உங்க பஞ்சாயத்து தலைவர் இருக்காரா.. கூப்பிடுங்க அவரை.. சென்னையிலிருந்து கமல் நடத்திய கிராம சபை!
வீடியோ கான்பரன்ஸ் மூலமாக கமல் கிராம சபை கூட்டங்களை நடத்தி வருகிறார்
சென்னை: ஒரு புறம் சட்டசபை கூட்டம் பரபரக்க.. இன்னொரு புறம் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் விறுவிறுக்க.. இதற்கு நடுவில் பட்டையை கிளப்பி கொண்டு கிராம சபை கூட்டத்தை நடத்தி வருகிறார் கமல்!
கிராம சபை என்பது நம் நாட்டில் எப்போதிலிருந்தோ இருக்கிறது. ஆனால் அதனை நடைமுறைப்படுத்த எந்த அரசுகளும் எந்த முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை. இந்த உள்ளாட்சி அமைப்புகளை யாருமே கையில் எடுக்கவில்லை, சரியாக பயன்படுத்தி கொள்ளவும் இல்லை.
இதைத்தான் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தி வருகிறார். இந்த நவீன விஞ்ஞான யுகத்தில், கிராமங்களை நோக்கி நகரங்கள் ஒரு நாள் வரப்போகிறது என்று கமல் சொல்லி வந்தார். அப்போது இதை கமல் சொன்னபோது யாருமே பெரிதாக எடுத்து கொள்ளவில்லை.
எதார்த்த கேள்வி
ஆரம்பத்தில் மாதிரி கிராம சபை கூட்டங்களுக்கும் கமல் நேரிலே சென்று விழிப்புணர்வு ஊட்டினார். நம்மால் எளிதாக அமல்படுத்தக்கூடிய ஒரு விஷயத்தை இன்னொருவர் வந்துதான் செய்து முடிக்க வேண்டும் என்று ஏன் எதிர்பார்க்க வேண்டும் என்று அன்று கமல் எதார்த்தம் நிறைந்த கேள்வியை எழுப்பினார்.
தலைவர்கள்
தற்போது கிராம சபை என்ற பெயர் பரவலாக தெரிய ஆரம்பித்துள்ளதுடன், அதன் அவசியமும் தெரிய ஆரம்பித்துள்ளது. இன்று சில முக்கிய தமிழக தலைவர்களே கமலின் பாணியான இந்த கிராம சபையை கையில் எடுத்து வருகின்றனர்.
வேண்டுகோள்
இன்று கமல், கிராம சபை கூட்டத்தை நடத்தி வருகிறார். இது சம்பந்தமாக ஏற்கனவே ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார் கமல். தமிழகத்தில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் கிராம சபை கூட்டம் நடக்க உள்ளது. இந்த கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி உறுப்பினர்கள் தவறாது கலந்து கொள்ள வேண்டும்" என்று வேண்டுகோள் விடுத்திருந்தார்.
வீடியோ கான்பரன்ஸ்
அதன்படி, 71 இடங்களில் மக்கள் நீதி மய்யம் சார்பில் கிராம சபைக் கூட்டம் இன்று நடந்து வருகிறது. இந்த கூட்டங்களில் சென்னையில் இருந்தபடி கமல்ஹாசன் கிராம சபைக் கூட்டங்களில் பங்கேற்றுள்ளார். வீடியோ கான்பரன்சிங் மூலம் கிராம சபைக் கூட்டங்களில் பங்கேற்ற கமல், பொதுமக்களுடன் உரையாடி வருகிறார். ஏற்கனவே தண்ணீர் பஞ்சத்தில் நொந்து போயுள்ள மக்கள் தங்கள் குமுறல்களை கொட்டி வருகிறார்கள்.
அறிவுறுத்தல்
பெரிய கட்சிகளே இதில் ஆர்வம் காட்டாத நிலையில், கிராம சபைக் கூட்டங்களில் பங்கேற்றுத் தங்கள் கருத்துக்களைத் தவறாமல் பதிவு செய்யுமாறு மய்ய நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தி இருந்தது மக்களை கவனிக்க வைத்துள்ளது. மண்ணை பாதிக்கும் பிரச்சனைகளான மீத்தேன், ஹைட்ரோ கார்பன் போன்ற பற்றி எரியும் பிரச்சினைகளில் கமல் ஒதுங்கி இருக்கிறார் என்றும் ஒரு பேச்சு எழுந்தநிலையில், இதை அனைத்தையும் கிராம சபை கூட்டங்கள் மூலம் ஒரே நாளில் சுக்குநூறாக உடைத்தெறிந்து விட்டார் கமல்.
நவீனம்
அசாத்தியமாக நினைக்கும் ஒரு விஷயத்தை சாத்தியமாக்கும் வலிமை கிராம சபைக்கு உண்டு என்பதை நினைவூட்டி அதற்கு வலு சேர்த்து வருகிறார் கமல். பழமை பொதிந்த கிராம சபையிலும், ஒரு நவீனத்தை புகுத்த கமலால் மட்டுமே சாத்தியம்!