ராமநாதபுரத்தில் கால் வைக்கும் கமல்.. வரிந்து கட்டி வேலையில் குதித்த மய்யம்.. பீதியில் கட்சிகள்
ராமநாதபுரம் தொகுதியில் கமல்ஹாசன் போட்டியிட வாய்ப்பு என தகவல் கசிந்துள்ளன.
Recommended Video
சென்னை: வரப்போகிற தேர்தலில் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் ராமநாதபுரம் தொகுதியில் நிற்க போவதாக தகவல்கள் கசிந்துள்ளன.
கட்சி ஆரம்பித்த கமல் 40 தொகுதிகளிலும் தனித்து போட்டி என்று சொல்லியதுமே முதலில் கலக்கம் வந்தது திமுகவுக்குதான்!
புதிய கட்சி, கடைசி வரவு, அரசியல் குழந்தை என்று விமர்சிக்கப்பட்ட கமலுக்கு தனித்து போட்டியிடும் துணிச்சல் எங்கிருந்து வந்தது? 40 தொகுதிகளிலும் போட்டியிடுவது என்பது அவ்வளவு எளிதானதா? ஊழலே இல்லாத கட்சிகளுடன் கடைசிவரை கூட்டணி இல்லாமல் தேர்தலை எதிர்கொள்வது என்பது சாத்தியமானதா? என்ற கேள்விகள் எல்லாம் மக்களிடையே அனாயசயமாக எழுந்து செல்லக்கூடியவையே.
கிராம சபை
40 தொகுதிகளிலும் போட்டியிடும் துணிச்சலுக்கு முதல் காரணம், மக்களுக்கும் கமலுக்கும் இடையேயயான ஒருபுரிதல்தான். அந்த புரிதல் ரொம்ப நெருக்கமாகவே உள்ளதாம். கமலின் கிராம சபை என்பது பெயரளவுக்கு இல்லாமல் ஆழமாக வேரூன்றியே களம் கண்டது. மக்களின் நேரடி உணர்வு பதிவின் வெளிப்பாடுதான் இந்த துணிவை கமலுக்கு தந்திருக்கிறது.
முக்கிய அறிவிப்பு
இரண்டாவதாக, கமல் தனது முக்கிய அறிவிப்பு ஒன்றினை வரும் 24-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை திருநெல்வேலியில் நடைபெற இருக்கும் மாபெரும் பொதுக் கூட்டத்தில் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக தேர்தல் களத்தில் முதன்முதலாக களம் காண்பது குறித்து முக்கிய முடிவுகளை அறிவிக்கலாமென்பதால் இந்த எதிர்பார்ப்பு கூடியுள்ளது.
கிராமங்கள்
இதைதவிர ராமநாதபுரம் தொகுதியிலேயே கமலை போட்டியிடும்படி நிர்வாகிகள் வற்புறுத்தி வருகிறார்களாம். ஏனெனில் ராமநாதபுரம் என்பது நிறைய கிராமங்கள் சூழ்ந்துள்ள பகுதி என்பதால் கமல் இங்கு நிறையவே களத்தில் இறங்கி இருக்கிறார். இதை தவிர கமலின் சொந்த ஊரும்கூட.
சட்ட உதவிகள்
கமலின் தந்தை ஸ்ரீநிவாஸ் அய்யங்கார் ஒரு வழக்கறிஞராக இருந்தாலும்கூட அன்றைய காலங்களில் இலவசமாக சட்ட உதவிகள் உட்பட சமூக பணிகளை ராமநாதபுரம் பகுதிகளில் நிறைய செய்திருக்கிறார். இதனை இன்றளவும் மறக்காமல் இருக்கிறார்கள் தொகுதி மக்கள். இது எல்லாவற்றையும்விட நடிகர் என்ற பிம்பம் உயர்ந்து நிற்பதால், கமலை வெற்றி பெறாமல் விடபோவதில்லை என்கிறார்கள் நிர்வாகிகள்.
மய்ய உறுப்பினர்கள்
இதனால் ராமநாதபுரம் தொகுதியில் முதன்முறையாக முதலில் நிற்க வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் இப்போதே தொகுதி முழுவதும் உலக உருண்டை போன்று சுறுசுறுப்புடன் கட்சியினர் வரிஞ்சு கட்டிக் கொண்டு வாக்கு சேகரிக்கும் பணியை மறைமுகமாக செய்து வருகின்றனர் மய்ய உறுப்பினர்கள்.
அதிமுக, திமுக
கமல் ராமநாதபுரத்தில் நிற்பது ஒரு பக்கம் இருந்தாலும், வரும் தேர்தலில் ஓட்டுக்களை பிரிக்கும் சக்தியாக விளங்குவார் என்பதுதான் ஸ்ட்ராங்கான பேச்சாக இருக்கிறது. உதாரணமாக கமலுக்கு ஆயிரம் ஓட்டுகள் விழுகிறது என்று வைத்து கொண்டால், அந்த ஆயிரத்தில் எவ்வளவு ஓட்டுகள் திமுக, அதிமுகவினுடையது என்பதுதான் கேள்வியே.
சிதறடிப்பார்
ஒருவேளை திமுக ஓட்டு அதிகமாக இருந்தால் அதிமுகவுக்கு லாபம், அதிமுக ஓட்டு கமலுக்கு அதிகமாக விழுந்தால் திமுகவுக்கு லாபம். ராமநாதபுரம் என்றில்லாமல் ஒட்டுமொத்த தமிழகத்திலும் இதே நிலைமைதான். ஆக மொத்தம் வாக்குகளை சிதறடிக்கும் வல்லமை இன்று கமலுக்கு ஏற்பட்டுள்ளது இந்த தேர்தலில் பெரிய பிளஸ் பாயிண்ட்!
டி.ஆர்.பாலு
ஏற்கனவே ராமநாதபுரம் தொகுதியில் அதிமுக சார்பாக முன்னாள் அமைச்சர் ராஜ.கண்ணப்பன் நிறுத்தப்படலாம் என்று தெரிகிறது. திமுக வேட்பாளர் யார் என்பது உறுதியாகவில்லை என்றாலும், டி.ஆர். பாலு பெயர் அங்கு அடிபடுகிறது. அப்படி டி.ஆர்.பாலு ராமநாதபுரத்தில் நிறுத்ததப்பட்டால், திமுக-மநீம இடையே கடுமையான போட்டி இருக்கும் என்றே சொல்கிறார்கள். எப்படி பார்த்தாலும் கமலின் பெயர் ராமநாதபுரத்தில் அடிபட ஆரம்பித்துவிட்டதால் திமுக, அதிமுகவுக்கு கமல் டஃப் கொடுப்பார் என்ற கிலி இப்போதே ஏற்பட ஆரம்பித்து விட்டதாக கூறப்படுகிறது.