பிக்பாஸில் அரசியல்... இந்த சீசனையும் விட்டு வைக்காத கமல்ஹாசன்
Recommended Video
சென்னை: விஜய் டிவியில் தொடங்கியுள்ள பிக்பாஸ் சீசன் 3-ல் அரசியல் வசனங்களை சற்றே காட்டமாகவே வெளிப்படுத்த தொடங்கியிருக்கிறார் நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன்.
கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன்-3 இன்று இரவு 8 மணிக்கு விஜய் டிவியில் தொடங்கியது. நிகழ்ச்சியின் தொடக்கத்திலேயே அரசியலை வெளிப்படுத்திவிட்டார் கமல்ஹாசன்.
தம்மைப்பற்றிய ஆவணப்படத்தில் சிந்தனையை செழுமைப்படுத்தியது தொடர்பாக கமல்ஹாசன் பேசும் காட்சியில் தந்தை பெரியார் சிலை ஒரு குறியீடாக காட்டப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்து பார்வையிட்ட கமல்ஹாசன், நீச்சல் குளத்தைப் பற்றி பேசினார்.
வெளியில் மக்கள் அவதிப்படும் போது இங்கே நீச்சல் குளத்தில் குளியல் போட்டால் சரியாக இருக்காது என்பதால் நீரை நிரப்ப வேண்டாம் என சொல்லியிருந்தேன். அதை செய்திருக்கிறார்கள் நன்றி எனக் கூறினார்.
பின்னர் படுக்கை அறைகளுக்கு சென்ற போது இரு பெண்கள் அறையை சுத்தம் செய்து கொண்டிருந்தனர். கமல்ஹாசன் அவர்களை முதலில் அழைத்துப் பார்த்தார். பதில் வரவில்லை. பின்னர் இந்தியில் பேசத் தொடங்கினார்.
அப்போது ஒரு பெண் தமிழ்தான் என்று சொல்ல..நல்ல வேளை தமிழ்நாட்டில் தமிழருக்கு வேலை கிடைத்திருக்கிறது என வெளிமாநிலத்தவர் ஆதிக்கத்தை கோடிட்டுக் காட்டினார். அத்துடன் வந்தாரை வாழவைக்கும் என சிலேடையாக பேசிவிட்டு நகர்ந்தார்.
தமிழீழத்தைச் சேர்ந்த செய்திவாசிப்பாளர் லாஸ்லியாவை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியில் தெனாலி பட வசனத்தை பேசுமாறு கமல்ஹாசனை அவர் கேட்டுக் கொண்டார். தெனாலியாக இல்லாமல் கமல்ஹாசனாகவே கதைக்கிறேன் என ஈழத் தமிழில் உக்கிரமாக வசனங்களைக் கொட்டிவிட்டார்.
அநீதி கண்டு பொங்க வேண்டும்; அநீயை எதிர்க்கும் மையப் புள்ளியாக இருக்க வேண்டும் என்றெல்லாம் சரவெடி வசனங்களை உதிர்த்தார். மேலும் பாரதி சொன்னது போல ரெளத்திரம் பழகிக் கொண்டிருக்கிறேன் என மீசையை முறுக்கிக் காட்டினார். நீங்களும் ரெளத்திரம் பழக வேண்டும் என்று பொதுமக்களையும் கேட்டுக் கொண்டார்.
மக்கள் நீதி மய்யம் தொடங்கி லோக்சபா தேர்தலில் திரும்பிப் பார்க்க வைத்திருக்கும் கமல்ஹாசன், மக்களோடு உரையாடும் வாய்ப்பை கொடுத்திருக்கும் பிக்பாஸை அப்படி ஒன்றும் ஒரு நிகழ்ச்சியாக மட்டும் நடத்தமாட்டார்... தலைப்புச் செய்தியாக்கிவிட்டுத்தான் ஓய்வார் என்பதை இன்றைய தொடக்கமே வெளிப்படுத்திவிட்டது.