ராமதாசுடன் கைகோர்ப்பாரா கமல்ஹாசன்... இருவரையும் இணைக்குமா மது எதிர்ப்பு முழக்கம்..?
சென்னை: தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கோரி வரும் பாமக நிறுவனர் ராமதாஸ் குரலுக்கு வலிமை சேர்க்கும் வகையில் ம.நீ.ம. தலைவர் கமல்ஹாசனும் அதே கோரிக்கையை எழுப்பியிருக்கிறார்.
மது எதிர்ப்பு கொள்கையில் பாட்டாளி மக்கள் கட்சியும், மக்கள் நீதி மய்யமும் ஒத்தக் கருத்துடைய நிலையில் இருப்பதால் எதிர்காலத்தில் இணைந்து செயல்படுவதற்கான வாய்ப்புகள் பற்றியும் ஆராய வேண்டியுள்ளது.
டாஸ்மாக் கடைகளால் பல குடும்பங்கள் சீரழியும் அவல நிலை உள்ளதாக கமலஹாசன் கவலை தெரிவித்துள்ளார்.
ரஜினிகாந்த் தமிழகத்தில் எழுச்சியை உருவாக்குவார்... சொல்வது யார் தெரியுமா..?
மது எதிர்ப்பு
தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கொண்டு வர வேண்டும் என நீண்டகாலமாக குரல் கொடுத்து வருகிறார் பாமக நிறுவனர் ராமதாஸ். புதிய மதுக்கடை திறப்புக்கு எதிராக பாமக மகளிர் அணியினர் முற்றுகைப் போராட்டம், கடைக்கு பூட்டுப் போடும் போராட்டம் என நடத்தி கடுமையான முறையில் எதிர்ப்புகளை பதிவு செய்தனர். மேலும், கட்சி சார்பில் நடைபெறும் பொதுக்கூட்டங்களிலும் மதுவினால் ஏற்படும் சீரழிவுகள் பற்றி ஒரு நிமிடமாவது ராமதாஸ் குறிப்பிட்டு பேசுவார்.
கொள்கையில் உறுதி
இதனிடையே தற்போது அதிமுக கூட்டணியில் உள்ளதால் பாமகவின் மது எதிர்ப்பு கொள்கை மங்கி வருவதாக விமர்சனகள் எழுந்தன. மேலும், இதைப்பற்றி அண்மையில் செய்தி தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், கூட்டணி வேறு கொள்கை வேறு எனக் கூறியதுடன் மது எதிர்ப்பு கொள்கையில் சமரசத்திற்கே இடமில்லை எனத் தெரிவித்திருந்தார். மதுக்கடைகள் வேண்டாம் என்பதே இப்போதும் பாமகவின் நிலைப்பாடு என்றும் ஊரடங்கில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டது தவறு எனவும் அரசுக்கு குட்டு வைத்தார்.
பூரண மதுவிலக்கு
இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கொண்டுவரப் பட வேண்டும் என்ற புதிய முழக்கத்தை எழுப்பியிருக்கிறார். செய்தி தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்துள்ள கேள்வி பதில் வடிவிலான வீடியோவில், மதுவால் பல குடும்பங்கள் சீரழிந்து வருவதாக கவலைத் தெரிவித்தார். டாஸ்மாக் கடைகளை நடத்துவதே தவறு அதிலும் வியாபாரம் குறையக்கூடாது என அந்த துறையின் அதிகாரிகள் ஊழியர்களை விரட்டுவது மிகப்பெரிய தவறு எனச் சுட்டிக்காட்டி உள்ளார்.
ஒத்தக் கருத்து
தற்போதைய நிலவரப்படி அதிமுக கூட்டணியில் பாமக தொடர்வது உறுதியாகி உள்ளது. ஆனால் அரசியலில் எதுவும் எப்போதும் நடக்கலாம் என்பது எழுதப்படாத விதி. அந்த வகையில் கமல்ஹாசனையும், ராமதாஸையும் பூரண மதுவிலக்கு முழக்கம் ஒரே மேடையில் அமர வைக்குமா என்பதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.