தரமான கல்வி அனைத்து குழந்தைகளுக்கும் கிடைப்பதை உறுதி செய்யுங்க - கமல்
கல்வித்துறையில் ஒன்றை அறிவித்து உடனே திரும்ப பெறும் வழக்கத்தை விட்டு தீர ஆலோசித்து தரமான கல்வி அனைத்து குழந்தைகளுக்கும் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
சென்னை: தமிழகத்தில் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியிருந்தார். மறுநாளே தொலைக்காட்சி மூலம் பாடம் நடத்தப்படும் என்றும் தனியார் தொலைக்காட்சிகள் இதற்கு சம்மதம் தெரிவித்திருப்பதாகவும் கூறினார். கல்வித்துறையில் தினம் தினம் ஒரு அறிவிப்பு வெளியாவதாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். தரமான கல்வி அனைத்து குழந்தைகளுக்கும் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
கொரோனா பரவல் குறையாத காரணத்தினால் லாக்டவுன் நீடிக்கப்பட்டு பள்ளிகள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், தனியார் பள்ளிகள் ஆன்லைன் கல்விமுறையில் வகுப்புகளை நடத்த துவங்கியுள்ளன. தமிழ்நாட்டில் பல தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. கூகுள் மீட் மூலம் பாடங்கள் நடத்தப்படுகின்றன. இந்த நிலையில்தான் ஜூலை 13ஆம் தேதி முதல் அரசு பள்ளிகளில் ஆன்லைன் கல்வி முறை தொடங்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியிருந்தார்.
ஆன்லைன் வழி வகுப்புகளை பெறக்கூடிய வகையில் அனைத்து மாணவர்களிடம் ஸ்மார்ட்போன், இணையவசதி உள்ளிட்ட கட்டமைப்பு இருக்குமா? என்ற கேள்வி எழுந்தது. இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், அரசு பள்ளி மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்பை வரும் 13ஆம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைப்பார் என்றார்.
பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்ட உடன் ஆன்லைன் கல்வி திட்டம் செயல்பாட்டிற்கு வரும். அரசு பள்ளி மாணவர்களுக்கு தொலைக்காட்சி வாயிலாகவும் பாடம் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு பாடத்திற்கும் ஒரு சேனல் என்று 5 தொலைக்காட்சியில் ஒளிபரப்பவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் கூறியுள்ளார்.
அமைச்சர் கே.பி.அன்பழகனிடம் நலம் விசாரித்த மு.க.ஸ்டாலின்... உண்மையை உடைத்த ட்வீட்
கல்வி தொலைக்காட்சி மட்டும் அல்லாது, தந்தி, பாலிமர், புதிய தலைமுறை மற்றும் பொதிகை தொலைக்காட்சிகளிலும் வகுப்புகள் ஒளிபரப்பப்பட உள்ளன. ஒவ்வொரு தொலைக்காட்சிக்கும் தினமும் சில குறிப்பிட்ட நேரங்கள் ஒதுக்கப்பட்டு, சில வகுப்புகளுக்கான பாடங்கள் அதன்மூலம் ஒளிபரப்ப திட்டமிட்டு இருக்கிறோம். பிளஸ் 2 மாணவர்களுக்கு மட்டும் லேப்டாப் இருப்பதால், அவர்களுக்கு பாடங்கள் அனைத்தும் டவுன்லோடு செய்து வழங்கப்படும். கேள்வி கேட்பது மட்டும் வாரத்துக்கு ஒரு முறை நடக்கும். இதற்கான கால அட்டவணை தயாராகி வருவதாகவும் தெரிவித்துள்ளார் அமைச்சர் செங்கோட்டையன்.
இந்த நிலையில் அரசு தினசரி ஒரு அறிவிப்பு வெளியிடுவதாக புகார் எழுந்துள்ளது. மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், கல்வி, சராசரி குடும்பத்தின் எதிர்காலக் கனவு. எதிர்காலம் சிறக்க நம்பியிருக்கும் ஏணி. அரசு இதில் நேற்றொன்று அறிவித்து, இன்று அதை மாற்றி, நாளை திரும்பப்பெறும், தன் வழக்கத்தை விடுத்து தீர ஆலோசித்து, தரமான கல்வி அனைத்து குழந்தைகளுக்கும் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.