சட்டசபையில் அத்திவரதர் பிரச்சனை... மு.க. ஸ்டாலின், முதல்வர் பழனிசாமி காரசார வாதம்
சென்னை: அத்திவரதர் தரிசனம் - கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
அத்திவரதர் உற்சவத்தில் பக்தர்கள் உயிரிழந்தது குறித்து, சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் சரமாரி கேள்விகளை எழுப்பினார். இதனால், விவாதம் நீண்டது.
அத்திவரதரை தரிசிக்க பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளதால் அங்கு போதுமான பாதுகாப்பு வசதிகள் உள்ளதா? என்றும், 4 பக்தர்கள் உயிரிழந்துள்ளனர், 31 பேர் மயக்கமடைந்துள்ள செய்தி அரசுக்கு வந்துள்ளதா? இல்லை எனவும் கேள்வி எழுப்பினார்.
அத்திவரதரை தரிசிக்க ஒரே நாளில் திரண்ட பெருங்கூட்டம்.. 4 பேர் பலி.. சோக சம்பவத்தின் பரபர பின்னணி!
நிவாரணம் வழங்க வேண்டும்
இதற்கு, பதிலளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, காஞ்சிபுரத்தில் அத்திவரதரை தரிசிக்க வந்தவர்கள் இறந்தது குறித்து விவரமான பதிலை பின்னர் அளிப்பதாக கூறினார். இதனைத் தொடர்ந்து பேசிய மு.க. ஸ்டாலின், 4 பேர் இறந்துள்ளதாக தகவல் வந்துள்ளது, இறந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
ஏராளமான பக்தர்கள்
பின்னர், பதிலளித்து பேசிய முதலமைச்சர், அத்திவரதரை தரிசிக்க, இவ்வளவு கூட்டத்தை எதிர்பார்க்கவில்லை; திருப்பதியில் கூட 75,000 பேர் தான் தினமும் வருகின்றனர். அத்திவரதரை நாள் ஒன்றுக்கு 1 முதல் ஒன்றரை லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர். உடல்நலம் குன்றியவர்கள் வரவேண்டாம் என ஆட்சியர் ஏற்கனவே அறிவுறுத்தியுள்ளார் என்றார்.
25 லட்சம் பேர்
மேலும், 1,200 மீட்டர் தொலைவுக்கு தற்காலிக பந்தல் அமைக்கப்பட்டுள்ளது என்று கூறிய முதலமைச்சர் பழனிசாமி, நேற்று வரை 25 லட்சம் பேர் அத்திவரதரை தரிசித்துள்ளனர், இன்று மட்டும் மாலை வரை 1.7 லட்சம் பக்தர்கள் வருகை தந்துள்ளனர் என்றும் குறிப்பிட்டார்.
சிறப்பு ஏற்பாடு
அத்திவரதரை தரிசிக்க, பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது என்றும், 10 சிறப்பு மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு, 200 மருத்துவர்கள் சுழற்சி முறையில் பணியில் ஈடுபட்டுள்ளனர் எனவும் தெரிவித்தார்.
தலா ரூ.1 லட்சம்
அத்திவரதர் வைபவத்தில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்த 4 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரண உதவி வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.