கமல் எடுத்த "விஸ்வரூபத்துக்கு" பலன்..அனைத்து கட்சிக் கூட்டத்துக்கு முதல்முறையாக அழைப்பு விடுத்த அரசு
சென்னை: முதல்வர் பழனிச்சாமி தலைமையில் இன்று மாலை நடைபெறவுள்ள அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் தனியொருவனாக சட்டசபையில் உள்ள தினகரனுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.
கமல்ஹாசன் கட்சி தொடங்குவதற்கு முன்னரிலிருந்தே தமிழக அரசை கடுமையாக எதிர்த்து வந்தார். இந்த நிலையில் அவர் கட்சி தொடங்கி முதல்முறையாக தைரியமாக பழம்பெரும் திராவிடக் கட்சிகளை எதிர்த்து போட்டியிட்டார்.
தேர்தல் நடப்பதற்கு முன்னரே கமல்ஹாசன் கட்சியால் ஜெயிக்க முடியாது என்றும் அதிக அளவில் அவரால் வாக்குகளை பெற முடியாது என்றும் ஆளும் கட்சி அமைச்சர்களான ஜெயக்குமார், செல்லூர் ராஜூ, ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோர் தரக்குறைவாக விமர்சனம் செய்து வந்தனர்.
12 தொகுதிகள்
இந்த நிலையில் நாடாளுமன்றத் தேர்தலும் வந்தது. இதில் மொத்தம் 38 தொகுதிகளில் 12 தொகுதிகளில் 3ஆவது இடத்தை பிடித்தது கமல் கட்சி. அதுபோல் மொத்தம் 15 லட்சம் வாக்குகளையும் பெற்றது. இதையடுத்து கமல் கட்சியானது வருங்காலத்தில் திராவிட கட்சிகளுக்கு மாற்றாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆட்சி
இந்த நிலையில் தேர்தல் வியூகங்களை அமைக்கும் நிறுவனத்தின் தலைவர் பிரசாந்த் கிஷோரின் அறிவுறுத்தலை பெற அதிமுக முயற்சித்து வந்தது. அவர் வகுத்து கொடுத்த வியூகத்தின் அடிப்படையில் ஆந்திரத்தின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது.
முயற்சி கைவிடுதல்
இதையடுத்து தமிழகத்தில் வரும் 2021-ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் வியூகம் வகுத்து தர பிரசாந்த் கிஷோரை அதிமுக அணுகியது. எனினும் அவர் ஸ்டாலின் மருமகன் சபரீசனின் நண்பர் என்பதால் அந்த முயற்சியை கைவிடப்பட்டது.
ஒப்புக் கொண்ட கிஷோர்
எனினும் கமல்ஹாசனுக்கு வியூகம் அமைத்து தருவதாக பிரசாந்த் கிஷோர் ஒப்புக் கொண்டுள்ளார். இதன் மூலம் கமல்ஹாசனின் பலம் என்னவென்று பிரசாந்த் கிஷோருக்கு தெரிந்ததாலேயே அவர் ஒப்புக் கொண்டார் என்றும் கூறப்படுகிறது.
தினகரன் கட்சி
கமல்ஹாசனின் கட்சியின் செயல்பாடு சிறப்பாக இருந்ததற்கு ஒரு எடுத்துக் காட்டு என்றால் அது அனைத்து கட்சி கூட்டத்துக்கு கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுத்துள்ளதுதான். சட்டசபை உறுப்பினராக உள்ள தினகரன் கட்சியை கூட தமிழக அரசு அழைக்கவில்லை.
அனைத்துக் கட்சிக் கூட்டம்
பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து 21 கட்சிகள் கலந்து கொள்ளும் கூட்டத்தில் மக்கள் நீதி மையமும் கலந்து கொள்வது அக்கட்சியின் வளர்ச்சியையே காட்டுகிறது என்பதே அரசியல் ஆலோசகர்களின் கருத்தாகும். இதற்கு முன்னர் வேறு ஒரு விவகாரம் தொடர்பாக நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் கமல் கட்சிக்கு அழைப்பு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.