உயர்கல்வியில் காமசூத்ராவை கற்று கொடுக்க திட்டம்.? புதிய கல்விக் கொள்கையால் வெடித்த அடுத்த சர்ச்சை
சென்னை: மத்திய அரசின் புதிய தேசிய கல்விக் கொள்கையில் காமசூத்ராவை உயர்கல்வியில் கற்று கொடுக்க திட்டமிட்டுள்ளதாக புதிய சர்ச்சை வெடித்துள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் தென்னிந்தியா முழுவதையுமே பிரளயமாக மாற்றியது மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை வரைவு. மூன்றாவது மொழியாக இந்தி கற்பிக்கப்பட வேண்டும் என அந்த வரைவில் குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறி பல்வேறு போராட்டங்கள் வெடித்தன.
ஆனால் இதற்கு விளக்கமளித்த மத்திய அரசு, யார் மீதும் இந்தி திணிக்கப்படாது என கூறியது. ஆயினும் இந்த சர்ச்சை இன்னும் ஓய்ந்தபாடில்லை. அதற்குள்ளாகவே அடுத்த சர்ச்சை வெடித்துள்ளது.
436 பக்கங்களை கொண்ட புதிய தேசியக் கல்விக் கொள்கை வரைவில் தாராள கலைகள் என்ற தலைப்பு குறிப்பிடப்பட்டுள்ளதே, இந்த சந்தேகம் எழ காரணமாக அமைந்துள்ளதாக கல்வியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் பண்டைய காலத்தில் இருந்த பல்வேறு கலைகள் பற்றியும் புதிய கல்விக் கொள்கையில் கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது. யசோதரா எழுதிய ஜெயமங்களா என்ற புத்தகத்தில், 512 கலைகள் இருப்பதாக வரைவு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வாத்ஸாயயனரின் காமசூத்ரா என்ற புத்தகத்திற்கு உரை எழுதிய யசோதராவை முன்னுதாரணமாக காட்டியிருப்பது, இந்த சந்தேகத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளதாக கல்வியாளர்கள் கூறியுள்ளனர்.
இது பற்றி செய்தியாளரிடம் பேசிய தமிழ்நாடு உயர்கல்வி பாதுகாப்பை அமைப்பை சேர்ந்தவர்கள், சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ள புதிய கல்விக்கொள்கை 2019-ல் liberal arts என்ற வார்த்தையை அழுத்தமாக பயன்படுத்தியுள்ளனர். காமசூத்திரா என்பது முழுக்க முழுக்க பாலியல் குறித்து நுட்பங்கள், பாலியல் அறிவை வளர்த்தல் உள்ளிட்டவற்றிற்காக பிரபலமடைந்துள்ளது.
திருக்குறளுக்கு பரிமேலழகர் உரை எழுதியதை போல, இந்த காமசூத்திராவிற்கு 13-ம் நூற்றாண்டிலே யசோதரா என்பவர் ஜெயமங்களா என்றொரு உரை எழுதியிருக்கிறார்.
இதிலே 512 கலைகள் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்கள். புதிய கல்வி கொள்கையில் இந்த 512 கலைகள் எதை பற்றியது என்ற தெளிவு, கல்வி கொள்கையை தயாரித்தவர்களுக்கு உள்ளதா என்பது சந்தேகமாக இருப்பதாக கூறியுள்ளனர்.
காமசூத்திரத்தை உயர்கல்வி மாணவர்கள் படிக்க வேண்டும் என்பதை தான், இவர்கள் இதன் மூலமாக வலியுறுத்துகிறார்களா என்ற சந்தேகம் எழுகிறது என குறிப்பிட்டுள்ளனர். இவை எல்லாம் அடிப்படையிலேயே ஒருவன் படித்து விட்டால், 21-ம் நூற்றாண்டின் சவால்களை சந்தித்து சமாளித்து வாழ்வான் என கூறுவது விசித்திரமாக உள்ளது.
சமஸ்கிருதம் சார்ந்த புத்தகங்களை முன்னுதாரணமாக எடுத்திருப்பது, ஆரிய பண்பாட்டை புதிய கல்வி திட்டம் மூலம் தமிழகத்தில் மீண்டும் நிறுவுவதற்கான முயற்சியாக தெரிகிறது என கல்வியாளர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். திருக்குறள் போன்ற வாழ்வியல் நூல்களையோ சமகால ஆய்வுகளையோ எடுத்து கொள்ளாதது ஏன், என்றும் கல்வியாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
அதே போல புதிய கல்வி முறை நடைமுறைப்படுத்தப்பட்டால், ஏழைகளுக்கு நல்ல கல்வி கிடைக்காது என்பதும் கல்வியாளர்களின் கருத்தாக உள்ளது. தனியார் மயத்தை முன்னிறுத்தும் நடவடிக்கையாகவே புதிய கல்வி முறை இருக்கும் என்றும் அவர்கள் சாடியுள்ளனர்.