வைகாசி அனுஷத்தில் அவதரித்த மனித தெய்வம் மகா பெரியவாள் ஜெயந்தி
மகா பெரியவா என்று அனைத்து பக்த கோடிகளால் அன்புடன் அழைக்கப்படும் காஞ்சி ஸ்ரீகாமகோடி பீடத்தின் 68வது பீடாதிபதியான ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் 126வது ஜெயந்தி தினம் அதாவது அந்த மகா பெரியவா அவதரித்த தினம் இன்று பெரியவா பக்தர்களால் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
சென்னை: மஹா பெரியவர் என்ற சொல்லிற்குத் தகுதியானவர் காஞ்சி ஸ்ரீகாமகோடி பீடத்தின் 68வது பீடாதிபதியான ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமி. வைகாசி அனுசத்தில் அவதரித்த மகான். இன்றைய தினம் அவரது 126வது அவதார தினம் கொண்டாடப்படுகிறது.
காஞ்சி காமகோடி பீடத்தின் 68வது ஜகத்குருவாக இருந்து சிறப்பாக இறைத் தொண்டாற்றியவர் அவர். நூறு ஆண்டு காலம் வாழ்ந்து மக்களுக்கும் மகேசனுக்கும் தொண்டாற்றியவர். 1894ம் ஆண்டு மே மாதம் 20ம் தேதி வைகாசி அனுசம் நட்சத்திரத்தில் பிறந்த அவர், 1994ம் ஆண்டு ஜனவரி 8ம் தேதிவரை வாழ்ந்த அவர் 87 ஆண்டுகள் இறைப்பணி செய்திருக்கிறார். தன் நற்செயல்களாலும், இறைப்பணிகளாலும் லட்சக்கணக்கான மக்களின் இதயத்தைக் கவர்ந்திருக்கிறார்.
பலரது துயரங்களை போக்கியிருக்கிறார். துன்பங்களை நீக்கியிருக்கிறார். 1986ல் ஒரு ஏகாதசி ஞாயிற்றுக்கிழமை. காஞ்சி சங்கர மடத்தில் ஸ்ரீ மஹாபெரியவா பக்தர்களுக்கு தரிசனம் தந்து கொண்டிருந்தார். ஒரு ஓரத்தில், சுமார் ஐந்து வயது குழந்தையுடன் ஒரு பக்தர் அழுதபடியே நின்று கொண்டிருந்தார். அப்போது ஸ்ரீ மஹாபெரியவருடன், எப்போதும் கூடவே கைங்கர்யம் செய்துகொண்டிருக்கும், சந்திரமெளலி என்பவரும் திருச்சி. ஸ்ரீஸ்ரீகண்டன் என்பவரும் இருந்தனர்.
ஸ்ரீ மஹாபெரியவா ஸ்ரீகண்டனை அழைத்து, "கையில் குழந்தையுடன் ஒருவர் அழுதுகொண்டிருக்கிறாரே! ஏன் அழுகிறார்? என்று விசாரி" என்றார்கள். ஸ்ரீகண்டனும், அவரிடம் சென்று அவரது கவலைக்கான காரணத்தை, ஸ்ரீ மஹா பெரியவா கேட்டு வரச்சொன்ன தகவலைத் தெரிவித்தார்.
"ஐயா, என் கையில் இருப்பது ஐந்து வயது பெண் குழந்தை. உடல்நிலை சரியில்லை. டாக்டரிடம் காண்பித்தேன். குழந்தைக்கு இருதயத்தில் துவாரம் இருக்கிறது. ஆபரேஷன் செய்ய வேண்டும், இருப்பினும் கொஞ்சம் சிரமம் தான் என்றும் அவர் சொல்லி விட்டார். ஆபரேஷனுக்கு தேதியும் குறித்தாயிற்று. நம் பெரியவாளிடம் குழந்தையைக் காண்பித்து, அவரிடம் சரணாகதி அடைந்து விட்டால், குழந்தை குணமாகி விடும் என நம்பி வந்துள்ளேன். ஒருவேளை என் குழந்தைக்கு ஆபத்து என்றால், ஆபரேஷன் செய்து அது இறப்பதைவிட, பெரியவரின் பாதார விந்தங்களை அது அடையட்டுமே என கருதுகிறேன்" என்றார்.
இந்த விஷயத்தை ஸ்ரீகண்டன் ஸ்ரீ மஹா பெரியவரிடம் தெரிவித்தார். ஸ்ரீ மஹா பெரியவா உடனே குழந்தையைக் கொண்டுவரும்படிச் சொன்னார்கள். அதை ஆசீர்வதித்தார்கள். அருகிலிருந்த சந்திரமெளலியிடம் ஓர் மாம்பழத்தைக் கொடுத்து, இதில் சிறு துண்டை நறுக்கி குழந்தைக்குக் கொடுக்கச்சொல், சரியாகிவிடும். ஆபரேஷன் தேவையிருக்காது என்று சொல்லி அந்த பக்தரை ஊருக்கு அனுப்பி விட்டார்கள்.
அதன்பின், தன் குழந்தையை டாக்டர் குறிப்பிட்ட நாளில் அழைத்துச் சென்றார் அந்தக்குழந்தையின் தந்தை. டாக்டர்கள் குழந்தையைப் பரிசோதித்தபோது, ஆச்சர்யம் அடைந்தனர். "இருதயத்தில் துவாரமா! இந்தக்குழந்தைக்கா!! இல்லையே " என்றார்கள். அன்று இருந்த துவாரம் இன்று மறைந்தது எப்படி? என்று குழந்தையின் தந்தையிடம் கேட்டார்கள்.
அந்த குழந்தையின் தந்தை சொன்னதைக் கேட்டு டாக்டர்கள் ஆச்சர்யப்பட்டார்கள். பின், ஸ்ரீ மஹாபெரியவரிடம் வந்து நடந்ததைச்சொல்லி மகிழ்ச்சியுடன் ஆசி பெற்றுச் சென்றார்கள். இதன்பின் 1994ல் மஹாபெரியவா முக்தியடைந்து விட்டார்கள்.
2006ல் ஒரு வெள்ளிக்கிழமையன்று, ஒருவர் ஸ்ரீ மஹாபெரியவரின் அதிஷ்டானத்திற்கு வந்தார். அங்கு பூஜை செய்துகொண்டிருந்த சந்திரமெளலியிடம் திருமணப்பத்திரிகை ஒன்றைக்கொடுத்து, "ஸ்ரீ மஹா பெரியவாளின் அதிஷ்டானத்தில் அதை வைத்து, பிரஸாதம் தாருங்கள் எனக்கேட்டார்.
சந்திரமெளலியும் அவருக்கு மாம்பழம், துளசி, கற்கண்டு கொடுத்தார், வந்தவர் கண்களில் கண்ணீர். இவர் ஏன் அழுகின்றார்? ஒருவேளை புளிக்கிற மாம்பழத்தைக் கொடுத்து விட்டோம் என நினைத்து வருத்தப்படுகிறாரோ? என சந்திரமெளலி நினைத்து, அவரிடமே காரணம் கேட்டார்.
ஸ்வாமி, என்னை நினைவிருக்கிறதா? 20 ஆண்டுகளுக்கு முன் உங்களிடம் தான் ஸ்ரீ மஹாபெரியவா, ஒரு மாம்பழத்தைக் கொடுத்து, இருதய நோயால் பாதிக்கப்பட்ட என் மகளுக்குக் கொடுக்கச் சொல்லி குணமாக்கினார். அந்தக் குழந்தைக்குத்தான் இப்போது திருமணம். இன்றும் அதே போல மாம்பழத்தை நீங்கள் தருகிறீர்கள். இதை மஹாபெரியவா மீண்டும் உங்கள் மூலம் தரும் பிரசாதம் என்றே நினைக்கிறேன். குழந்தையை ஆசீர்வதியுங்கள் என்றார்.