ஊழல் இல்லாத கட்சி எங்கிருக்கு.. தனித்து போட்டியிடுவதைத்தான் கமல் இப்படி சொல்கிறாரோ!
கம்யூனிஸ்ட் கட்சிகளுடன்தான் கமல் கூட்டணி வைக்க போகிறாரா?
Recommended Video
சென்னை: கமல்ஹாசன் சொல்றதை பார்த்தால், எப்பவுமே யார் கூடவும் கூட்டணியே வைக்க மாட்டார் போல இருக்கே!!
மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை ஆரம்பிப்பதற்கு முன்பே கமல்ஹாசனின் அரசியல் பேச்சுகள் விமர்சனங்களாக எழுந்தன. பல கருத்துக்கள் திரிக்கப்பட்டு சர்ச்சையாகின. பல கருத்துக்கள் கட்சிகளை சுட்டன.. காரணம், அத்தனையும் சுளீர் ரக விமர்சனங்கள்.
கட்சி ஆரம்பித்தவுடன் அதிமுகவை அதிகமாக வறுத்தெடுக்க ஆரம்பிக்கவும், ஒருவேளை கமல் திமுக ஆதரவாளர்தானோ என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால் திமுகவை அதிகமாக விமர்சிக்கவில்லை என்றாலும் அந்த கட்சியிடமிருந்து அவர் ஒதுங்கியே இருந்தார், இருக்கிறார்.
ஊழல் கட்சிகள்
கமல் கட்சியின் அடித்தளமே ஊழல் ஒழிப்புதான். அதை கொள்கையாக வைத்துதான் கட்சியை அறிமுகப்படுத்தினார். அப்படிப் பார்க்கும்போது தமிழகத்தில் விரல் விட்டு எண்ணக் கூடிய, அதற்கும் கூட வாய்ப்பே இல்லை. எந்தக் கட்சியுடனும் அவரால் சேரவே முடியாது. காரணம், அத்தனை கட்சிகள் மீதும் ஊழல் கறை படிந்தே உள்ளது.
கருணாநிதி சிலை திறப்பு
அதிமுகவை போல திமுக மீதும் ஊழல் கறை படிந்தே இருப்பதை கமல் உணராமல் இல்லை. இதனால் தன் மீது திமுக பிம்பம் விழுவதை கமல் சுத்தமாக விரும்பவில்லை. இதை உடைக்கவே கருணாநிதி சிலை திறப்பு விழாவிலும் பங்கெடுக்காமல் தவிர்த்தார்.
சந்தர்ப்பவாதம்
கட்சி ஆரம்பித்து ஒரு வருட காலம் ஆக போகிறது. ஊழலுக்கு எதிராகவே ஒவ்வொரு அடியையும் எடுத்து வைக்கும் கமல், இப்போது தேர்தல் என்றவுடன் திமுகவுடன் கை கோர்த்தால் அதைவிட சந்தர்ப்பவாதம் வேறு இருக்க முடியாது என்பதையும் உணர்ந்திருக்கிறார்.
ராகுல் மீது பிரியம்
இடையில் காங்கிரஸ் கட்சி மீது ஆர்வம் காட்ட தொடங்கினார். தேசிய அளவிலான அந்த கட்சி மீது படியாத ஊழல் கறையே இல்லை. அதை விட முக்கியமாக ஒரு இனத்தை அழித்த கட்சி என்ற மிகப் பெரிய அவப் பெயரை சுமந்து நிற்கிறது காங்கிரஸ். ஆனால் ராகுல்காந்தி மீது அபரிமிதமான பற்றை வைத்திருக்கிறார் கமல். ஒருவேளை ஊழல் கறை ராகுல் மீது இதுவரை படவில்லை என்பதனால்கூட இருக்கலாம்.
கமலின் முன்னோடி
மறுபக்கம் ஊழல் எதிர்ப்புப் போரில் ஈடுபட்டு மக்களின் மனதைக் கவர்ந்த அரவிந்த் கெஜ்ரிவால் மீது நிறைய மரியாதை வைத்துள்ளார் கமல். ஊழல் எதிர்ப்பு விவகாரத்தில் கமலின் முன்னோடி இவர்தான். கிட்டத்தட்ட இன்னொரு கெஜ்ரிவாலாக தமிழகத்தில் உருவெடுக்கும் திட்டம்தான் கமல் மனதில் உண்மையில் உள்ளது என்று கூட சொல்லலாம்.
கம்யூனிஸ்ட்டுகள்
தற்போதைய நிலையில் கமல் சொல்வதைப் போல ஊழல் படியாத கட்சி ஏதாவது இருக்கிறதா என்று பார்த்தால், தமிழகத்தில் இடதுசாரிகள் மட்டுமே அந்தத் தகுதியுடன் உள்ளனர். தமிழகத்தைப் பொறுத்தவரை கமலுக்கு தோதான கட்சி என்றால் அது கம்யூனிஸ்டுகள் மட்டுமே. கூட ஆம் ஆத்மியையும் சேர்க்கலாம். கமல் ஒரு இடதுசாரி என்பதால் மட்டுமல்ல, கட்சி ஆரம்பித்த முதல் நாள் மேடையை அலங்கரித்தவர்களில் பெரும்பாலானோர் கம்யூனிஸ்ட்கள்தான்.
தனித்து போட்டியா?
எனவே கமல்ஹாசனைப் பொறுத்தவரை கம்யூனிஸ்டுகள், ஆம் ஆத்மி போன்றோருடன்தான் கூட்டு சேரும் ஆப்ஷன்கள் இப்போதைக்கு உள்ளன எனவே கமல் தனித்துப் போட்டியிடும் திட்டத்தில் இருக்கிறாரா அல்லது தேர்தல் நெருங்கும் சமயத்தில் ஏதாவது அதிரடி காட்டுவாரா என்ற பெரும் எதிர்பார்ப்பும் உள்ளது.