஆண்டு நடைபெற உள்ள லோக்சபா தேர்தலில் டார்ச் லைட் சின்னமே கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தனது பிரச்சார வாகனத்திலும் டார்ச் லைட் சின்னத்தை வரைந்து பிரச்சாரத்தை ஆரம்பித்து விட்டார்.
இந்த நிலையில் சட்டசபைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு புதுச்சேரியில் மட்டும் டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்பட்டது. தமிழகத்தில் எம்ஜிஆர் மக்கள் கட்சிக்கு பேட்டரி டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்பட்டது. இதனால் கமல்ஹாசன் மட்டுமல்லாது தொண்டர்களும் அதிர்ச்சியடைந்தனர்.
மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு புதுச்சேரியில் மட்டும் பேட்டரி டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், தமிழகத்தில் இந்த சின்னம் ஒதுக்கப்படவில்லை எனக் கூறி, கட்சியின் வடக்கு மற்றும் கிழக்கு அமைப்பு பொதுச்செயலாளரான, ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி ஏ.ஜி.மவுரியா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அந்த மனுவில், மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு கடந்த தேர்தல்களில் பேட்டரி டார்ச்லைட் சின்னம் ஒதுக்கப்பட்டு மக்களை சந்தித்து வந்துள்ளது. தற்போது நடைபெறவுள்ள தேர்தலில் புதுச்சேரியில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு பேட்டரி டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழகத்தில் இந்த முறை அந்த சின்னம் கட்சிக்கு ஒதுக்கப்படாதது அதிர்ச்சியளிக்கிறது எனக் கூறியுள்ளார்.
எம்ஜிஆர் மக்கள் கட்சிக்கு பேட்டரி டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அந்த சின்னத்தை பயன்படுத்த அக்கட்சிக்கு தடை விதிக்க வேண்டும் எனவும், தேர்தல் சின்னங்கள் ஒதுக்கீடு உத்தரவுப்படி, பேட்டரி டார்ச் லைட் சின்னத்தை மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஒதுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.
மக்கள் நீதி மய்யம் சார்பில் வெளியானது தொழில்துறைக்கான 7 முத்தான உறுதிமொழிகள்
லோக்சபா தேர்தலிலும், சட்டமன்ற இடைத் தேர்தலிலும் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு பேட்டரி டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், புதுச்சேரிக்கு மட்டும் டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்பட்டதாகவும், எதிர்வரும் சட்டமன்ற தேர்தலுக்கு பிரச்சாரம் துவங்கியுள்ள நிலையில், அந்த சின்னத்தையே ஒதுக்கக் கோரிய விண்ணப்பத்தை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சி தரப்பில் வாதிடப்பட்டது.
மனு குறித்து தேர்தல் ஆணையத்தின் கருத்துக்களைப் பெற அவகாசம் வழங்க வேண்டும் என தேர்தல் ஆணையம் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து, மனுவுக்கு விளக்கமளிக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை பிப்ரவரி 2ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.
இந்த நிலையில் கமல்ஹாசனின் மக்கள் நிதி மய்யம் கட்சிக்கு மீண்டும் பேட்டரி டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதாக
கமல் ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மக்கள் நீதி மய்யத்திற்கு மீண்டும் டார்ச் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
— Kamal Haasan (@ikamalhaasan) January 15, 2021
ஒடுக்கப்பட்டோர் வாழ்வில் ஒளிபாய்ச்ச போராடிய மார்ட்டின் லூதர் கிங்கின் பிறந்தநாளில் இது நிகழ்ந்திருக்கிறது.
(1/2) pic.twitter.com/MqzKEBiidR
மக்கள் நீதி மய்யத்திற்கு மீண்டும் டார்ச் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். ஒடுக்கப்பட்டோர் வாழ்வில் ஒளிபாய்ச்ச போராடிய மார்ட்டின் லூதர் கிங்கின் பிறந்தநாளில் இது நிகழ்ந்திருக்கிறது.
இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கும், எம்மோடு துணை நின்றவர்களுக்கும் நன்றி. ஒளி பரவட்டும்!
— Kamal Haasan (@ikamalhaasan) January 15, 2021
(2/2)
இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கும், எம்மோடு துணை நின்றவர்களுக்கும் நன்றி. ஒளி பரவட்டும் என்றும் பதிவிட்டுள்ளார் கமல்ஹாசன். தனது கட்சி 234 தொகுதிகளிலும் பேட்டரி டார்ச் லைட் சின்னத்தில் போட்டியிடும் என்று கூறியுள்ளார்.