கமலுக்கு "மச்சம்"தான்.. ஒரே பந்தில் 3 சிக்ஸர்.. யாருக்குமே கிடைக்காத சூப்பர் சான்ஸ்.. காரணம் இதுதான்
பிக்பாஸ் நிகழ்ச்சியை பிரச்சாரமாக மாற்றி சாதித்து காட்டிய கமல்ஹாசன்
சென்னை: எந்த அரசியல் தலைவருக்கும் கிடைக்காத ஒரு மவுசும், மாஸும் கமலுக்கு கிடைத்திருக்கிறது என்றால் அதற்கு முக்கிய காரணம் பிக்பாஸ் நிகழ்ச்சிதான்!
பொதுவாக, பிக்பாஸ் நிகழ்ச்சியின் மேடையை, தன்னுடைய அரசியல் மேடையாகவே பயன்படுத்திவருகிறார் கமல்ஹாசன் என்று ஒரு பெயர் உள்ளது.. முதல் சீசனில் இருந்தே முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு இது என்றாலும் கமல், எதையுமே கண்டுகொள்வது கிடையாது.
இன்னும் சொல்லபோனால், மற்ற சீசனைவிட இந்த சீசனில்தான் அரசியல் வாடை, நெடியை அதிகம் பரப்பிவிட்டார்.. சமூகத்தில் நடக்கும் பிரச்னைகள், குறைகள், அவலங்களை பிக்பாஸ் மேடையிலேயே அப்பட்டமாக சொல்லக்கூடியவர் கமல்.. ஆனால் அதை சீரியஸாக சொல்லாமல், நக்கலாகவும், குத்தலாகவும், காமெடியாகவும், இடித்துரைத்தும் சொல்வது இவரது கூடுதல் பிளஸ்.
நிகழ்ச்சி
பிக்பாஸ் நிகழ்ச்சி எப்போதோ நடந்திருக்க வேண்டியது.. ஆனால் கொரோனா தாக்கம் காரணமாக தாமதமாகவே ஷூட்டிங் ஆரம்பமானது.. அதாவது சட்டமன்ற தேர்தலுக்கான வியூகங்களை ஒவ்வொரு கட்சியும் கையில் எடுக்கும் நேரத்தில்தான் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியும் தொடங்கியது.. இது கமலுக்கு கிடைத்த லட்டு சான்ஸ் ஆகும். ஒவ்வொரு புரமோவிலும் கமல் என்ன பேச போகிறார் என்ற ஆர்வம் மேலிடும்.. அதற்கு காரணம், போட்டியாளர்களை சாக்காக வைத்து கமல் சொல்லும் நச் வரிகள்தான்.
மய்யம்
இந்த முறை, ஒரு படி மேலேபோய், தன்னுடைய டிரஸ்ஸிலும் கமல் மய்யத்தை கொண்டு வந்தது திகைப்பாகவே இருந்தது.. ஒரு கருப்பு ஊதா நிறத்தில் கோட் சூட் ஒன்றை அணிந்து கொண்டு, அந்த சூட்டின் ஹாண்ட் ஸ்லீவில் மக்கள் நீதி மய்ய கட்சியின் கொடியின் சின்னத்தை வைத்திருந்தார்.. எதற்காக இப்படி சின்னத்துடன் வந்தார் என்று தெரியவில்லை..
ஓட்டு
ஆனால் அவர் அன்றைய நாள் முழுவதும் தனது கையை நீட்டி நீட்டி, ஆட்டி ஆட்டி பேசியபோதுதான் விஷயம் புரிந்தது. உடனே கமல் ரசிகர்களும் சோஷியல் மீடியாவில் இந்த டிரஸ், வீடியோக்களை பதிவிட்டதுடன் #எங்கள்ஓட்டுகமலுக்கு என்ற ஹேஷ்டேக்கை ராத்திரியோடு ராத்திரியாக ட்ரெண்ட் ஆக்கியும் விட்டனர்.. அதாவது, 3 மணி நேரம் சின்னத்துடன் ஒரு கட்சி தலைவர் டிவியில் ஷோ செய்தது போலதான் இது தென்பட்டது..
ஜெயலலிதா
ஆனால், கமல் செய்தது போலவேதான், மறைந்த ஜெயலலிதாவும் செய்தார்.. மக்கள் ஆழ்மனசில் ஒரு பொருளை பதிய செய்துவிட்டு, அதன்மூலம் அவர்களின் வாக்குகளை பெறுவதுதான் அந்த ஐடியா.. அப்படித்தான் எங்கும் எதிலும் இரட்டை இலையை திணித்தார்.. இது ஒரு தந்திரம்.. தவறில்லை என்றாலும், ஒரு விளையாட்டு நிகழ்ச்சியில் இது தேவையா என்பதுதான் பலரது கேள்வியாக இருந்தது.
மீட்டிங்
அதேபோல, கொரோனா தொற்று காரணமாக, கட்சி தலைவர்கள் யாருமே பிரச்சாரம் செய்யவோ, கூட்டம் போடவோ அனுமதி இல்லாத நிலையில், கமலுக்கு இந்த நிகழ்ச்சி இன்னொரு பிளஸ் ஆக அமைந்தது.. திமுக உட்பட கட்சி தலைவர்கள் வீடியோ காலில்தான் மீட்டிங்கை நடத்தி முடித்தனர்.. ஆனால், கமல் அப்படி இல்லை.. என்னென்னவெல்லாம் நினைத்தாரோ, அத்தனையையும் வெளியே கொண்டு வந்தார்.. உலகம் முழுக்க தன் கருத்துக்களை கொண்டு போய் சேர்த்தார்.. அதேசமயம், இது பிக்பாஸ் நிகழ்ச்சிக்கும் டிஆர்பிடியை கொண்டு வந்து சேர்த்து வர்த்தக ரீதியாக பயன் தந்தது.. மற்றொரு பக்கம் தன்னுடைய கட்சியையும் மக்கள் மத்தியில் பிரபலப்படுத்திவிட்டார்..
எம்ஜிஆர்
ஒருமுறை கமலிடமே இந்த கேள்வி கேட்கப்பட்டது.. அதற்கு அவர், "எங்க வீட்டுப்பிள்ளை படத்தில் எம்ஜிஆர், நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால்" என்று பாடுவார்.. அந்த பாட்டில் தன் கட்சிக்கொள்கையை பற்றி எம்ஜிஆர் சொல்லலையா? இத்தனைக்கும் அந்த படத்தை எம்ஜிஆர் தயாரிக்கவில்லை.. நாகிரெட்டி தயாரித்தது... அண்ணாதுரை தனது சினிமாவில், நாடகத்தில் அரசியல் பேசவில்லையா? அதுபோலத்தான் இதுவும்... எனக்கு கிடைத்த மேடைகளில் எனது கட்சியை மக்களிடம் கொண்டு செல்கிறேன். கொள்கையை கொண்டு செல்கிறேன்... இனி கிடைக்கிற ஒவ்வொரு மேடையிலும் இதை தான் செய்வேன்" என்று ஆணித்தரமாக சொன்னார்.
மாறுமோ?
இன்னொரு பக்கம், வாரம் ஒரு புத்தகத்தின் பெயரை சொல்லி, பிக்பாஸ் நேயர்களை வாசிக்க வைத்தது பாராட்டுக்குரிய விஷயமாகவே இருந்தது.. ஆனால், இவ்வளவும் செய்துவிட்டு போயுள்ளாரே கமல், அவ்வளவும் அவருக்கு வாக்காக மாறுமா? என்பதுதான் லட்சம் சந்தேகம்!